Wednesday, February 8, 2012

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 3

ஜின்களும் பேய்களும் ஒன்றா?

பேய்களுக்கும் கெட்ட ஆவிகளுக்கும் ஜின்கள் என்று சொல்லப்படுவதாக சிலர் தவறான கருத்தை கூறி வருகிறார்கள். இக்கருத்து இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பானதாகும்.

ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருக்கும் இறந்து போனவர்களின் ஆவிகள் தான் பேய்கள் என்று பேய்நம்பிக்கை உள்ளவர்கள் கருதுகிறார்கள். இந்த நம்பிக்கையை குர்ஆனும் ஹதீஸ்களும் பொய்யென நிராகரிக்கிறது.

இறந்தவர் நல்லவராக இருந்தாலும் தீயவராக இருந்தாலும் அவரின் உயிர் அல்லாஹ்வின் பிடியில் இருக்கிறது. அவனது கடுமையான பிடியிலிருந்து ஆவிகள் தப்பித்து வரவே முடியாது என்று திருக்குர்ஆன் கூறும் போது ஆவிகள் பூமியில் சுற்றித்திரிகிறது என நம்புவது குர்ஆனிற்கு எதிரானதும் மூடநம்பிக்கையுமாகும். எனவே பேய்கள் இருப்பதாக நம்பக்கூடாது.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.  அல்குர்ஆன் (39 : 42)

பேய் நம்பிக்கை பொய்யானது என்பதை விரிவாக விளக்கும் வகையில் பேய் பிசாசு என்ற தலைப்பில் தனி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரம் அறிய அதை வாங்கி படித்துக்கொள்ளுங்கள்.

பேய்கள் என்று எதுவும் பூமியில் இல்லை. பேய் நம்பிக்கை என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக நம்புவதாகும். ஆனால் ஜின்களை நம்புவது பேய்களை நம்புவது போன்றதல்ல.

ஜின்கள் என்று ஒரு கூட்டம் தற்போதும் பூமியில் வாழ்ந்து வருவதாக குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகிறது. ஜின்களை மறுத்தால் குர்ஆனையும் ஹதீஸ்களை மறுத்ததாகிவிடும். எனவே ஒவ்வொருவரும் ஜின்கள் இருப்பதாக அவசியம் நம்பியாக வேண்டும்.

பேய் நம்பிக்கைக்கும் ஜின் நம்பிக்கைக்கும் உள்ள இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் இரண்டும் ஒன்று என்று சாதாரண அறிவு படைத்தவர் கூட கூறமாட்டார்.
 
ஜின்களின் வகைகள்

ஜின்களின் உடல் உறுப்புக்கள் மற்றும் தோற்றம் குறித்து விரிவான தகவல் ஹதீஸ்களில் கிடைக்கப்பெறவில்லை. காற்றில் பறந்து செல்பவர்கள் பூமியில் தங்கி வாழ்பவர்கள் நாய் மற்றும் பாம்பு வடிவில் திரிபவர்கள் இவ்வாறு மூன்று வகையினர் இருப்பதாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜின்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு வகையினருக்கு இறக்கைகள் உண்டு. இவர்கள் காற்றில் பறந்து செல்வார்கள். நாய்களும் பாம்புகளும் இன்னொரு வகையினராகும். இன்னொரு வகையினர் (ஆங்காங்கே) தங்கிக்கொண்டும் (வேறு இடங்களுக்கு) பயனித்துக்கொண்டும் இருப்பார்கள். அறிவிப்பவர் : அபூ சஃலபா (ரலி) நூல் : முஷ்கிலுல் ஆஸார் (2473)

பாம்வு வடிவிலும் நாய் வடிவிலும் சில ஜின்கள் இருக்கிறார்கள் என்று மேலுள்ள ஹதீஸ் கூறுகிறது. இன்றைக்கு உள்ள எல்லா நாய்களும் பாம்புகளும் ஜின்கள் தான் என்று புரிந்து விடக்கூடாது. இவ்வாறு புரிவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

பாம்புகளிலும் நாய்களிலும் ஜின்களாக இருப்பவையும் உண்டு. ஜின்களாக இல்லாதவையும் உண்டு என்று கூறுவதே ஏற்புடையதாகும். பாம்புகளில் இவ்வாறு இரு வகை இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.

பாம்பு வடிவில் ஜின்கள்

நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்த போது  அபூ லுபாபா (ரலி) அவர்கள் என்னைக் கூப்பிட்டு, "அதைக் கொல்லாதீர்கள்'' என்று சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு  வீடுகüல் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்'' என்று பதிலளித்தார்கள்.  அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)  நூல் : புகாரி (3298)

வீட்டில் வசிக்கும் பாம்புகளை மட்டுமே நபி (ஸல்) அவர்கள் ஜின்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதிலிருந்து வீட்டிற்கு வெளியே சுற்றித்திரியும் பாம்புகள் ஜின்கள் இல்லை என்பதும் அவற்றை கொல்ல வேண்டும் என்பதும் தெளிவாகிறது.

வீடுகளில் தென்படுகின்ற பாம்புகள் அனைத்தும் ஜின்கள் தான் என்று விளங்கவிடக்கூடாது. பாம்புகளை வீட்டில் காணும் போது அவை வெளியேறுவதற்காக மூன்று நாட்கள் பொறுத்திருக்க வேண்டும். வெளியேறாவிட்டால் அவற்றை கொல்ல வேண்டும் என்று ஹதீஸில் உள்ளது.

ஹிஷாம் பின் ஸுஹ்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அப்போது அவர்கள் தொழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அப்போது வீட்டின் மூலையிலிருந்த பேரீச்சமர காய்ந்த குச்சிகளுக்கு இடையிருந்து ஏதோ அசையும் சப்தத்தை நான் கேட்டேன். உடனே நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒரு பாம்பு இருந்தது. அதைக் கொல்வதற்காக நான் துள்ளிக் குதித்து எழுந்தேன்.

உடனே அபூசயீத் (ரலி) அவர்கள் அமருமாறு எனக்குச் சைகை செய்தார்கள். ஆகவே, நான் அமர்ந்துகொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபின் அவ்வீட்டிலிலிருந்த ஓர் அறையை எனக்குச் சுட்டிக்காட்டி, "இந்த அறையை நீர் காண்கிறீரா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்' என்றேன். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இந்த அறையில் புதிதாகத் திருமணமான எங்கள் இளைஞர் ஒருவர் இருந்தார். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அகழ்ப்போருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, அந்த இளைஞர் நண்பகல் நேரங்களில் தம் வீட்டாரிடம் திரும்பிச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். (அவர் திரும்பிச் செல்லப்போனபோது) அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது ஆயுதத்தை உம்முடனேயே வைத்துக்கொள். ஏனெனில், பனூ குறைழா யூதர்களை உம்முடைய விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள். அவ்வாறே அந்த மனிதர் (தம்முடன்) ஆயுதத்தை எடுத்துக்கொண்டார்.

பிறகு அவர் திரும்பி வந்தபோது அவரது (புது) மனைவி வீட்டு வாசலில் இரு நிலைக் கால்களுக்கிடையே நின்றுகொண்டிருந்தாள். உடனே அவர் அவள்மீது எறிவதற்காக ஈட்டியை நோக்கித் தமது கையைக் கொண்டு சென்றார். உடனே அவருடைய மனைவிக்கு ரோஷம் ஏற்பட்டு, "ஈட்டி எறிவதை நிறுத்துங்கள். (முதலிலில்) வீட்டுக்குள் நுழைந்து, நான் வெளியே வந்து நின்றதற்கு என்ன காரணம் என்பதைப் பாருங்கள்'' என்று கூறினாள். அவ்வாறே அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்த போது, அங்கு மிகப் பெரிய பாம்பு ஒன்று படுக்கை விரிப்பின் மீது சுருண்டு கிடந்தது.

உடனே அவர் அதன் அருகில் ஈட்டியைக் கொண்டுசென்று அதன் உடலுக்குள் ஈட்டியைச் செருகினார். பிறகு அறையிலிலிருந்து வெளியே வந்து வீட்டி(ன் வளாகத்தி)ல் அந்த ஈட்டியை நட்டு வைத்தார். அந்த ஈட்டியில் கிடந்து பாம்பு துடித்தது. பிறகு அவ்விருவரில் யார் முதலிலில் இறந்தார்கள். அந்த பாம்பா? அல்லது அந்த இளைஞரா என்பது தெரியவில்லை. (பாம்பும் இளைஞரும் இருவருமே இறந்துவிட்டனர்.)

உடனே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தகவல் தெரிவித்தோம்; "அவரை (மீண்டும்) உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் நண்பருக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்'' என்று சொன்னார்கள்.

பிறகு "மதீனாவில் ஜின்கள் சில இஸ்லாத்தைத் தழுவியுள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் (பாம்பு வடிவத்தில்) கண்டால், அதற்கு நீங்கள் (வெளியேறுமாறு) மூன்று நாட்கள் அறிவிப்புச் செய்யுங்கள். அதற்குப் பின்னரும் அது உங்களுக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான்தான்'' என்றார்கள்.  அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)  நூல் : முஸ்லிம் (4502)

மூன்று நாட்களுக்குள் வெளியேறிவிடுகின்ற பாம்புகளில் ஜின்களும் இருக்கலாம். ஜின்களாக இல்லாதவையும் இருக்கலாம். அறிவிப்புச் செய்து மூன்று நாட்கள் கடந்த பிறகும் வீட்டில் பாம்புகள் தென்பட்டால் நிச்சயமாக அவை ஜின்களாக இருக்க முடியாது. அவை மனிதனிற்கு கேடு விளைவிக்கும் சாதாரண பாம்பு என்பதால் அதைக் கொல்லுமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

நாய் மற்றும் பாம்புகளின் தோற்றத்தை மட்டுமே நம்மால் காணமுடியும். ஜின்களின் உண்மையான தோற்றத்தை காண இயலாது. ஒரு குறிப்பிட்ட நாயையோ அல்லது பாம்பையோ ஜின் என்று நம்மால் முடிவு செய்யவும் இயலாது.

நாய் மற்றும் பாம்பு வடிவில் உள்ள ஜின்களால் சாதாரண நாய்களாலும் பாம்புகளாலும் என்ன செய்ய முடியுமோ அதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது. பொதுவாக ஜின்களுக்கு வழங்கப்பட்டுள்ள அளப்பறிய ஆற்றல்கள் இந்த வகை ஜின்களுக்கு வழங்கப்படவில்லை.

மதீனாவிற்கு மட்டும் உரிய சட்டம்

பாம்புகளைக் கண்டால் எடுத்த எடுப்பில் கொன்றுவிடாமல் வெளியேறுமாறு மூன்று நாட்கள் வரை அறிவிப்புச் செய்ய வேண்டும் என்ற இந்த சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு மட்டும் பிரத்யேகமானதாக கூறியுள்ளார்கள். 

மதீனாவில் ஜின்கள் சில இஸ்லாத்தைத் தழுவியுள்ளன என்று நபியவர்கள் கூறியதிலிருந்து இச்சட்டம் மதீனாவிற்கு மட்டும் உரியது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மதீனாவில் இஸ்லாத்தைத் தழுவிய ஜின்கள் சில உள்ளன. உங்களில் ஒருவர், அவற்றில் எதையேனும் இந்தக் குடியிருப்புகளில் (பாம்பின் உருவில்) கண்டால் மூன்று நாட்கள் அவற்றுக்கு அவர் அறிவிப்புச் செய்யட்டும். அதற்குப் பின்னரும் அது அவருக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடட்டும்! ஏனெனில், அது ஷைத்தான் ஆகும். அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)  நூல் : முஸ்லிம் (4504)

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner