Wednesday, December 17, 2014

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 8

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

 அதிக எண்ணிக்கை ஆதாரமாகாது


ஆயிஷாவைத் தவிர்த்து நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் சாலிமிற்கு மட்டும் உரியது என்று கூறுவதால் அதிகமானவர்கள் சொல்லுகின்ற கருத்தையே ஏற்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விளக்கத்தைத் தருகிறார்கள். இவர்கள் முக்கியமான இரண்டு விஷயங்களை இங்கு கவனிக்க மறந்து விட்டார்கள்.

1.    ஆயிஷா (ரலி) அவர்கள் இச்சட்டத்தை தன்னுடைய யூகமாகச் சொல்லாமல் இது தான் நபிவழி என்று உறுதி செய்கிறார்கள். எனவே இங்கு அதிகமானவர்கள் என்ற பேச்சிற்கே இடமில்லை.

2.    ஆயிஷா (ரலி) அவர்களும் மற்ற மனைவிமார்கள் அனைவரும் ஹதீஸைப் பற்றிய ஞானத்தில் சமமான அந்தஸ்து உடையவர்கள் என்றால் இந்த வாதத்தை முன் வைக்கலாம். ஆனால் விஷயம் அப்படியல்ல. நபி (ஸல்) அவர்களின் ஏனைய மனைவிமார்களை விட ஆயிஷா (ரலி) அவர்கள் மார்க்க விஷயத்தில் மிகச்சிறந்த தனித்துவத்தைப் பெற்றிருந்தார்கள்.


நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் ஹதீஸை அறிந்திருக்காத காரணத்தால் ஒரு தவறான முடிவுக்குச் செல்லும் போது நபி (ஸல்) அவர்களின் கூற்றைச் சுட்டிக்காட்டி அது தவறு என்பதை உணர்த்தும் அளவிற்கு மார்க்க ஞானம் கொடுக்கப்பட்டவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள். இதற்குப் பின்வரும் சம்பவம் சான்றாக உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது அவர்களின் மனைவிமார்கள் உஸ்மான் (ரலி) அவர்களை அபூபக்கர் (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்து (அல்லாஹ்வின் தூதரிடமிருந்து) தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கேட்க விரும்பினர். அப்போது நான் (அவர்களைப் பார்த்து) (இறைத்தூதரான) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லவில்லையா? என்று கேட்டேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்

நூல் : புகாரி (6730)


நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் அதிக ஹதீஸை அறிவித்தவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களே. சஹாபாக்கள் யாருக்கும் தெரியாத சட்டங்களை ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸைக் கூறி விளக்கியுள்ளார்கள். அபூஹுரைரா, உன்ர், இப்னு உமர் போன்ற பெரும் சஹாபாக்கள் அறிவித்த ஹதீஸ்களில் குறையைக் கண்டு பிடித்து சரி செய்தவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஹதீஸைச் சொல்லும் போது அதில் குறுக்கு விசாரணை செய்து துல்லியமாக விளங்கிக் கொண்டவர்கள். இவ்வளவு பெரிய மேதை சாலிமுடைய சம்பவம் பொதுவானது என்று கூறியதாக வரும் போது அதைப் புறக்கணித்து விட்டு அதிகமான ஆட்கள் சொல்கிறார்கள் என்ற வாதத்தை எழுப்புவது எவ்வளவு பெரிய அறிவீனம்!

நமது விளக்கம் : 2


சாலிம் சம்பவத்தில் உள்ள விகாரத்தைக் குறைப்பதற்கு சஹ்லா (ரலி) அவர்கள் சாலிமிற்கு பாலைக் கறந்து கொடுத்திருக்கலாம் என்று அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள் என்ற வாதத்தை எடுத்து வைத்தார்கள். இந்த விளக்கமும் இந்த சம்பவத்தோடு பல விதங்களில் பொருந்தவில்லை.

ஹதீஸில் அர்ளியீஹி (சாலிமிற்கு பால்புகட்டு) என்ற அரபி வாசகம் இடம் பெற்றுள்ளது. மார்பகத்தில் வாய் வைத்துக் குடிப்பதற்குத் தான் இந்த வார்த்தை ஏராளமான ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எந்தத் தாயும் தன் குழந்தைக்கு நேரடியாக பால் கொடுப்பாலே தவிர கறந்து கொடுக்க மாட்டாள். கறந்து கொடுப்பதற்கான அவசியமும் வராது. கறந்து கொடுப்பதற்கும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் என்று வாதிடுபவர்கள் தங்கள் வாதத்திற்கு ஏதாவது ஒரு ஹதீஸையாவது அல்லது குறைந்தது அகராதியிலாவது ஆதாரம் காட்டியிருக்க வேண்டும்.

நேரடியாகக் குடிப்பதற்குத் தான் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள் என்று அறிந்து கொண்டே இல்லாத அர்த்தத்தைக் கூறி விகாரமான இந்தச் செய்தியில் உள்ள குறைகளை மறைக்கப் பார்க்கிறார்கள். நேரடியாகக் கொடுப்பதையே இந்த வார்த்தை குறிக்கும் என்பதற்கு உதாரணமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் கொள்ளலாம்.

ஹாமிதிய்யா குலத்தைச் சார்ந்த பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் விபச்சாரம் செய்து விட்டேன். (தண்டனை கொடுத்து) என்னைத் தூய்மைப்படுத்துங்கள் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்னை (தண்டனை கொடுக்காமல்) அனுப்பி விட்டார்கள். மறு நாள் அப்பெண் வந்து அல்லாஹ்வின் தூதரே என்னை ஏன் அனுப்புகிறீர்கள்? மாயிஸை (தண்டனை கொடுக்காமல்) அனுப்பியதைப் போல் என்னை அனுப்ப நினைக்கிறீர்கள் போலும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் (விபச்சாரத்தினால்) கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் (இப்போதும்) தண்டனையை நிறைவேற்ற முடியாது. குழந்தையை பெற்றப் பின் வா என்று கூறினார்கள். குழந்தையைப் பெற்றவுடன் அப்பெண் குழந்தையுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இதை நான் பெற்றெடுத்து விட்டேன் என்று கூறினார். இக்குழந்தைக்கு பால்குடியை மறக்கடிக்கும் வரை பால் புகட்டிவிட்டு (பின்பு) வா என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி) அவர்கள்

நூல் : முஸ்லிம் (3500)

சாலிமுடைய ஹதீஸில் இடம்பெற்ற அர்ளியீஹி என்ற அதே வாசகம் இங்கேயும் வந்துள்ளது. இந்த இடத்திலே குழந்தைக்கு இரண்டு வருடம் கறந்து பால் கொடுத்து விட்டு வா என்று இவர்கள் அர்த்தம் செய்வார்களா?

கறந்து கொடுத்தார்கள் என்ற விளக்கத்தைக் கூறிய அறிஞர் எந்த ஹதீஸையும் இதற்கு ஆதாரமாகக் காட்டாமல் கறந்து கொடுத்திருக்கக் கூடும் என்று யூகமாகத் தான் கூறியுள்ளார்.

شرح النووي على مسلم  جزء 10 - صفحة 31 

قال القاضي لعلها حلبته ثم شربه من غير أن يمس ثديها ولا التقت بشرتاهما

காலி (இயாள்) கூறுகிறார் : சஹ்லா அவர்கள் சாலிமிற்கு பாலைக் கறந்து கொடுத்திருக்கக் கூடும். சாலிம் சஹ்லாவின் மார்பகத்தைத் தொடாமலும் அவ்விருவரின் தோல் உரசாமலும் சாலிம் அப்பாலைப் பருகியிருக்கக் கூடும்.

மார்க்கத்தில் யூகத்தைப் புகுத்துகிறார்கள் என்று கர்ஜிப்பவர்கள் இந்த யூகத்தை ஆதாரமாக வைப்பது பெரும் தவறாகும்.

பால்குடி உறவு ஏற்படுவதற்கு எப்படி இரண்டு வருட காலம் நிபந்தனையாக இருக்கிறதோ அது போல் தாயின் மார்பகத்தில் குழந்தை வாய் வைத்துக் குடிப்பதும் ஒரு முக்கியமான நிபந்தனை. கறந்து கொடுத்தார்கள் என்ற வாதத்தை எழுப்புபவர்கள் கூட கறந்து கொடுத்தால் பால்குடி உறவு ஏற்படாது என்ற கருத்தையே கொண்டிருக்கிறார்கள். சாலிமுடைய சம்பவத்தில் மாத்திரம் பல்டி அடித்து விடுகிறார்கள்.

இந்த ஒரு சம்பவத்தைச் சரிகாணப் போய் குர்ஆன் வசனத்திற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் எதிரான பல கருத்தைக் கூற வேண்டிய மோசமான நிலையை இவர்கள் அடைந்திருக்கிறார்கள். மார்பகத்திலே உறிஞ்சிக் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்கு பால் புகட்டுவதினாலே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (இவ்வாறு) பால்புகட்டுவது பால்குடிகாலம் (2 வருடம் முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)

நூல் : திர்மிதி (1072)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (ஒரு குழந்தை செவிலித் தாயிடம்) ஒரு தடவையோ இரு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (அவ்விருவருக்குமிடையே) பால்குடி உறவு ஏற்பட்டு விடாது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (2869)

இதே சம்பவம் தப்ரானீயிலும் இடம் பெற்றுள்ளது. இதன் வாசக அமைப்பு மார்பகத்தில் பால் புகட்டும் கருத்தை ஒளிவு மறைவின்றி தெளிவாக உணர்த்துகிறது.

நான் (முழுமையான) ஆடையை அணிந்திருக்காத போது அபூ ஹுதைஃபாவின் பொறுப்பில் இருந்த சாலிம் என்னிடத்தில் வந்து செல்பவராக இருந்தார். இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் நான் கூறினேன். அதற்கு அவர்கள் (உங்களிடத்தில்) அவரை உறிஞ்சுப் பால்குடிக்க வையுங்கள் அவருக்கு நீங்கள் பால்குடி அன்னையாகி விடுவீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : சஹ்லா (ரலி)

நூல் : அல்முஃஜமுல் அவ்சத் (7178) பாகம் : 7 பக்கம் : 168

மஸ்ஸத் என்ற சொல் நேரடியாக உறிஞ்சுப் பால் குடிப்பதற்குச் சொல்லப்படும். இந்த வார்த்தை தான் இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

சஹ்லா (ரலி) அவர்களிடத்தில் பால்புகட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது சஹ்லா (ரலி) அவர்கள் அவர் பெரிய மனிதராக இருக்க நான் எப்படி அவருக்குப் பால் புகட்டுவேன்? என்று ஆட்சேபனை செய்ததாகவும் இதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் சிரித்ததாகவும் முஸ்லிமில் 2878 வது செய்தியில் பதிவாகியுள்ளது. தாடி உள்ளவராக சாலிம் உள்ளாரே என்று கேட்டதாக முஸ்லிமில் 2882 வது செய்தியில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கறந்து கொடுக்கச் சொல்லியிருந்தால் சஹ்லா (ரலி) அவர்கள் பெரிய மனிதராக உள்ளாரே? தாடியுள்ளவாக இருக்கிறாரே? நான் எப்படி பால் புகட்டுவேன்? என்று ஏன் கேள்வி கேட்க வேண்டும்? கறந்து கொடுக்கச் சொல்லியிருந்தால் சஹ்லா (ரலி) அவர்கள் இப்படி கேள்வி கேட்க மாட்டார்கள். இதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் சிரித்திருக்க மாட்டார்கள்.

இந்த ஹதீஸின் முன் பின் வார்த்தைகளைக் கவனிக்காமல் ஒன்றுக்கும் உதவாத விளக்கங்களைக் கூறி இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்னு அபீமுலைக்கா என்பவர் இந்த ஹதீஸை அறிவிக்கும் நபர்களில் ஒருவர். இவருக்கு இந்த ஹதீஸை காசிம் என்பவர் அறிவித்துள்ளார். இப்னு அபீமுலைக்கா இந்த ஹதீஸை அறிவிக்கப் பயந்து ஒரு வருடம் வரை இந்த ஹதீஸை யாருக்கும் சொல்லாமலேயே இருந்துள்ளார். பிறகு இந்தச் செய்தியை தனக்கு அறிவித்த காசிமைச் சந்தித்து விஷயத்தைக் கூறிய போது காசிம் அவர்கள் இப்னு அபீமுலைக்காவிடம் பயப்படாதே நான் உனக்கு இந்தச் செய்தியைச் சொன்னதாக மக்களிடம் அறிவிப்புச் செய் என்று கூறினார்கள். இந்தத் தகவல் முஸ்லிமில் 2880 வது எண்ணில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளருக்கே இந்தச் செய்தியைச் சொல்வதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.. இந்த ஹதீஸ் கறந்து கொடுப்பதைப் பற்றி பேசினால் இப்னு அபீமுலைக்கா ஏன் இதை அறிவிப்பதற்குப் பயப்பட வேண்டும்? சாலிமிற்கு நேரடியாகப் பால்புகட்டும் படி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மக்களுக்கு சொன்னால் மக்கள் தன்னை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயம் தான் அவரை இதைச் சொல்லவிடாமல் தடுத்துள்ளது.


சுயநலம்


இந்தச் செய்தியைச் சரிகாணுபவர்கள் தங்களுடைய மனைவிமார்களிடத்தில் ஒரு அன்னிய ஆண் இது போன்று பாலருந்துவதை விரும்புவார்களா? அதைச் செயல்படுத்துவார்களா? என்று நாம் சவால் விடுகிறோம். அபூ ஹுதைஃபா இதற்குச் சம்மதித்தார் என்று வாய் கூசாமல் இவர்கள் சொல்லி விடுகிறார்கள். ஆனால் இச்சட்டத்தை தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த இவர்களின் உள்ளம் எள்ளவும் இடம் கொடுப்பதில்லை.

ஆகுமான ஒன்றைச் செய்யவும் செய்யாமல் இருக்கவும் அனுமதி இருக்கும் போது செய்வீர்களா? என்று கேட்பது அறிவீனம் என்று பேசி தப்பித்துச் செல்லப் பார்க்கிறார்கள்.

ஆகுமான விஷயத்தைச் செய்யவும் செய்யாமல் இருக்கவும் அனுமதி இருக்கிறது என்பதை நாம் மறுக்கவில்லை. நம்முடைய கேள்வி எதுவென்றால் மார்க்கத்தில் ஒரு விஷயம் ஆகுமானதாக இருந்தால் அதைச் செய்யக் கூடியவர்களும் இருப்பார்கள். அதைச் செய்யாதவர்களும் இருப்பார்கள். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் எவராலும் ஏற்று நடத்த முடியாத வகையில் கண்டிப்பாக இருக்காது.

சாலிமிற்கு கூறப்பட்ட சட்டம் அனுமதிக்கப்பட்ட காரியம் என்று இவர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் இதைச் செயல்படுத்தாதவர்கள் பலர் இருக்கும் போது செயல்படுத்துபவர்கள் யாராவது உள்ளார்களா? அனுமதிக்கப்பட்ட இந்தச் காரியம் ஏன் யாராலும் செயல்படுத்த முடியாத வகையில் அமைந்துள்ளது? என்பதே நமது கேள்வி.

உங்களுடைய உள்ளமும் மக்கள் அனைவரின் உள்ளமும் ஏற்றுக் கொள்ளாத இந்தச் சட்டம் எப்படி அனுமதிக்கப்பட்ட காரியமாக இருக்கும்?. மனிதன் சுயநலம் கொண்டவன். பிறருக்கென்றால் ஒரு மாதிரியாகவும் தனக்கென்றால் இன்னொரு விதமாகவும் நடந்து கொள்பவன்.

இந்தக் காரணத்தினால் தான் சஹ்லா (ரலி) அவர்களிடத்தில் சாலிம் பாலருந்த அபூ ஹுதைஃபா ஒத்துக் கொண்டார் என்று கூறும் இவர்களைப் பார்த்து அப்படியானால் உங்கள் மனைவியிடத்தில் ஒரு அன்னிய ஆண் பாலருந்த ஒத்துக் கொள்வீர்களா? என்று கேட்டோம்.

மோசமான கருத்தைக் கூறுபவர்களிடத்தில் இது போன்ற கேள்வியைக் கேட்டால் தான் தாங்கள் கூறும் கூற்று தவறு என்பதை உணர்வார்கள். இந்த யுக்தியை நபி (ஸல்) அவர்கள் கூட ஒரு நேரத்தில் கடைப்பிடித்துள்ளார்கள்.

ஒரு இளைஞன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே எனக்கு விபச்சாரம் செய்வதற்கு அனுமதி தாருங்கள் என்று கூறினார். அப்போது (அங்கிருந்த) கூட்டத்தினர் அவரை எச்சரித்து நிறுத்து நிறுத்து என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரைத் தன் பக்கத்தில் வரச் சொன்னார்கள். அவரும் அருகில் வந்து அமர்ந்தார். (அவரிடத்தில்) நபி (ஸல்) அவர்கள் உன்னுடைய தாயிடத்தில் விபச்சாரம் புரிவதை நீ விரும்புவாயா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் மீதாணையாக தங்கள் தாயிடத்தில் விபச்சாரம் புரிவதை நானும் மக்களில் எவரும் விரும்ப மாட்டோம் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் உன்னுடைய மகளிடத்தில் இவ்வாறு செய்வதை விரும்புவாயா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே நானும் மக்களில் எவரும் தன் மகளிடத்தில் இச்செயலை செய்வதை விரும்ப மாட்டார்கள் என்று கூறினார். இது போன்றே நபி (ஸல்) அவர்கள் அந்த வாலிபரின் சகோதரி மாமி சின்னம்மா ஆகியோரைக் கூறி இவ்வாறு கேட்டார்கள். அந்நபர் நான் உட்பட யாரும் விரும்ப மாட்டார்கள் என்று பதில் கூறினார்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
நூல் : அஹ்மத் (21185)

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner