Wednesday, February 22, 2012

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 9

ஷைத்தானைப் பற்றிய விளக்கங்கள்

ஜின் இனத்தைச் சார்ந்தவன்

ஷைத்தான் ஜின் இனத்தைச் சார்ந்தவனாவான் என்று குர்ஆன் கூறுகிறது.

"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்.  அல்குர்ஆன் (18 : 50)

ஷைத்தானின் உருவ அமைப்பு

நரகத்தில் ஸக்கூம் என்ற ஒரு கொடிய மரம் உள்ளது. இதனுடைய கொடூரமான வடிவத்தைப் பற்றி அல்லாஹ் விவரிக்கும் போது அது ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருக்கும் என்று உவமை காட்டுகிறான். இதிலிருந்து ஷைத்தான்களின் வடிவம் அருவருக்கத்தக்க வகையில் கொடூரமாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா? அதை அநீதி இழைத்தோருக்குச் சோதனையாக நாம் ஆக்கினோம். அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் மரம். அதனுடைய பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றது.  அல்குர்ஆன் (37 : 62.63.64.65)

ஷைத்தானிற்கு கொம்புகள் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களில் அறியலாம்.

"இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக! இறைவா! எங்கள் யமன் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக!'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். மக்கள் (சிலர்), "எங்கள் நஜ்து (இராக்) நாட்டிலும் (சுபிட்சம் ஏற்படப் பிரார்த்தியுங்களேன்!)'' என்று (மூன்று முறை) கேட்க, நபி (ஸல்) அவர்கள், அங்குதான் நிலநடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்'' என்று கூறினார்கள்.  அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : புகாரி (1037)

நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள் : மேலும், சூரியன் உதிக்கின்ற நேரத்திலும் அது மறைகின்ற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கின்றது.  அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : புகாரி (3273)

ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டவன்

 "நான் உனக்குக் கட்டளையிட்ட போது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது?'' என்று (இறைவன்) கேட்டான். "நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!'' என்று கூறினான்.  அல்குர்ஆன் (7 : 12)

"நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்'' என்று அவன் கூறினான்.  அல்குர்ஆன் (38 : 76)

ஷைத்தானின் உணவு

உணவு உண்பதற்கு முன்னால் பிஸ்மில்லாஹ் என்று கூற வேண்டும். இறைவனுடைய பெயரை கூறாமல் உணவு உட்கொண்டால் அந்த உணவு ஷைத்தானிற்கு செல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பிஸ்மில்லாஹ் கூறப்படாமல் உண்ப்படுகின்ற உணவு தான் ஷைத்தானின் உணவாகும்.

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது : நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (சேர்ந்து) உணவு உண்பதற்கு அமர்ந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலிலில் கை வைப்பதற்கு முன் எங்கள் கைகளை (உணவில்) நாங்கள் வைக்கமாட்டோம். ஒரு முறை நாங்கள் உணவு உண்பதற்கு அவர்களுடன் அமர்ந்தோம். அப்போது ஒரு சிறுமி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவளைப் போன்று (விரைந்து) வந்து, (பிஸ்மில்லாஹ் சொல்லாமல்) உணவில் கை வைக்கப்போனாள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது கையைப் பிடித்துக்கொண்டார்கள். பிறகு ஒரு கிராமவாசி, (யாராலோ) தள்ளி விடப்பட்டவரைப் போன்று (விரைந்து வந்து பிஸ்மில்லாஹ் சொல்லாமல் உணவில் கை வைக்க) வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது கையையும் பிடித்துக் கொண்டார்கள்.

அப்போது, "அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத உணவில் ஷைத்தான் பங்கேற்கிறான். அவன் இச்சிறுமியுடன் வந்து, அவள் மூலமே இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, அவளது கையை நான் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். பிறகு இந்தக் கிராமவாசியுடன் வந்து அவர் மூலம் இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, இவரது கையைப் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஷைத்தானின் கை அச்சிறுமியின் கையுடன் எனது கைக்குள் சிக்கிக்கொண்டது'' என்று கூறினார்கள்.  நூல் : முஸ்லிம் (4105)

பிஸ்மில்லாஹ் என்று கூறி உணவு உண்ணும் போது ஷைத்தானால் அந்த உணவை உண்ண முடியாது. அந்த உணவின் பலன் முழுமையாக பிஸ்மில்லாஹ் கூறி உண்டவருக்கே செல்கிறது. எனவே பிஸ்மில்லாஹ் என்று கூறி உண்ணுவதன் மூலம் நம்முடன் ஷைத்தானை உண்ணவிடாமல் தடுக்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை'' என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள்  நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது'' என்று சொல்கிறான்.

அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர்கூறாவிட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்'' என்று சொல்கிறான். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)  நூல் : முஸ்லிம் (4106)

ஷைத்தான் அருந்தும் பானம்

உண்ணுவதற்கு அனுமதிக்கப்பட்ட பொருளாக இருந்தாலும் இஸ்லாம் கற்றுத்தந்தவாறு உண்ண வேண்டும். இஸ்லாமிய முறைக்கு மாற்றமாக உட்கொண்டாலோ பருகினாலோ அந்த உணவும் பானமும் ஷைத்தானிற்கு செல்கிறது. இதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகிறது.

நின்று பருகக்கூடிய ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் பார்த்த போது வாந்தி எடு என்று (பருகியவரைப் பார்த்துக்) கூறினார்கள். அவர் ஏன் என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீயும் பூனையும் ஒன்றாக சேர்ந்து பருகுவதை விரும்புவீரா என்று கேட்டார்கள். அவர் விரும்ப மாட்டேன் என்று கூறினார். (நீ நின்று குடித்த போது) பூனையை விட மோசமான ஷைத்தான் உன்னுடன் சோந்து பருகினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : அஹ்மத் (7662)

ஷைத்தானின் இருப்பிடம்

ஷைத்தான்கள் அசுத்தமான இடங்களில் வசிக்கின்றன. கழிப்பறைகள் ஷைத்தான்கள் வருகின்ற இடமாக இருப்பதால் அங்கு செல்லும் போது ஷைத்தானிடமிருந்து பாதுகாவல் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, "இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறுவார்கள்.  அறிவிப்பவர் : அனஸ் (ரலி)  நூல் : புகாரி (142)

இந்த கழிப்பிடங்கள் (ஷைத்தான்கள்) வருகைதரும் இடமாக உள்ளது. ஆகவே உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, "இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கிலி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறிக்கொள்ளட்டும்.  அறிவிப்பவர் : ஸைது பின் அர்கம் (ரலி)  நூல் : இப்னு மாஜா (292)

இறைவனை ஞாபகப்படுத்தும் நற்காரியங்கள் எதுவும் வீடுகளில் செய்யப்படாமல் இருந்தால் அந்த வீடு ஷைத்தான்கள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக ஆகிவிடுகிறது.

குர்ஆன் ஓதுவது தொழுவது திக்ர் செய்வது போன்ற இறைவனை ஞாபகப்படுத்தும் காரியங்கள் வீடுகளில் அரங்கேறினால் ஷைத்தானும் அவனது கூட்டத்தாரும் அந்த வீட்டில் வசிக்க இயலாமல் அதை விட்டும் வெளியேறிவிடுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை'' என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள்  நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது'' என்று சொல்கிறான்.

அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர்கூறாவிட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்'' என்று சொல்கிறான். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)  நூல் : முஸ்லிம் (4106)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். "அல்பகரா' எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (1430)

இறைக் கட்டளையை மறுத்தான்

நல்லவனாக இருந்த ஷைத்தான் இறைவனுக்கு மாறுசெய்த ஒரே காரணத்திற்காக கெட்டவனாக மாறினான். இறைவன் ஒரு கட்டளையிட்டுவிட்டால் எந்த விருப்பு வெறுப்பின்றி கட்டுப்பட்டால் தான் முஸ்லிமாக இருக்க முடியும். வெற்றி பெற முடியும்.

இறைவன் ஷைத்தானிடம் ஆதம் (அலை) அவர்களுக்கு பணியுமாறு கூறும் போது இறைக்கட்டளைக்கு கட்டுப்படாமல் இறைவனை எதிர்த்துப் பேசினான். இறைமறுப்பாளனாக ஆனான்.

"சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு நான் மனிதனைப் படைக்கவுள்ளேன்'' என்று வானவர்களுக்கு உமது இறைவன் கூறியதை நினைவூட்டுவீராக! "அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது, அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' (என்று கூறினான்)

இப்லீஸைத் தவிர வானவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாகப் பணிந்தனர். அவன் பணிந்தவனாக இருக்க மறுத்து விட்டான். "இப்லீஸே! பணிந்தோருடன் நீ சேராமல் இருப்பது ஏன்?'' என்று (இறைவன்) கேட்டான்.

"சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு நீ படைத்த மனிதனுக்கு நான் பணிபவனாக இல்லை'' என்று அவன் கூறினான்.  அல்குர்ஆன் (15 : 28)

பெருமையின் காரணத்தால் வழிகெட்டான்

அல்லாஹ் அல்லவா நமக்கு உத்தரவு இடுகிறான் என்று ஷைத்தான் கவனிக்காமல் ஆதம் உயர்ந்தவரா? நான் உயர்ந்தவனா? என்று யோசிக்க முற்பட்டான். அவனிடம் ஏற்பட்ட இந்த ஆணவம் தான் அவனை வழிகெடுத்தது. படைத்த இறைவனிடத்திலேயே திமரிப் பேசத் தூண்டியது.

"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.  அல்குர்ஆன் (2 : 34)
 
"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். "களிமண்ணால் நீ படைத்தவருக்குப் பணிவேனா?'' என்று அவன்  கேட்டான்.  அல்குர்ஆன் (17 : 61)

"எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது?  அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்)  கேட்டான்.

"நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்'' என்று அவன் கூறினான்.  அல்குர்ஆன் (38 : 75)
 
வானவர்களின் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்

ஷைத்தான் இறைக்கட்டளையை மீறுவதற்கு முன்பு வரை வானவர்களின் கூட்டத்தில் ஒருவனாகவே இருந்தான். இவைனுக்கு கட்டுப்பட மறுத்த உடன் வானவர்களின் சபையிலிருந்து  வெளியேற்றப்பட்டான்.

"இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ  சிறுமையடைந்தவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான்.  அல்குர்ஆன் (7 : 13)

இங்கிருந்து நீ வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உள்ளது (என்று இறைவன் கூறினான்)  அல்குர்ஆன் (15 : 34)

"இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது'' என்று (இறைவன்) கூறினான்.  அல்குர்ஆன் (38 : 77)

அவகாசம் அளிக்கப்பட்டான்

தன்னை அழித்துவிடக்கூடாது. தனக்கு நீண்ட ஆயுளை அளிக்க வேண்டும் என்று ஷைத்தான் இறைவனிடம் கோரினான். ஷைத்தானுடைய இந்த கோரிக்கையை இறைவனும் ஏற்றுக்கொண்டு அவகாசம் அளித்தான்.

நீண்ட ஆயுள் ஷைத்தானிற்கு வழங்கப்பட்டாலும் உலகம் அழிக்கப்படும் போது ஷைத்தானும் அழிக்கப்படுவான். நிச்சயமாக அவனும் ஒரு நேரத்தில் மரணத்தை தழுவுவான்.

"அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' என்று அவன் கேட்டான். "நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான்.  அல்குர்ஆன் (7 : 14)

"இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் தருவாயாக!'' என்று அவன் கேட்டான். "குறிப்பிட்ட நேரம் வரும் நாள் வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்'' என்று (இறைவன்) கூறினான்.  அல்குர்ஆன் (15 : 36)

"என் இறைவா! அவர்கள் உயிர்ப்பிக் கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!''  என்று அவன் கேட்டான். "அறியப்பட்ட நேரத்தை உள்ளடக்கிய நாள் வரை நீ அவகாசம்  கொடுக்கப்பட்டவன்'' என்று இறைவன் கூறினான்.  அல்குர்ஆன் (38 : 79)

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner