Saturday, February 18, 2012

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 6

ஜின்களின் ஆற்றல்


ஜின்கள் மனிதர்களை விட பன்மடங்கு ஆற்றல் உள்ள படைப்பாகும். மனிதனால் செய்ய முடியாத பெரும் பெரும் காரியங்களை ஜின்கள் சர்வசாதாரணமாக செய்து முடிக்கவல்லவை.


கண் மூடி திறப்பதற்குள் நெடு தொலைவில் உள்ள இடத்திற்குச் சென்று பொருளை எடுத்து வரக்கூடிய ஆற்றல் ஜின்களுக்கு உண்டு. இந்தப் பணியை சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்கள் செய்து கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான்.


"பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?'' என்று (ஸுலைமான்) கேட்டார்.

"உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்'' என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.

கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் "நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?'' என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன். அல்குர்ஆன் (27 : 38)



பிரம்மாண்டமான கட்டிடங்களையும் சுலைமான் நபிக்குத் தேவையான பொருட்களையும் வியக்கத்க்க விதத்தில் ஜின்கள் செய்துகொடுத்தது. கடலில் மூழ்கி முத்தெடுக்கும் சிரமமான பணியையும் ஜின்கள் செய்தன.


சுலைமான் விரும்பிய போர்க்கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக ஜின்கள் செய்தன. அல்குர்ஆன் (34 : 13)


ஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.  அல்குர்ஆன் (21 : 82)


ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம். "இது நமது அருட்கொடை! கணக்கின்றி மற்றவருக்குக் கொடுக்கலாம்! அல்லது நீரே வைத்துக் கொள்ளலாம்!'' (என்று கூறினோம்.)  அல்குர்ஆன் (38 : 37)



ஜின்களின் விண்ணுலகப் பயணம்


வாகனங்களின் துனையின்றி விண்ணில் வானவர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் சென்று வருகின்ற ஆற்றலை ஜின்கள் பெற்றிருந்தன.

வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.  அல்குர்ஆன் (72 : 8)



விண்கலங்களின் துணையுடன் வானம் பூமியின் எல்லையைக் கடந்து செல்லும் வாய்ப்பை விஞ்ஞான வளர்ச்சியால் இன்று மனிதன் பெற்றுக்கொண்டான். ஆனால் ஜின்களோ விண்கலங்களின் உதவி இல்லாமல் வெறுமனே விண்ணுலக பயனத்தை மேற்கொள்ளும் ஆற்றலை பெற்றிருந்தன.


மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள். அல்குர்ஆன் (55 : 33)


ஒட்டுக்கேட்ட ஜின்கள்


பின்வரும் வசனங்களும் ஹதீஸ்களும் வானுலக ஆட்சியைப் பற்றிக் கூறுகின்றன. வானவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பற்றிப் பேசும் போது, ஜின்கள் வானத்தின் அருகே சென்று அங்கு பேசுவதை செவியுறக் கூடியவர்களாக இருந்தனர். இறைவனும் இதைத் தடுக்காமல் இருந்தான்.


நபிகள் நாயகம் அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்ட பிறகு இவ்வாறு ஒட்டுக் கேட்பதை விட்டும், வானுலக இரகசியத்தை செவியேற்பதை விட்டும் ஷைத்தான்கள் தடுக்கப்பட்டனர்.


இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.  அல்குர்ஆன் (26 : 210)"


வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.  அல்குர்ஆன் (72 : 8)


ஜின்கள் ஒட்டுக்கேட்பதை விட்டும் தடுக்கப்பட்டதால் மறைவான விஷயங்கள் எதுவும் அவர்களால் அறிந்துகொள்ள முடியாது. இதை ஜின்களே கூறுகின்றன.


பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர் வழியை நாடியிருக்கிறானா? என்பதை அறிய மாட்டோம்.  அல்குர்ஆன் (72 : 10)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் "உக்காழ்' எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்களைத் தடுக்கப் பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்கüடம்) திரும்பி வந்தன. அப்போது தலைவர்கள், "உங்களுக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், "வானகத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டு விட்டது; எங்கள் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன'' என்று பதிலளித்தனர். "புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்கவேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்துவிட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்'' என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும்பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்தநிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.


"திஹாமா' எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்தபோது "உக்காழ்' சந்தையைநோக்கிச் சென்றுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் "நக்லா' எனுமிடத்தில்தம் தோழர்களுக்கு "ஃபஜ்ரு'த் தொழுகையை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார்கள்.அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள்கேட்ட போது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) "வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்'' என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் சென்று, "எங்கள் கூட்டத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர் வழியைக் காட்டுகின்றது. எனவே நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒருபோதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்'' என்று கூறினர். (இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, "(நபியே!) நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியேற்றனர்...'' என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருளினான்.


ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி "வஹி'யின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்  : புகாரி (4921)


மேலுள்ள ஆதாரங்கள் ஒட்டுக்கேட்பதை விட்டும் ஜின்கள் தடுக்கப்பட்டுவிட்டனர் என்றுதெளிவாக எடுத்துரைக்கிறது.


ஜின்களும் குறிகாரர்களும்


வானுலகத்தில் பேசப்படும் விஷயங்களை சர்வ சாதாரணமாக செவியேற்பதை விட்டும் ஜின்கள்தடுக்கப்பட்டுவிட்டனர். என்றாலும் ஒட்டுக்கேட்க நினைக்கும் ஜின் கடும் போராட்டத்திற்கு மத்தியில் ஓரிரண்டு விஷயங்களை ஒட்டுக்கேட்டு குறிகாரனுடைய செவிக்கு சேர்த்துவிடுகிறது.


இதனால் தான் குறிகாரர்களின் கூற்றில் 99 பொய்கள் இருந்தாலும் சில நேரத்தில் ஒரு உண்மை வெளிப்படுகிறது. இந்த ஒரு உண்மையை வைத்துத் தான் அவன் கூறுகின்ற அனைத்தும் உண்மை என்று பாமர மக்கள் ஏமாறுகிறார்கள்.


ஓரிரு விஷயங்களை ஜின்களால் ஒட்டுக்கேட்க முடியும் என்று பின்வரும் வசனங்கள் கூறுகிறது.


முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம். கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் பாதுகாப்பாக (அவற்றை ஆக்கினோம்). (வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினரிடமிருந்து (ஓரிரு சொற்களை) ஒட்டுக் கேட்பவனைத் தவிர அவர்கள் செவியுற முடியாது. விரட்டப்படுவதற்காக ஒவ்வொரு பகுதியிலிருந்து அவர்கள் மீது எறியப்படும். அவனைப் பிரகாசமான தீப்பந்தம் விரட்டும். அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு. அல்குர்ஆன் (37 : 8)


விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் ஒட்டுக் கேட்பவனைத் தவிர மற்றவர்கள் அதைநெருங்காதவாறு பாதுகாத்துள்ளோம். அவனை ஒளி வீசும் தீப்பந்தம் விரட்டும். அல்குர்ஆன் (15 : 17)


ஒட்டுக்கேட்ட ஜின்கள் வேறு ஜின்களுக்கு தகவலை கடத்துவதற்கு முன்போ அல்லது தகவலை கொண்டு சென்ற பிறகோ தீப்பந்தத்தால் அழிக்கப்படுகின்றன. ஒட்டுக்கேட்ட ஜின் தகவலைகடத்திய பிறகு அழிக்கப்படும் போது தான் குறிகாரனிற்கு தகவல் வந்ததைடகிறது. தகவலைகடத்துவதற்கு முன்பே அழிக்கப்பட்டுவிட்டால் அந்த செய்தி குறிகாரனை வந்தடைவதில்லை. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்துகொள்ளலாம். 


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில்தீர்மானித்துவிட்டால், வானவர்கள் இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாகத் தம் சிறகுகளை அடித்துக்கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை,) பாறை மேல் சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள். அப்போது வானவர்கள் பீதிக்குள்ளகிறார்கள்.) பின்னர், அவர்கüன் இதயங்களிலிருந்து பீதி அகற்றப்படும்போது (அல்லாஹ்விற்கு நெருக்கமான வானவர்கüடம்) "நம் இறைவன் என்ன சொன்னான்?'' என்று வினவுகின்றார்கள்.


அதற்கு அவர்கள் வினவியோரிடம், "(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான் -அவன் உயர்ந்தவன்; பெரியவன்''- என்று கூறுவர். உடனே அந்த உரையாடலை ஒட்டுக் கேட்பவர்களும் (அவர்களிடமிருந்து) ஒட்டுக் கேட்பவர்களும் ஒருவர் மற்றவர் மேலே இவ்வாறு இருந்து கொண்டு செவியேற்று விடுகின்றனர்.


இதைக் கூறும்போது (அறிவிப்பாளர்) சுஃப்யான் (ரஹ்) அவர்கள், தம் விரல்களைச் சாய்த்து அவற்றுக்கிடையே பிரித்துக்காட்டி (ஒன்றன் மீது ஒன்றை அடுக்கி) விளக்கிக் காட்டினார்கள்.


ஆக, முதலில் ஒட்டுக் கேட்டவர் அந்த உரையாடலைத் தனக்குக் கீழேயிருப்பவரிடமும், பிறகு அவர் தமக்குக் கீழேயிருப்பவரிடமும், இறுதியில் (கேட்டவர்) சூனியக்காரனின் அல்லது குறிசொல்பவனின் நாவில் போட்டுவிடுகின்றார்கள்.


சில நேரங்களில் அந்த உரையாடலை அடுத்தவரிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே (முதலில்ஒட்டுக்கேட்டவரைத்) தீச் சுவாலை சென்றடைந்து (கரித்து)விடுவதுண்டு. இன்னும் சில நேரங்கüல் தீச் சுவாலை சென்றடைவதற்கு முன்பே அந்த உரையாடலை (அடுத்தவரிடம்) சேர்த்துவிடுவதுமுண்டு. (இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக பூமியிலுள்ள குறிகாரன் வரை அது போய்ச்சேர்கிறது.) அவன் அதனுடன் நூறு பொய்களை(க் கலந்து மக்களிடம்) பேசுகின்றான். அப்போது (இதைக் கேட்கும் மக்கüடையே) இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென அவர் (குறிகாரர்) நம்மிடம் (முன்னறிவிப்பாக) சொல்லிவிட்டிருக்கவில்லையா?'' என்று பேசப்படும். இப்போது வானத்திலிருந்து செவியேற்கப்பட்ட அந்த வார்த்தையினால் (குறி சொல்லும்) அவர் உண்மை சொல்லிவிட்டதாகக் கருதப்படுவார். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி (4800)


ஜின்கள் ஓரிரு விஷயங்களை ஒட்டுக் கேட்பது கூட மனிதர்களை சோதிப்பதற்காகவே இறைவனால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. குறிகாரர்களிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பினால் நமது நல்லறங்கள் அழிந்துபோய்விடும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. அறிவிப்பவர் ; ஸஃபிய்யா (ரலி) நூல் : முஸ்லிம் (4488)


ஜின்களை வசப்படுத்த முடியுமா?


ஜின்களை வசப்படுத்த முடியும் என்று கூறி பலர் பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள். நாம் நினைக்கின்ற காரியங்களை ஜின்களால் செய்து கொள்ள முடியும் என்ற தவறான எண்ணம் தான் மக்கள் ஏமாறுவதற்குக் காரணமாகும்.


இறைவன் நமக்கு வழங்கிய அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார்த்தால் ஜின்களை மனிதனால்ஒருபோதும் வசப்படுத்த முடியவே முடியாது என்பதை சந்தேகமற புரியலாம்.


ஜின்கள் என்பவர்கள் மிருகங்களை போன்று பகுத்தறிவு வழங்கப்படாதவர்கள் இல்லை.மனிதர்களைப் போன்று பகுத்தறிவு வழங்கப்பட்டவர்களாவர். மனித ஆற்றலோடு ஜின்களுக்கு வழங்கப்பட்ட ஆற்றலை ஒப்பிட்டுப் பார்த்தால் ஜின்களின் ஆற்றல் பன்மடங்கு உயர்ந்ததும் வியக்கத்தக்கதுமாகும்.


மனிதனை விட வலுமையான படைப்பான ஜின்களை பலவீனமான மனிதனால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பதை யோசித்தால் ஜின்களை வசப்படுத்துவதாக கூறுவது வடிகட்டிய பொய் என்பதை அறியலாம்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner