Monday, December 8, 2014

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 5 - பி.ஜே

முந்தைய தொடரில் முஸ்லிம் நூலில் 3674 சாலிம் பற்றிய ஹதீஸைப் பார்த்தோம்.

இந்த ஹதீஸை நிச்சயமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்க முடியாது என்பதை சுருக்கமாகப் பார்தோம்.

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கவே முடியாது என்பதை நம் மனது முழுவதுமாக ஏற்றுக் கொள்கின்றது.

ஆனாலும் முஸ்லிமில் இந்த ஹதீஸ் இருப்பதால் சரியான ஹதீஸ்தான் என்று வாதிடுபவர்களும் இருக்கின்றார்கள்.

இதனை நம்பக் கூடியவர்கள் இதிலிருந்து சட்டத்தை எடுத்து இதன்படி நடைமுறைப்படுத்துவதற்குத் தயாரா? என்றால் நடைமுறைப்படுத்தத் தயாரில்லை.

ஒரு விஷயத்தை நம்பும் போது முழுமையாக நம்ப வேண்டும். நடைமுறைப்படுத்த மனம் ஒப்பாத ஒரு விஷயத்தை நம்புகின்றோம் என்று பொய் சொல்கின்றார்கள்.

அறிவிப்பாளர்கள் சரியாக இருந்தும் குர்ஆனுக்கு முரண்படுகின்றது போன்ற செய்திகளை நாம் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

இதை நாம் ஆராய்ச்சி செய்து சுயமாகச் சொல்லவில்லை. இதனை அல்லாஹ்வுடைய தூதரே சொல்லி விட்டார்கள்.

مسند أحمد بن حنبل (3/ 497)

 16102 - حدثنا عبد الله حدثني أبي ثنا أبو عامر قال ثنا سليمان بن بلال عن ربيعة بن أبي عبد الرحمن عن عبد الملك بن سعيد بن سويد عن أبي حميد وعن أبي أسيد أن النبي صلى الله عليه و سلم قال : إذا سمعتم الحديث عني تعرفه قلوبكم وتلين له أشعاركم وأبشاركم وترون أنه منكم قريب فأنا أولاكم به وإذا سمعتم الحديث عني تنكره قلوبكم وتنفر أشعاركم وأبشاركم وترون أنه منكم بعيد فأنا أبعدكم منه قال

تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால்,  இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)


நூல்: அஹ்மத் 15478

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பெயரால் சொல்லப்படும் செய்திகளில் பொய்யானவை கலந்து விடும் என்பதையும், அதை எவ்வாறு கண்டறிவது என்பதையும் இங்கே விளக்குகிறார்கள்.

எந்தச் செய்தியைக் கேட்கும் போது இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்கள் என்று தக்க காரணங்களுடன் ஒருவரது மனசாட்சிக்குத் தோன்றுமோ அது போன்ற செய்திகளைச் சொல்வதற்கு நான் தகுதியானவன். எந்தச் செய்தியைச் செவியுறும் போது தக்க காரணங்களுடன் ஒருவரது மனசாட்சி அதை வெறுக்குமோ, இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று அவரது மனசாட்சிக்குத் தோன்றுமோ அந்தச் செய்தி நான் கூறாதது; நான் செய்யாதது என்பதுதான் அந்த வழிமுறை என்று தெளிவாக விளக்கி விட்டார்கள்.

ஒரு இளைஞர் அந்நியப் பெண்ணின் மார்பகத்தில் பால் குடித்தால் தாய் மகன் உறவு வந்துவிடும் என்ற செய்தியை நீங்கள் கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகின்றது. இதனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருப்பார்கள் என்று தோன்றுகின்றதா? இதனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கவே மாட்டார்கள் என்று தோன்றுகின்றதா?


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி சொல்லி இருக்கவே மாட்டார்கள் என்று தக்க காரணத்துடன் நமக்குத் தோன்றினால் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது இல்லை என அவர்களே இந்த ஹதீஸின் மூலம் தெளிவாக விளக்கி விட்டார்கள்.

அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 25:73

அல்லாஹ்வுக்கு மறதியோ, அறியாமையோ ஏற்படாது என்பதால் அல்லாஹ்வின் வார்த்தையில் முரண் இருக்காது.

இதில் எந்த முரண்பாடும் இல்லை என்பதே திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு முக்கியமான சான்றாகவுள்ளது.

படைத்தவனின் சொல் முக்காலத்திற்கும் பொருந்துமாறு இருக்கும். முக்காலத்தை அறிந்த அல்லாஹ்வின் சொல்லிலும், அவன் அனுப்பிவைத்த தூதரின் சொல்லிலும் எந்த முரண்பாடும் இருக்கக் கூடாது.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர்ஆன் 16 : 44

திருக்குர்ஆனைத் தெளிவுபடுத்த உம்மை அனுப்பியிருக்கின்றேன் என்று கூறி விளக்கும் அதிகாரத்தை அல்லாஹ் அளித்து இருப்பதால் அவர்களின் விளக்கத்திலும் முரண்பாடு இருக்க முடியாது.

குர்ஆனைப் பற்றி தெளிவாக விளக்குவதற்காகவே வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுக்கு மாற்றமாக பேசவே மாட்டார்கள். எனவே குர்ஆனுக்கும், ஹதீசுக்கும் முரண்பாடுகள் இருக்கவே கூடாது.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

திருக்குர்ஆன் 4:82

நமது வசனங்களை வளைப்போரும், இந்த அறிவுரை தங்களிடம் வந்த போது மறுத்தோரும் நம்மிடமிருந்து மறைந்திட முடியாது. நரகில் வீசப்படுபவன் சிறந்தவனா? அல்லது கியாமத் நாளில் அச்சமற்றவனாக வருபவனா? நீங்கள் நினைத்ததைச் செய்து கொள்ளுங்கள்! நீங்கள் செய்பவற்றை அவன் பார்ப்பவன். இது மிகைக்கும் வேதம். இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.

திருக்குர்ஆன்  41:40-42

திருக்குர்ஆனில் முரண்பாடுகளும் இருக்காது, தவறும் இருக்காது என்று இவ்வசனங்கள் அடித்துச் சொல்கின்றன.

எனவே குர்ஆனில் முரண்பாடும், தவறும் இருக்கிறது என்ற வகையில் நமது நம்பிக்கை இருக்கக் கூடாது.

திருக்குர்ஆனில் தவறு இருக்கிறதென்று ஒரு ஹதீஸ் வருமானால் அது ஹதீஸ் கிடையாது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கவே மாட்டார்கள் என்று நாம் நம்ப வேண்டும். அவர்கள் பெயரைச் சொல்லி தவறாக வந்துள்ளது என்று எண்ண வேண்டும்.

இவைதான் இஸ்லாத்தின் அடிப்படை. இந்த அடிப்படையை மனதில் பதிய வைத்துக் கொண்டு சூனியத்தைப் பற்றி வரும் ஹதீஸ்களையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சூனியம் என்று ஒன்று உள்ளது என்பதை அதிகமான நபர்கள் நம்புகின்றனர். ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கவலைப்படுத்த, காயப்படுத்த உலகில் எந்த வழிமுறைகள்  உள்ளனவோ அவற்றில் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலமாக ஒருவன் மற்றவனுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை சூனியம் என்று நம்புகின்றனர்.

உதாரணமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக்  கத்தியால் குத்தலாம். அல்லது இருவருமே கத்தியால் குத்திக் கொள்ளலாம். இதனால் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ பாதிப்பு ஏற்படும்.

இது போன்று ஒருவருக்கொருவர் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்

ஒருவர் திட்டுகின்றார் அல்லது அவதூறு சொல்கின்றார் என்றால், யாரைத் திட்டுகின்றாரோ அல்லது அவதூறு சொல்கின்றாரோ அவரைக் கவலையடையச் செய்யலாம்.

இது போன்ற வழிகளில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதைச் செய்வதற்காக தனியாக கற்றுத்தேறும் அவசியம் இல்லை. யாருக்கு எதிராக யாரும் இதைச் செய்ய முடியும்.

உலகத்தில் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அல்லாஹ் எந்த வழிமுறையை ஏற்படுத்தியுள்ளானோ அந்த வழிமுறைகள் தவிர மற்ற அனைத்து வழிமுறைகளும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை.

சூனியம் செய்வதாகக் கூறிக் கொள்ளும் மந்திரவாதிகளிடம்(?) போய் ஒருவருக்குச் சூனியம் வைக்க வேண்டும் என்று சொன்னால், அவர் சூனியம் செய்வார். பாதிப்பு ஏற்படுத்தப்பட வேண்டிய நபரைத் தொடாமல், அருகில் வராமல், அவரைப்பார்க்காமல் எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டு அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவார்.

யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவரின் சட்டை, வியர்வை, காலடி மண், தலைமுடி இது போன்றவற்றை வைத்துக் கொண்டு அதனை பொம்மை போல் செய்து பாதிப்பு ஏற்படுத்த வேண்டியவரின் பெயரை அந்தப் பொம்மைக்கு வைத்து அந்த பொம்மையின் வயிற்றில் குத்தினால் அவரது வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படும். அந்தப் பொம்மையின் கண்ணைக் குத்தினால் இவரின் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படும். இது தான் சூனியம் என்று மக்கள் நம்புகின்றனர். உடலுக்கு மட்டுமின்றி மனதிலும் பாதிப்பை ஏற்படுத்த சூனியக்காரனால் இயலும் என்று நம்புகின்றனர்.

ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்த எந்த வழிமுறைகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளானோ அவற்றில் எந்த ஒன்றையும் அவர் செய்ய மாட்டார்.

கணவன் மனைவியைப் பிரிக்க பணம் கொடுத்தால் சூனியக்காரன் பணத்தைப் பெற்றுக் கொண்டு எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டே கணவன் மனைவியைப் பிரித்து விடுவார் என்றும் மக்கள் நம்புகின்றனர்.

கணவன் மனைவிக்கிடையே  சண்டை ஏற்பட்டால் நன்றாக இருந்த இவர்களுக்கு எவனோ சூனியம் வைத்து விட்டான் என்று சொல்லும் அளவுக்கு மக்களின் நம்பிக்கை உள்ளது.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்பக் கூடியவர்கள் சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் செயல்படும் திறன் படைத்தவன் என்று தான் நம்புகிறார்கள். இஸ்லாமிய அறிஞர்களும் இப்படி நம்புவது தான் கொடுமையிலும் கொடுமை.

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் வகையில் இந்த நம்பிக்கை இருந்தாலும் தங்கள் நம்பிக்கையை நியாயப்படுத்த சில ஆதாரங்களைக் காட்டுகிறார்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner