
சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் படித்துக் காட்டியதை அவர்கள் பின்பற்றினார்கள். சுலைமான் நிராகரிக்கவில்லை; மாறாக, ஷைத்தான்களே நிராகரித்தனர். அவர்கள் மக்களுக்குச் சூனியத்தையும், பாபிலோனில் இருந்த ஹாரூத், மாரூத் ஆகிய இரு வானவர்களுக்கு அருளப்பெற்ற(தாக அவர்களே சொல்லிக்கொண்ட)தையும் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால், அவ்விருவரும் "நாங்கள் (இறைவனிடமிருந்து வந்துள்ள) ஒரு சோதனையாக உள்ளோம். எனவே, (இறையை) நிராகரிக்க வேண்டாம்" என்று கூறாத வரை யாருக்கும் அதைக் கற்றுக் கொடுப்பதில்லை (என்றும்),
ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவினை உருவாக்கக்கூடியதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றனர் (என்றும் கூறிவந்தனர்). அதன் மூலம் அல்லாஹ்வின் உத்தரவின்றி யாருக்கும் அவர்கள் தீங்கிழைக்க இயலாது. அவர்கள் தமக்குத் தீங்களிப்பதையும் பயன் தராததையுமே கற்கின்றனர். இதைக் கொள்முதல் செய்தவனுக்கு மறுமையில் எந்தப் பேறும் கிடையாது என்பதை அவர்கள் உறுதியாகத் தெரிந்தே உள்ளனர். எதற்குப் பதிலாகத் தங்களை அவர்கள் விற்றார்களோ அது மிகவும் தீயது. (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
இந்த மொழி பெயர்ப்பு முன்னர் நாம் எடுத்துக்காட்டிய மொழி பெயர்ப்புகளில் இருந்து வேறுபட்டுள்ளதைக் கவனிக்கவும்.
முன்னர் நாம் சுட்டிக்காட்டிய இரு மொழி பெயர்ப்புகளைப் போல் மொழி பெயர்த்தால் அது இணை கற்பித்தலில் தள்ளிவிடும் என்று அஞ்சி இதை அல்லாஹ்வின் கூற்றாக காட்டாத வகையில் மொழி பெயர்த்துள்ளனர்.
ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவினை உருவாக்கக்கூடியதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றனர் (என்றும் கூறிவந்தனர்)
கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தக் கூடியதை கற்றுக் கொண்டார்கள் என்ற சொல் அல்லாஹ்வின் கூற்று அல்ல. மாறாக யூதர்கள் இப்படி சொல்லிக் கொண்டார்கள் என்ற கருத்தை தருவதற்காக (என்றும் கூறிவந்தனர்) என்று அடைப்புக்குறிக்குள் போட்டுள்ளனர்.
யூதர்கள் இப்படி சொல்லிக் கொண்டார்கள் என்பதை அல்லாஹ் எடுத்துச் சொல்கிறான் என்ற கருத்தைத் தரும் வகையில் மொழி பெயர்ப்பு செய்துள்ளனர்.
சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று யூதர்கள் கூறினார்கள் என்று அர்த்தம் செய்தால் இது சூனியக் கட்சியினருக்கு ஆதாரமாகாது. யூதர்கள் அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப சொன்னார்கள் என்ற செய்தியைத் தவிர வேறு ஒரு கருத்தும் இதில் இல்லை.
ரஹ்மத் ட்ர்ஸ்ட் நிறுவன அறிஞர்கள் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று அல்லாஹ் எப்படிச் சொல்வான் என்றும் அப்படிச் சொன்னால் பல வசனங்களுக்கு முரணாகி விடும் என்றும் அஞ்சி மேற்கண்ட சொல் யூதர்களின் சொல் என்ற கருத்தைத் தந்துள்ளனர்.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் அர்த்தம் வராத வகையிலும், குர்ஆனின் மற்ற வசனங்களுக்கு முரணில்லாத வகையிலும் இப்படி மொழி பெயர்த்தால் அதில் நமக்கு மறுப்பு ஏதும் இல்லை.
சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது என்று சொல்பவர்கள் தமது கூற்றுக்கு ஆதாரமாக இன்னொரு வாதத்தையும் எடுத்து வைப்பார்கள்.
திருக்குர் ஆனில் 113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட போது இறங்கியதாகவும் ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்து நபிகள நாயகம் (ஸல்) குணமடைந்தார்கள் என்பது அவர்களின் வாதம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட முடியாது என்பதை தக்க ஆதாரங்களுடன் நாம் முன்னர் நிரூபித்துள்ளோம்.
அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற செய்தியே பொய் என்று ஆகிவிடும் போது அதற்காகத் தான் இவ்விரு வசனங்களும் அருளப்பட்டன என்ற செய்தியும் கட்டுக்கதையாகி விட்டது.
அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற செய்தி இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் உள்ளதால் அது கட்டுக் கதை என்கிறோம்.
ஆனால் இந்த அத்தியாயங்கள் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டது குறித்து அருளப்பட்டது என்பதற்கு ஏற்கத்தக்க அறிவிப்பாளர் கிடையாது எனும் போது இது எப்படி ஆதாரமாக அமையும்?
இது குறித்து இப்னு கஸீர் அவர்கள் செய்யும் விமர்சனத்தைப் பாருங்கள்!
وقال الأستاذ المفسر الثعلبي في تفسيره قال ابن عباس وعائشة رضي الله عنهما كان غلام من اليهود يخدم رسول الله صلى الله عليه وسلم.... ثم بعث النبي صلى الله عليه وسلم عليا والزبير وعمار بن ياسر فنزحوا ماء البركة كأنه نقاعة الحناء ثم رفعوا الصخرة وأخرجوا الجف فإذا فيه مشاطة رأسه وأسنان من مشطه وإذا فيه وتر معقود فيه اثنا عشر عقدة مغروزة بالإبرة فأنزل الله تعالى السورتين فجعل كلما قرأ آية انحلت عقدة ووجد رسول الله صلى الله عليه وسلم خفة حين انحلت العقدة الأخيرة فقام كأنما نشط من عقال وجعل جبريل عليه السلام يقول بسم الله أرقيك من كل شيء يؤذيك من حاسد وعين الله يشفيك فقال يا رسول الله أفلا ينفذ الخبيث نقتله فقال رسول الله صلى الله عليه وسلم أما أنا فقد شفاني الله وأكره أن أثير على الناس شرا هكذا أورده بلا إسناد فيه غرابة وفي بعضه نكارة شديدة ولبعضه نكارة شديدة ولبعضه شواهد مما تقدم والله أعلم -
تفسير ابن كثير ج: 4 ص: 575
திருக்குர்ஆன் விரிவுரையாளரான ஸஃலபி அவர்கள் தமது தப்சீரில் கூறுகிறார். நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்ட பின் அலீ, சுபைர், அம்மார் பின் யாசிர் ஆகியோரை நபியவர்கள் அனுப்பினார்கள். அவர்கள் கிணற்றின் நீரை இறைத்தார்கள். அந்த நீர் மருதானி சாறைப் போல் இருந்தது. பின்னர் பாறாங்கல்லை நீக்கினார்கள். பேரீச்சம் பாளையின் உறையை வெளியே எடுத்தார்கள். அதில் நபியவர்களின் தலைமுடியும் அவர்களின் சீப்புடைய பற்களும் இருந்தன. ஊசியில் கோர்க்கப்பட்ட நூலும் பன்னிரண்டு முடிச்சுக்கள் போடப்பட்டு இருந்தன. அப்போதுதான் 113, 114 அத்தியாயங்கள் அருளப்பட்டன. ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்தன...... இப்படி ஒரு செய்தியை ஸஃலபீ கூறுகிறார். ஆயிஷா, இப்னு அப்பாஸ் கூறியதாக மட்டும் தான் இதில் உள்ளது. அவ்விருவரும் யாரிடம் சொன்னார்கள் என்று நூலாசிரியர் வரை இணைக்கும் அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் கூறியுள்ளார். இதில் சொல்லப்படும் சில விஷயங்கள் ஆதாரப்பூர்வமான செய்தியுடன் முரண்படுவதாக உள்ளது. யாரும் சொல்லாததாகவும் உள்ளது என்று இப்னு கஸீர் கூறுகிறார்.
அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் சொல்லப்படும் எந்த ஹதீசும் கட்டுக்கதைக்கு நிகரானது என்பதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
இது போல் இப்னு ஹஜர் அவர்களும் விமர்சனம் செய்துள்ளார்கள்.
وقد وقع في حديث بن عباس فيما أخرجه البيهقي في الدلائل بسند ضعيف في آخر قصة السحر الذي سحر به النبي صلى الله عليه وسلم أنهم وجدوا وترا فيه إحدى عشرة عقدة وأنزلت سورة الفلق والناس وجعل كلما قرأ آية انحلت عقدة وأخرجه بن سعد بسند آخر منقطع عن بن عباس أن عليا وعمارا لما بعثهما النبي صلى الله عليه وسلم لاستخراج السحر وجدا طلعة فيها إحدى عشرة عقدة فذكر نحوه -
فتح الباري ج: 10 ص: 225
11 முடிச்சுக்கள் போடப்பட்டதாகவும் அது குறித்து பலக் நாஸ் ஆகிய அத்தியாயங்கள் அருளப்பட்டதாகவும் ஒவ்வொரு வசனம் அருளப்பட்டவுடன் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்ததாகவும் பைஹகீ அவர்கள் பலவீனமான அறிவிப்பாளர் தொடருடன் தலாயிலுன்னுபுவ்வா என்ற தமது நூலில் கூறுகிறார். அது போல் இப்னு சஅது இப்னு அப்பாஸ் வழியாக அறிவிப்பாளர் தொடர் அறுந்த செய்தியைப் பதிவு செய்துள்ளார் என்று இப்னு ஹஜர் விமர்சனம் செய்துள்ளார்.