Monday, March 12, 2012

கொள்கை விளக்கம் - பி.ஜே - தொடர் 8

தர்கா ஸியாரத்

மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர். இந்த அடிப்படையில் கப்ருகளை ஸியாரத் செய்யலாம். (நூல்: முஸ்லிம் 1777)

அவ்லியாக்கள் எனப்படுவோரின் கப்ருகளை ஸியாரத் செய்யக் கூடாது.

'புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன்' என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். 'அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் இல்லை' என்றார். 'இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது இல்லை' என்றார். 'அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.  அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)  நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கே இணைவைப்பாளர்களின் வழிபாடு, திருவிழா போன்றவை இருக்கக் கூடாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.

ஸியாரத் கட்டாயக் கடமை இல்லை. அது ஒரு சுன்னத் தான். இந்த சுன்னத்தை நிறைவேற்ற இணை வைப்பவர்களின் வழிபாடும், திருவிழாவும் நடக்கும் இடத்திற்கு எப்படிச் செல்ல முடியும்?

மரணத்தை நினைவுபடுத்தவே ஸியாரத் அனுமதிக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அவ்லியாக்கள் எனப்படுவோரின் அடக்கத்தலத்தில் பிரம்மாண்டமான கட்டிடம்

மனதை மயக்கும் நறுமணம்

கண்களைப் பறிக்கும் அலங்காரங்கள்

ஆண்களும், பெண்களும் கலப்பதால் ஏற்படும் கிளுகிளுப்பு
 

ஆடல், பாடல், கச்சேரிகள்

இவற்றுக்கிடையே மறுமையின் நினைவும், மரணத்தின் நினைவும் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது.

எந்தக் காரணத்திற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதித்தார்களோ அந்தக் காரணமே இல்லாத போது இதை எப்படி அனுமதிக்க முடியும்?
விழுந்து கும்பிடுவது

கையேந்திப் பிரார்த்திப்பது

பாத்தியா என்று மக்களை ஏமாற்றுதல்

தலையில் செருப்பைத் தூக்கி வைத்தல்

விபூதி, சாம்பல் கொடுத்தல்

மார்க்கம் தடை செய்த கட்டடம்

என்று ஏராளமான தீமைகளை தர்காக்கள் உள்ளடக்கியுள்ளன.
 
தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.  நூல்: முஸ்லிம் 78

அங்கே செல்பவர்கள் தமது கைகளால் அத்தீமைகளைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயலாவிட்டால் நாவால் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இவ்வாறு நடக்கத் துணிவு உள்ளவர்கள் இந்த இரண்டு வழிகளிலும் அதைத் தடுக்கலாம். அதற்கும் இயலாதவர்கள் மனதால் வெறுத்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தக் காரணங்களாலும் தர்காக்களுக்கு ஸியாரத் செய்வதற்காகச் செல்லக் கூடாது. பொது கப்ருஸ்தான்களுக்குச் சென்று மரணத்தையும், மறுமையும் நினைவுபடுத்திக் கொள்வதே சுன்னத்தாகும்.

மறுமையை நினைவுபடுத்திட, ஒவ்வொரு ஊரிலும் எளிமையான கபரஸ்தான் இருக்கும் போது, செலவும் சிரமமுமில்லாமல் இந்த சுன்னத்தை நிறைவேற்றி அதன் நன்மையை அடைய வழி இருக்கும் போது, தர்காக்களை நாடிச் செல்ல எந்த நியாயமும் இல்லை.

ஒற்றைப்படையாகக் கொடுத்தல்

எதையெடுத்தாலும் ஒற்றை எண்ணிக்கையில் தான் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களிடம் பரவலாகக் காணப்படுகின்றது.

இது சரியா?

'இறைவன் ஒற்றையானவன், ஒற்றையை அவன் விரும்புகிறான்' என்பது நபிமொழி.  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 6410

ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு தடவை குளிப்பாட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.  நூல்: புகாரி 1253, 1254, 1257, 1259, 1261, 1263,

பெருநாளின் போது ஒற்றை எண்ணிக்கையில் பேரீச்சம் பழங்களை நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிடுவார்கள். நூல்: புகாரி 953

ஒற்றை எண்ணிக்கையின் முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

எதையெடுத்தாலும் ஒற்றை எண்ணிக்கையில் தான் செய்ய வேண்டும் என்று இதற்கு அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது.

ஏனெனில் 33 தடவை ஸுப்ஹானல்லாஹ், 33 தடவை அல்ஹம்துலில்லாஹ் கூறுமாறு போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹு அக்பர் என்று 34 தடவை கூறுமாறு கற்றுத் தந்துள்ளனர்.

ஒரு பிரச்சினைக்கு சாட்சி கூறுபவர்கள் இருவர் என்று குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 100 என்று ஹதீஸ்கள் கூறுகின்றன.

எல்லாவற்றையும் ஜோடியாகப் படைத்ததாகக் குர்ஆன் கூறுகிறது.

மஃரிபைத் தவிர மற்ற தொழுகைகள் இரட்டை ரக்அத்களையே கொண்டுள்ளன.

இது போல் இன்னும் அனேகம் உள்ளன.

ஒற்றையாகவும், இரட்டையாகவும் பல காரியங்கள் குர்ஆன் ஹதீஸ்களில் கூறப்படுகின்றன.

எவற்றை ஒற்றையாகச் செய்ய வேண்டும் என்றோ, இரட்டையாகச் செய்ய வேண்டுமென்றோ ஆதாரம் கிடைக்கின்றதோ அவற்றை அவ்வாறு செய்ய வேண்டும். மற்ற விஷயங்களில் நம் வசதி போல் செய்து கொள்ளலாம் என்று விளங்க வேண்டும்.

ஒரு பொருளின் விலை இரண்டு ரூபாய் என்று வியாபாரி கூறினால் ஒற்றையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று ரூபாய் கொடுக்க முடியாது.

100 ரூபாய் என்று பேசிய பிறகு ஒரு ரூபாயை ஒட்டுவது ஏமாளித்தனமாகும்.

இது போன்ற மூட நம்பிக்கைகளுக்குச் சான்றாக அந்த ஹதீஸை எடுத்துக் கொள்ளக் கூடாது.

இரட்டையாகவும் பல காரியங்கள் மார்க்கத்தில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொண்டு மேற்கண்ட ஹதீஸை ஆராயும் போது அதன் பொருள் தெளிவாகும்.

'இறைவன் (வித்ராக) ஒற்றையாக இருக்கிறான். ஒற்றையாக இருப்பதையே விரும்பவும் செய்கிறான்' என்று பொருள் கொள்வது உசிதமாகும்.

பொதுவாக மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் தனித்திருப்பதை விரும்புவதில்லை. துணையுடனிருப்பதையே விரும்புகின்றனர். தனிமை போரடிக்கக் கூடியதாகத் தான் பெரும்பாலும் அமையும்.

ஆனால் படைத்த இறைவன் தனித்தவனாக இருப்பதுடன் தனித்தவனாக இருப்பதை விரும்பவும் செய்கிறான். தனக்குப் போரடிக்காமலிருக்க வேண்டுமென்பதற்காக மனைவி, மக்கள், சுற்றம் எதுவும் வேண்டும் என்று விரும்புவதில்லை. தனிமை அவனுக்குப் போரடிப்பதில்லை. அவனுக்கே அது தான் விருப்பமானது.

இவ்வாறு பொருள் கொள்ள ஏற்றதாக அந்த ஹதீஸ் இருப்பதுடன் பொருத்தமானதாகவும் அமைகின்றது.

மற்றவர்களின் செயல்களும் ஒற்றையாக இருப்பதை அவன் விரும்புகிறான் என்று பொருள் கொண்டால் ஒற்றையில்லாத பல விஷயங்களை அவன் மார்க்கமாக ஆக்கியிருக்க மாட்டான்.

கண்கள், காதுகள், கால்கள் என்று எத்தனையோ இரட்டைகள் அவன் படைப்பில் உள்ளன. இரட்டையாக எத்தனையோ மார்க்க அனுஷ்டானங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் ஒற்றையாக இறைவன் ஆக்கவில்லை.

அவன் ஒற்றையானவன் (தான்,) ஒற்றையாக இருப்பதையே விரும்புகிறான்.
 
அவன் ஒற்றையானவன். (மற்றவர்களின் செயல்களும்) ஒற்றையாக இருப்பதையே விரும்புகிறான்.

இப்படி இரண்டு விதமான பொருளுக்கும் அந்த ஹதீஸ் இடம் தந்தாலும் முதலாவது பொருளே சரியானதாக நமக்குத் தோன்றுகிறது. அவ்வாறு பொருள் கொள்ளும் போது முரண்பாடு ஏற்படுவதில்லை.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner