Friday, February 24, 2012

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 10

ஷைத்தானின் சபதம்

ஆணவத்தால் வழிகெட்ட ஷைத்தான் ஆதமுடைய மக்கள் அனைவரையும் வழிகெடுப்பேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்தான். கடும் முயற்சி செய்து மக்கள் அனைவரையும் நரகத்தில் தள்ளுவது தான் ஷைத்தானுடைய முழு நோக்கமாகும். மக்களை வழிகெடுப்பதற்காகத் தான் அவன் இறைவனிடம் அவகாசம் கேட்டான். 

அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான். "உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்'' என்று அவன் (இறைவனிடம்) கூறினான்.
 
"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.  அல்குர்ஆன் (4 : 118.119)


"நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று கூறினான். "பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் கூறினான்).  அல்குர்ஆன் (7 : 16.17)

"என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்'' என்று கூறினான்.

"இதோ என்னிடம் நேரான வழி உள்ளது'' என்று (இறைவன்) கூறினான். எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.  அல்குர்ஆன் (15 : 40)

"என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்'' எனவும் கூறினான். அல்குர்ஆன் (17 : 62)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (எனது இறைவா) உனது கண்ணியத்தின் மீதும் மகத்துவத்தின் மீதும் சத்தியமாக ஆதமுடைய மக்கள் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் அவர்களை நான் வழிகெடுத்துக்கொண்டே இருப்பேன் என்று இப்லீஸ் இறைவனிடம்  கூறினான். அதற்கு இறைவன் எனது கண்ணியத்தின் மீதும் மகத்துவத்தின் மீதும் சத்தியமாக  அவர்கள் என்னிடம் பாவமன்னிப்புத் தேடும் காலமெல்லாம் அவர்களை நான்  மன்னித்துக்கொண்டே இருப்பேன் என்று கூறினான்.  அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)  நூல் : அஹ்மத் (10814)

ஷைத்தான் எப்படியெல்லாம் மனிதனை வழிகெடுப்பான் என்பதை நபி (ஸல்) அவர்கள் பின் வரும் ஹதீஸில் விளக்கியுள்ளார்கள்.
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஆதமுடைய மகனை வழிகெடுப்பதற்காக  ஷைத்தான் (நல்) வழிகளில் அமர்ந்துகொள்கிறான். அவனை வழிகெடுப்பதற்காக இஸ்லாம் என்ற  (நல்) வழியில் அமர்ந்துகொண்டு உனது மார்க்கத்தையும் உனது தந்தையின் மார்க்கத்தையும் உனது பாட்டனாரின் மார்க்கத்தையும் விட்டுவிட்டு நீ இஸ்லாத்தை ஏற்கப்போகிறாயா? என்று கூறுவான். ஆதமுடைய மகன் ஷைத்தானிற்கு மாறுசெய்து இஸ்லாத்தை ஏற்றுவிட்டால் அவனை வழிகெடுப்பதற்காக ஹிஜ்ரத் (இறைவனுக்காக நாடுதுறத்தல்) என்ற (நல்) வழியில் அமர்ந்துகொண்டு உனது பூமியையும் உனது வானத்தையும் விட்டுவிட்டு நீ ஹிஜ்ரத்  செய்யப்போகிறாயா? ஹிஜ்ரத் செய்தவர் கட்டிப்போடப்பட்ட குதிரையைப் போன்றவர் ஆவார் என்று கூறுவான். ஷைத்தானிற்கு மாறுசெய்து ஹிஜ்ரத் செய்துவிட்டால் ஆதமுடைய மகனை வழிகெடுப்பதற்காக அறப்போர் என்ற (நல்) வழியில் ஷைத்தான் அமர்ந்துகொண்டு அறப்போரில்  உயிரையும் பொருளையும் அற்பணிக்க வேண்டும். நீ போரிட்டு கொல்லப்பட்டுவிட்டால் (உன்)  மனைவியை மற்றவர் மணமுடித்துக்கொள்வார். உனது செல்வம் பங்கிடப்பட்டு மற்றவரால் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறுவான். (உறுதியுள்ள மனிதன்) இவனுக்கு மாறு செய்து அறப்போரில் கலந்துகொள்வான்.  இந்த நல்ல காரியங்களை செய்தவராக யார் மரணிக்கிறாரோ அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகிறது.  அறிவிப்பவர் : சப்ரா பின் அபீ ஃபாகிஹ் (ரலி)  நூல் : அஹ்மத் (15392)

முதன் முதலில் ஷைத்தான் வலையில் விழுந்தவர்கள்

ஷைத்தானுடைய சதியில் முதன் முதலில் ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் விழுந்தார்கள். சொர்க்கத்தில் இன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்த இவ்விருவருக்கும் பொய்யான தகவலை ஷைத்தான் தந்தான்.

அதை நம்பி அவ்விருவரும் இறைவனுடைய கட்டளையை மீறினார்கள். இதனால் இறைவன் அவ்விருவரையும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிவிட்டான்.
 
ஆதமே! இவன் உமக்கும், உமது மனைவிக்கும் எதிரியாவான். அவன் உங்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டாம். அப்போது நீர் துர்பாக்கியசாலியாவீர்!

இங்கே உமக்குப் பசிக்காது! நிர்வாணமாக மாட்டீர்! இங்கே உமக்குத் தாகமும் ஏற்படாது. உம்மீது வெயிலும் படாது! (என்று கூறினோம்).

அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)

அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.  அல்குர்ஆன் (20 : 117)

மனிதர்களின் விரோதி

மனிதர்களை வெற்றியடைய விடாமல் நரகத்திற்கு அழைப்பது ஷைத்தானுடைய குறிக்கோள் என்பதால் அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் ஷைத்தானைப் பற்றி நமக்கு எச்சரிக்கை செய்கிறான். அவன் மனிதர்களுக்கு பகிரங்கமான விரோதி என்றும் குறிப்பிடுகிறான்.

ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.  அல்குர்ஆன் (35 : 6)

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.  அல்குர்ஆன் (2 : 168)

ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.  அல்குர்ஆன் (12 : 5)
 
ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான்.  அல்குர்ஆன் (25 : 29)

ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.  அல்குர்ஆன் (7 : 27)

நபிமார்களுக்கு விரோதி

மக்களை வழிகேட்டிற்கு செல்ல விடாமல் நல்வழிபடுத்துவது நபிமார்களின் பணியாகும். இந்தப் பணி ஷைத்தானிற்கு பிடிக்காததும் அவனுக்கு எதிரானதுமாகும். எனவே இப்பணியில் ஈடுபட்ட நபிமார்களுக்கு ஷைத்தான் பல வழிகளில் இடஞ்சல்களை ஏற்படுத்தி இருக்கிறான்.

 (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை. எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கும், கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதைச் சோதனையாக ஆக்கிட ஷைத்தான் போட்டதை அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர்.  அல்குர்ஆன் (22 : 52)

கெட்ட தோழன்

இஸ்லாமிய விதிமுறைகளை மறந்து தீமைகளில் வீரியமாக ஈடுபடுபவர்களுக்கு ஷைத்தானே தோழனாவான். இவர்களுடைய மனதில் ஷைத்தான் போடுகின்ற தவறான எண்ணங்களுக்கிணங்க இவர்கள் செயல்படுகிறார்கள்.

எதிரியாக பார்க்க வேண்டிய ஷைத்தானை ஆலோசனைக் கூறும் நண்பனைப் போல் கருதி அவன் சொல்லுக்கு கட்டுப்படுவதால் இவர்களுக்கு ஷைத்தான் கெட்ட தோழனாகிவிடுகிறான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.  அல்குர்ஆன் (4 : 38)

எவர் அளவற்ற அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிக்கிறாரோ அவருக்கு ஒரு ஷைத்தானைச் சாட்டுவோம். அவன் அவருக்குத் தோழனாவான். அவர்கள் (நல்) வழியை விட்டும் மக்களைத் தடுக்கின்றனர். தாம் நேர் வழி பெற்றோர் எனவும் எண்ணுகின்றனர்.
 
முடிவில் அவன் நம்மிடம் வரும் போது "எனக்கும், உனக்கும் இடையே கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் இருந்திருக்கக் கூடாதா? நீ கெட்ட தோழனாவாய்'' என்று அவன் (ஷைத்தானிடம்) கூறுவான்.  அல்குர்ஆன் (43 : 36.37.38)

ஷைத்தானின் நண்பர்கள்

ஷைத்தானின் விருப்பத்திற்கேற்ப தவறான காரியங்களில் ஈடுபடுபவர்கள் ஷைத்தானின் நண்பர்களாவர்.

சிலருக்கு அவன் நேர் வழி காட்டினான். மற்றும் சிலர் மீது வழி கேடு உறுதியாகி விட்டது. அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர். தாங்கள் நேர் வழி நடப்போர் எனவும் எண்ணிக் கொள்கின்றனர்.  அல்குர்ஆன் (7 : 30)

அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறு கின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப் பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.  அல்குர்ஆன் (6 : 121)
 
அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.  அல்குர்ஆன் (4 : 119)

ஒவ்வொருவருடனும் இருக்கிறான்

நபி (ஸல்) அவர்களைத் தவிர்த்து ஷைத்தான் எல்லோரிடமும் இருக்கிறான். இதற்கு நல்லவர்களோ சஹபாக்களோ விதிவிலக்கில்லை. அனைவரிடமும் இருந்து கொண்டு கெட்ட எண்ணங்களை ஏற்படுத்துவான். நல்லவர்கள் இவன் கூறுவதை புறக்கணித்துவிடுவார்கள். தீயவர்கள் செயல்படுத்துவார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலிலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள்மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி)வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, "ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டுவிட்டாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், "என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர்மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?'' என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்' என்றார்கள். "ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?'' என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் "ஆம்' என்றார்கள். நான், "தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்'' என்று சொன்னார்கள்.  நூல் : முஸ்லிம் (5422)

எல்லோரிடமும் ஷைத்தான் இருக்கிறான் என்ற இந்த உண்மையை பலர் புரிந்து கொள்ளாத காரணத்தால் சிலருக்கு பைத்தியமோ பலவீனங்களோ நோய்களோ ஏற்படும் போது அவர்களிடத்தில் ஷைத்தான் வந்துவிட்டதாக தவறாக நம்புகிறார்கள்.

ஷைத்தான் ஒருவரிடத்தில் இருப்பதால் அவருக்கு பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உண்மையானால் மனிதர்கள் அனைவருக்கும் அப்படி பாரதூரமான பாதிப்புகள் ஏற்பட வேண்டும். ஏனென்றால் ஷைத்தான் அனைவரிடமும் இருக்கிறான்.

ஆனால் இவ்வாறு அனைவருக்கும் பைத்தியமோ மோசமான நோய்களோ உளறல்களோ ஏறபடுவதில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் இது போன்ற பலவீனங்கள் ஏற்படுகிறது. இறைவனுடைய நாட்டத்தால் இந்த பலவீனங்கள் ஏற்படுகிறதே தவிர ஷைத்தானால் ஏற்படுவதில்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.

உடலில் இரண்டரக் கலந்துள்ளான்

ஷைத்தான் நம் உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறான் என்றக் கருத்தை பின்வரும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்.  அறிவிப்பவர் : ஸஃபிய்யா (ரலி)  நூல் : புகாரி (2035)

உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்திற்கு என்னை ஆளுநராக நியமித்தார்கள். நான் தொழுகும் போது வேறு விஷயங்களில் என் கவனம் சென்றுகொண்டிருந்தது. இதனால் நான் எத்தனை ரக்அத்துகள் தொழுதேன் என்பதை கூட மறக்கலானேன். இதை (அடிக்கடி) நான் கண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நீ அபுல் ஆஸுடைய மகன் (உஸ்மானா?) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் ஆம் அல்லாஹ்வின் தூதரே என்றேன். நீங்கள் வந்ததற்கு என்ன காரணம்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே நான் தொழுகும் போது வேறு விஷயங்களில் என் கவனம் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் நான் எத்தனை ரக்அத்துகள் தொழுதேன் என்பதை கூட மறந்துவிடுகிறேன் என்று கூறினேன். இது ஷைத்தானால் ஏற்படுகிறது என்று அவர்கள் கூறிவிட்டு அருகில் வா என்றார்கள். நான் நபியவர்களுக்கு அருகில் எனது குதிங்கால்களை ஊன்றி அமர்ந்துகொண்டேன். அவர்களது கரத்தால் என் நெஞ்சில் அடித்து எனது வாயில் உமிழ்ந்தார்கள். அல்லாஹ்வின் எதிரியே வெளியேறிவிடு என்று கூறினார்கள். இவ்வாறு அவர்கள் மூன்று முறை செய்துவிட்டு உன் பணியை துவங்கு என்று (என்னிடம்) கூறினார்கள். நூல் : இப்னு மாஜா (3538)

அல்லாஹ்வின் எதிரியே வெளியேறிவிடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஷைத்தான் உஸ்மான் என்ற இந்த நபித்தோழரின் உடலில் இருந்து கொண்டு தொழுகையில் கவனத்தைத் திருப்பும் வேலையை செய்துள்ளான் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது.

ஷைத்தான் நமது உடலுடன் கலந்திருந்தாலும் தீய எண்ணங்களை மட்டுமே அவனால் ஏற்படுத்த முடியுமே தவிர கை கால்களை முடக்குவதோ நோய்களை ஏற்படுத்துவதோ பைத்தியமாக்குவதோ ஷைத்தானால் முடியாத காரியம்.

ஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்

ஷைத்தானை விரட்டுவதாகக் கூறி சம்பாதிக்க நினைப்பவர்களும் மக்களை ஏமாற்றுபவர்களும் ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் இடஞ்சல்களை விவரிக்கும் சில ஹதீஸ்களை மக்களிடம் சொல்கிறார்கள்.

ஷைத்தானால் மனிதனுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுவதால் மனிதனை விட்டும் ஷைத்தானை நாங்கள் விரட்டுகிறோம். இதில் என்னத் தவறு இருக்கிறது? என்று கேள்வி கேட்டு பாமர மக்களை வழிகெடுக்கிறார்கள்.

இவர்கள் தங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்கு ஹதீஸ்களில் சொல்லப்பட்ட இடஞ்சல்கள் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை தர முடியுமா?

தொழுகையில் கவனம் திரும்புவது கொட்டாவி விடுவது சுப்ஹ‚ தொழாமல் உறங்குவது இவையெல்லாம் ஷைத்தானால் ஏற்படுவதாக ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியென்றால் இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்கு தொழுகையில் கவனம் திரும்பாதா? அவர்களுக்கு இனி கொட்டாவியே வராதா? அவர்கள் சுப்ஹ‚ தொழுகையை விடாமல் கடைபிடிப்பார்களா? ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்களுக்குத் தவறான எண்ணங்களே ஏற்படாதா? இந்த அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தாலே ஷைத்தானை விரட்டுவதாக இவர்கள் கூறுவது வடிகட்டியப் பொய் என்பதை அறியலாம்.

அனைவரிடமிருந்தும் ஷைத்தானை விரட்டுவார்களா?

ஷைத்தான் நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிறான். அப்படியென்றால் ஷைத்தானை விரட்டுவதாக கூறும் போலி ஆண்மீகவாதிகள் அனைத்து மக்களுக்கும் ஓதிப்பார்த்து அவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவார்களா?

நபிமார்களுக்கு ஷைத்தான் இடஞ்சல் தந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இன்றைக்கு இவர்களுக்கு ஷைத்தானை விரட்டத் தெரிந்த யுக்தி நபிமார்களுக்கு ஏன் தெரியவில்லை என்று நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம்.  அல்குர்ஆன் (6 : 112)

(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை. அல்குர்ஆன் (22 : 52)

ஷைத்தான் வலையில் விழுந்தவர்கள் ஷைத்தானை விரட்டுகிறார்களா?

ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.  அல்குர்ஆன் (26 : 221)

ஷைத்தானை விரட்டுவதாக கூறுபவர்கள் மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக இட்டுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகையவர்களிடத்தில் தான் ஷைத்தான்  இருக்கிறான்.

ஷைத்தானின் வலையில் சிக்கியவர்கள் மற்றவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவதாக  நினைப்பது எவ்வளவு அறிவீனம் என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்.  ஏமாற்றுபவர்களின் சதியில் சிக்கி தங்கள் பொருளையும் அறிவையும் இழந்துவிட வேண்டாம்.

ஷைத்தானால் ஏற்படும் தீங்கு

தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையானக் காரியங்களை புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும். அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்கு கட்டுப்படுபவர்கள் தீமையை செய்துவிடுகிறார்கள். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.

மனிதன் தான் ஷைத்தானிற்கு கட்டுப்பட்டு தவறிழைக்கிறானேத் தவிர ஷைத்தான் யாரையும் வழுக்கட்டாயமாக அவர்கள் விரும்பாமல் தீமைக்கு அழைத்துச் செல்வதில்லை. அதுபோன்று நல்ல விஷயங்களை வெறுப்பிற்குரியதாக நமக்குக் காட்டுவானேத் தவிர நன்மையான காரியங்களை செய்யவிடாமல் ஷைத்தான் யாரிடத்திலும் சண்டைக்குவர மாட்டான்.  இதை நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம்.

தீய எண்ணங்களை ஏற்படுத்துவதும் தவறான வழிகளை காட்டுவதும் தான் ஷைத்தானுடைய வேலை என்பதை பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.  அல்குர்ஆன் (4 : 119)

 
அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.  அல்குர்ஆன் (2 : 169)

அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.  அல்குர்ஆன் (114 : 5)


அதிகபட்சமாக ஷைத்தானால் என்ன செய்ய முடியும் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்'' என்று கூறுவான்.

அப்போது இப்லீஸ், "(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை'' என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை'' என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, "நீதான் சரி(யான ஆள்)'' என்று (பாராட்டிக்) கூறுவான்.  அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)  நூல் : முஸ்லிம் (5419)


வேறெதுவும் செய்ய முடியாது?

ஒருவரை பைத்தியமாக மாற்றுவது உடல் உறுப்புக்களை செயலிழக்கச் செய்து முடக்கிப்போடுவது போன்ற பாரதூரமான வேலைகளை ஷைத்தானால் செய்ய இயலாது. ஆனால் இவற்றையெல்லாம் ஷைத்தானால் செய்ய முடியும் என்று கூறித் தான் ஷைத்தானை விரட்டுகிறோம் என்று கூறுபவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் தீமை தவறான வழியை காட்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

"அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு  அல்குர்ஆன் (14 : 22)

"எனது அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை'' (என்றும் இறைவன் ஷைத்தானிடம் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.  அல்குர்ஆன் (17 : 65)

அவனுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை.  அல்குர்ஆன் (34 : 21)

குர்ஆன் கூறும் இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டால் பில்லி சூனியம் ஏவல் போன்ற பல்வேறு மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். பில்லி சூனியம் ஏவல் போன்ற காரியங்கள் ஷைத்தானின் உதவியால் நடப்பதாக பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மேற்கண்ட வசனங்கள் இந்த நம்பிக்கையை தகர்த்து எரிகிறது.

ஷைத்தானுடன் தொடர்பு படுத்திக் கூறும் வழக்கம்

கெட்டக் காரியங்களையும் வெறுப்பிற்குரிய விஷயங்களையும் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறும் வழக்கம் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் அரபுமொழியிலும் உள்ளது. அடுத்து வரக்கூடிய தலைப்புகளுக்கு இந்த விஷயத்தை நாம் அறிந்து வைத்திருப்பது அவசியமாக இருப்பதால் இங்கே இது தொடர்பான ஆதாரங்களை குறிப்பிடுகிறோம்.

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!  அல்குர்ஆன் (5 : 90)

மது அருந்துவது சூதாடுவது பலிபீடங்களை உருவாக்குவது குறிபார்ப்பதற்கு அம்புகளை பயன்படுத்துவது இவையனைத்தும் கெட்ட மனிதர்களின் செயல்பாடுகளாகும். ஆனால் இவற்றை அல்லாஹ் ஷைத்தானின் செயல்களாக மேற்கண்ட வசனத்தில் கூறுகிறான்.

"நாம் அப்பாறையில் ஒதுங்கிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார்.  அல்குர்ஆன் (18 : 63)

மறதி உட்பட எல்லா தீமைகளும் இறைவன் புறத்திலிருந்து தான் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. என்றாலும் கெட்ட விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்ற மரியாதைக்காகவே மறதியை ஷைத்தான் ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. 

ஷைத்தான் பைத்தியத்தை ஏற்படுத்துவானா?

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக்  காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக்கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.  அல்குர்ஆன் (2 : 275)

பைத்தியமாக அவர்கள் எழுவதை ஷைத்தானால் தீண்டப்பட்டவன் என்று இவ்வசனம் (திருக்குர்ஆன் 2:275) கூறுகின்றது.


ஷைத்தான் தான் பைத்தியத்தை ஏற்படுத்துகிறான் என்று சிலர் இவ்வசனத்தைச் சான்றாகக் காட்டுகின்றனர்.

தீய காரியங்களைப் பற்றிக் கூறும் போது "ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறுவதைத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது. இந்த அடிப்படையை முன்பே விரிவாக விளக்கிவிட்டோம். மேலும் இதற்கு சிறந்த உதாரணமாக பின்வரும் வசனத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா? அதை அநீதி இழைத்தோருக்குச் சோதனையாக நாம் ஆக்கினோம். அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் மரம். அதனுடைய பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றது.  அல்குர்ஆன் (37 : 62)

நரகத்தில் உள்ள மரத்தின் பாளை ஷைத்தானின் தலைகளைப் போன்று இருக்கும் என்று இந்த வசனத்தில் கூறப்படுகிறது. இங்கு ஷைத்தானின் தலைகளைப் போல் என்று கூறப்பட்டிருப்பதை நேரடிப் பொருளில் விளங்கமாட்டோம். மோசமான தோற்றம் கொண்டதாக இருக்கும் என்பதை விவரிப்பதற்காக இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்றே புரிந்துகொள்வோம்.

இது போன்று தான் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியமாக எழுப்பப்படுவான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். மோசமான நிலையில் எழுப்பப்படுவான் என்பது தான் இந்த வசனத்தின் பொருளே தவிர ஷைத்தானால் பைத்தியத்தை ஏற்படுத்த முடியும் என்றக் கருத்தில் புரிந்துகொள்ளக்கூடாது.

தீயகாரியங்களுக்கு அழைப்பு விடுவதைத் தவிர்த்து வேறெந்த அதிகாரமும் ஷைத்தானிற்கு வழங்கப்படவில்லை என்று குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவ்வாறிருக்க இதற்கு மாற்றமாக ஷைத்தானிற்கு பைத்தியத்தை ஏற்படுத்த முடியும் என்று விளங்குவது குர்ஆனிற்கு முரணாகும்.

இஸ்லாமிய நம்பிக்கைப்படி பைத்தியங்கள் எந்தத் தீமை செய்தாலும் அவர்கள் பாவிகளாக மாட்டார்கள். ஷைத்தானின் வேலை அனைவரையும் பாவிகளாக்குவது தான்.

பைத்தியமாக்கப்படுவதால் ஷைத்தானுக்கு நட்டமே தவிர லாபம் இல்லை. எனவே ஷைத்தான் யாரையும் பைத்தியமாக்கும் அதிகாரத்தையும் பெறவில்லை. அது அவனது அலுவலும் இல்லை.

ஷைத்தான் நோயை ஏற்படுத்துவானா?

ஷைத்தானிற்கு நோயை ஏற்படுத்தும் அதிகாரம் உள்ளது என்று வாதிடுபவர்கள் கீழ்கண்ட வசனத்தை தங்கள் வாதத்திற்கு ஆதாரமாக காட்டுகிறார்கள்.

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).  அல்குர்ஆன் (38 : 41)

அய்யூப் நபியவர்களுக்கு நோயும் துன்பமும் ஏற்பட்ட போது ஷைத்தான் இவ்வாறு செய்து விட்டானே எனக் கூறினார்கள் (திருக்குர்ஆன் 38:41). இதனால் நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கருதக் கூடாது.

நோயை ஏற்படுத்துவது அல்லாஹ்விற்கு மட்டும் உரிய ஆற்றலாக இருந்தாலும் வெறுக்கத்தக்க விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்ற மரியாதை நிமித்தமாகவே நோயை ஷைத்தான் ஏற்படுத்தியதாக அய்யூப் (அலை) அவர்கள் கூறினார்கள்.

குர்ஆனில் வேறொரு இடத்தில் அய்யூப் (அலை) அவர்கள் செய்த இதே பிரார்த்தனையை அல்லாஹ் விவரிக்கிறான்.

"எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்'' என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.  அல்குர்ஆன் (21 : 83.84)

38:41 வது வசனத்தின் சரியான பொருள் என்ன என்பதை இந்த வசனம் தெளிவாக விவரிக்கிறது.

21:83 இந்த வசனத்தில் ஷைத்தானைப் பற்றி எதுவும் பேசப்படவில்லை. எனக்குத் துன்பம் நேர்ந்துவிட்டது என்றே அய்யூப் (அலை) அவர்கள் கூறியதாக உள்ளது.

தனக்கு துன்பம் ஏற்பட்டுவிட்டது என்பதைத் தான் அய்யூப் (அலை) அவர்கள் ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று  குறிப்பிடுகிறார்கள்.

தீயகாரியங்களுக்கு அழைப்பு விடுவதைத் தவிர்த்து வேறெந்த அதிகாரமும் ஷைத்தானிற்கு  வழங்கப்படவில்லை என்று குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவ்வாறிருக்க இதற்கு மாற்றமாக ஷைத்தானால் நோயை ஏற்படுத்த முடியும் என்று விளங்குவது குர்ஆனிற்கு முரணாகும்.

நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை.  அல்குர்ஆன் (16 : 99)

குறிப்பாக நல்லடியார்களின் மீது ஷைத்தானிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மேலுள்ள வசனம் தெரிவிக்கிறது. அய்யூப் நபிக்கு நோயை ஏற்படுத்தும் ஆற்றல் ஷைத்தானிற்கு இருந்தது என்று நம்பினால் அய்யூப்  (அலை) அவர்கள் நம்பிக்கைக் கொண்டவராக இருக்கவில்லை. இறைவனை மட்டும் சாந்தவராக இருக்கவில்லை. எனவே தான் ஷைத்தான் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினான் என்று கூற வேண்டிய அவல நிலை ஏற்படும்.

எனவே  அய்யூப் (அலை) அவர்களுக்கு ஷைத்தான் நோயை ஏற்படுத்தவில்லை என்று நம்புவது தான் ஈமானிற்கு உகந்ததும் அய்யூப் நபியை கண்ணியப்படுத்தியதாகவும் அமையும்.

மேலும் நோய்களை ஏற்படுத்துவது இறைவனின் அதிகாரமாக இருக்கும் போது இந்த ஆற்றல் ஷைத்தானிற்கு உண்டு என்று நம்புவது இணைவைப்பில் கொண்டு போய் விடும்.

தீங்கை ஏற்படுத்துவது இறைவனின் அதிகாரம்

நன்மையை ஏற்படுத்துவது இறைவனுடைய அதிகாரமாக இருப்பது போல் தீமைகளை ஏற்படுத்துவதும் இறைவனுக்கு மட்டும் உரிய அதிகாரமாகும். இதில் நபிமார்கள் உட்பட எப்படிப்பட்ட மகானிற்கும் எள்ளளவு கூட ஆற்றல் இல்லை என்கிற போது ஷைத்தானிற்கு இந்த ஆற்றல் இருப்பதாக நினைப்பது தவறாகும்.

"அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்?'' என்று கேட்பீராக! அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.  அல்குர்ஆன் (48 : 11)

தீமைகளை செய்ய சக்தி பெற்றிருப்பதை இறைத் தன்மைக்கு அளவுகோலாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

"அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?'' என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன். அல்குர்ஆன் (5 : 76)
 
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!  அல்குர்ஆன் (10 : 106)


ஜின்களும் ஷைத்தான்களும் ஒன்றா?

ஒட்டு மொத்த ஜின் இனத்தையும் ஷைத்தான்கள் என்று குறிப்பிடும் வழக்கத்தை ஹதீஸ்களில் நம்மால் காணமுடிகிறது. குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பொதுவாக ஜின்களை குறிப்பதற்கு ஷைத்தான்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக் காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.  அல்குர்ஆன் (27 : 17)

 
ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்கு சுவைக்கச் செய்வோம்.  அல்குர்ஆன் (34 : 12)


மேற்கண்ட இரு வசனங்களிலும் சுலைமான் நபிக்கு ஜின்களை வசப்படுத்திக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இதேக் கருத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் வேற இடங்களில் கூறும் போது ஜின்கள் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஷைத்தான்கள் என்று கூறுகிறான். இதை பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.

அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப் படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது. ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம்.  அல்குர்ஆன் (38 : 36)


ஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக  இருந்தோம்.  அல்குர்ஆன் (21 : 82)

இவ்விருவசனங்களும் ஜின்களை ஷைத்தான்கள் என்று குறிப்பிடுகிறது. ஜின்களை ஷைத்தான்கள் என்று குறிப்பிடலாம் என்பதை தெளிவாக இதன் மூலம் அறியமுடிகிறது.

மனிதர்களின் ஆதிப்பிதாவாக ஆதம் (அலை) அவர்கள் இருப்பது போல் ஜின்களின் ஆதிப்பிதா ஷைத்தானாகும். ஜின்கள் அனைவரும் ஷைத்தானின் வழிதோன்றலாகும். ஜின்கள் அனைவரும் ஷைத்தானின் வழிதோன்றலாக இருப்பதால் தான் அல்லாஹ் ஜின்களுக்கு ஷைத்தான்கள் என்ற பெயரை சூட்டுகிறான்.

ஜின் இனத்தை கூறும் போது ஷைத்தான்கள் என்று ஹதீஸ்களிலும் குறிப்பிடப்படுகிறது. இதை பின்வரும் ஹதீஸ்களில் பார்க்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் "உ(க்)காழ்' எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்கள் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது விண் கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக்கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) தம் கூட்டத்தாரிடம் திரும்பி வந்தனர். அப்போது அக்கூட்டத்தார்கள், "உங்களுக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டனர். ஷைத்தான்கள், "வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டுவிட்டது; எங்கள் மீது விண்கொள்ளைகள் ஏவிவிடப்பட்டன'' என்று பதிலüத்தனர். "புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்க வேண்டும். எனவே, நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்கüலும் பரவிச்) சென்று புதிதாக நிகழ்ந்துவிட்ட இ(ந்த சம்பவத்)தை என்னவென்று ஆராயுங்கள்'' என்றனர்.

அவ்வாறே அந்த ஷைத்தான்கள் திரும்பிச் சென்றனர். (அவர்கள் எல்லாத் திசைகளையும் ஆராய்ந்தபடி) திஹாமா எனும் (மக்கா) பகுதியை நோக்கி வந்தபோது, "உகாழ்' சந்தையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் "நக்லா' எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்'' என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று, "எங்கள் கூட்டாத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே இறைவனுக்கு (இனி) நாங்கள் (ஒரு போதும்) யாரையும் இணையாகக் கருதமாட்டோம்'' என்று கூறினர். (இதையொட்டி) அல்லாஹ் தன் தூதருக்கு "நபியே! நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது...'' என்று தொடங்கும் (இந்த 72ஆவது அத்தியாயத்தை)அருளினான்.

ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி "வஹி'யின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.  அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)  நூல் : புகாரி (773)

வானுலகத்தில் வானவர்கள் பேசிக்கொள்ளும் செய்தியை ஒட்டுக்கேட்பதற்காக ஜின்கள் சென்றன என்று குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகிறது. இந்த ஜின்களில் குர்ஆனை செவிமடுத்து அல்லாஹ்வை ஈமான் கொண்ட ஜின்களும் உண்டு. மேற்கண்ட ஹதீஸீல் ஜின்கள் என்று கூறுவதற்கு பதிலாக ஷைத்தான்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஜின்கள் ஷைத்தானுடைய வழிதோன்றல்கள் என்பதால் தான் ஜின்களை பொதுவாக ஷைத்தான்கள் என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது என்பதை அறியலாம்.

கெட்ட ஜின்களும் ஷைத்தான்களும் ஒன்றா?

ஷைத்தான்கள் எனப்படுபவர்கள் ஜின்களில் கெட்டவர்கள் தான் என்று சிலர் கூறுகிறார்கள். இதற்கு மாற்றமாக கெட்ட ஜின்கள் வேறு. ஷைத்தான் வேறு என்றக் கருத்தையும் சிலர் கூறுகிறார்கள். இவ்விரண்டில் கெட்ட ஜின்களும் ஷைத்தான்களும் ஒன்றே என்றக் கருத்துத் தான் சரியானதாகும்.

நல்ல ஜின்களுக்கு ஷைத்தான்கள் என்ற இப்பெயரை சூட்டாமல் கெட்ட ஜின்களை குறிப்பிடும் போது மட்டும் இப்பெயரை கூறும் வழக்கமும் உள்ளது. ஷைத்தானிடத்தில் இருக்கின்ற கெட்ட குணம் இருப்பதால் கெட்ட குணம் உள்ள ஜின்களுக்கு ஷைத்தான்கள் என்று கூறப்படுகிறது. இதை பின்வரும் வசனத்திலிருந்து விளங்கலாம்.
 
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சி கரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். (முஹம்மதே) உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!  அல்குர்ஆன் (6 : 112)


ஜின்களிலும் மனிதர்களிலும் நபிமார்களுக்கு இடஞ்சல் கொடுத்த தீயவர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். கெட்ட ஜின்கள் என்பதும் ஷைத்தான்கள் என்பதும் ஒன்று என்பதை இதன் மூலம் அறியலாம்.

ஷைத்தான் உருமாறுவானா?

ஷைத்தான் தான் விரும்பும் போது விரும்பிய வடிவில் உருவமாறும் ஆற்றல் கொண்டவன் என்று பரவலாக பலரால் நம்பப்படுகிறது. சில ஆதாரங்களை தவறாக புரிந்து கொண்டதின் விளைவாக இப்படியொரு தவறான கருத்து பரவியுள்ளது.

ஆனால் உண்மையில் இவ்வாரு நம்புவதற்கு ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை. விரும்பிய வடிவில் உருமாறும் ஆற்றல் ஷைத்தானிற்கு வழங்கப்படவுமில்லை.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner