Sunday, December 7, 2014

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 5

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இமாம் அல்பானியின் பார்வை

1. எனது சமுதாயத்தில் அப்தால்கள் (என்ற நல்லடியார்களை அறிந்து கொள்வதற்கான) அடையாளம் அவர்கள் யாரையும் எப்போதும் சபிக்க மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்தில் பர் என்பவர் கிதாபுல் அவ்லியா என்ற தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அல்பானீ அவர்கள் குறைகளைக் கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இதன் கருத்தையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு குறை காணுகிறார். ஹதீஸைச் சரிகாணுவதற்கான இரண்டு அளவுகோலையும் இங்கே அல்பானீ பயன்படுத்துகிறார்.

السلسلة الضعيفة - (ج 3 / ص 474)

قلت : و هذا المتن منكر دون شك أو ريب ، بل هو موضوع ، فإن اللعن ، قد صدر منه صلى الله عليه وسلم أكثر من مرة ، و قد أخبر عن ذلك هو نفسه صلى الله عليه وسلم في غير ما حديث ، و قد خرجت طائفة منها في السلسلة الأخرى ( 83 و 85 و 1758 ) ، فهل الأبدال أكمل من رسول الله صلى الله عليه وسلم ؟ !

எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமின்றி இந்தச் செய்தி மோசமான கருத்தைக் கொண்டதாக உள்ளது. ஏன் இது இட்டுக்கட்டப்ப.ட்டது. (என்று கூட சொல்லலாம்). ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் பல முறை சபித்துள்ளார்கள். இதை அவர்களே பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள். (நபியவர்கள் சபித்ததாக வரும்) பல ஹதீஸ்களை இன்னொரு சில்சிலாவில் நான் பதிவு செய்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட இந்த அப்தால்கள் (நல்லடியார்கள்) முழுமையடைந்தவர்களா?

நூல் : சில்சிலதுல் லயீஃபா பாகம் : 3 பக்கம் : 474


குறையுள்ள தொடரைக் கொண்ட செய்திக்கும் குறையில்லாத தொடரைக் கொண்ட செய்திக்கும் இந்த அளவுகோலைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

இப்னு சய்யிதின்னாஸ்


நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது ஆபூதாலிபுடன் ஷாம் நாட்டிற்கு கூட்டமாக வியாபாரத்திற்காகச் சென்றார்கள். செல்லும் வழியில் ஒரு பாதிரியார் நபி (ஸல்) அவர்களின் தன்மைகளைக் கவனத்தில் கொண்டு இவர் நபியாவார் என்ற தகவலை அவர்களுக்கு அறிவித்தார். ரோம் நாட்டிற்கு நபி (ஸல்) அவர்களை அழைத்துச் சென்றால் அவர்கள் நபியைக் கொன்று விடுவார்கள் என்பதால் அங்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தினார். ரோம் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களை அழைத்துச் செல்வதற்காக ஏழு நபர்கள் அங்கு வந்தார்கள். இவர்களுடன் நபியவர்களை அனுப்புவதற்கு அபூதாலிப் ஒத்துக் கொண்டார். அபூபக்கர் அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிலாலை அனுப்பினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி)

நூல் : திர்மிதி (3553), ஹாகிம் (பாகம் : 1 பக்கம் : 672)


இவ்வாறு திர்மிதி, ஹாகிம் போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு சய்யித் அவர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாவிட்டாலும் இதன் கருத்தில் குறை உள்ளது என்று கூறுகிறார்.

عيون الأثر  جزء 1 - صفحة 105 

قلت : ليس في إسناد هذا الحديث إلا من خرج له في الصحيح.... و مع ذلك ففي متنه نكارة و هي إرسال أبي بكر مع النبي صلى الله عليه و سلم بلالا و كيف و أبو بكر حينئذ لم يبلغ العشر سنين فإن النبي صلى الله عليه و سلم أسن من أبي بكر بأزيد من عامين و كانت للنبي صلى الله عليه و سلم تسعة أعوام على ما قاله أبو جعفر محمد بن جرير الطبري و غيره أو اثنا عشر على ما قاله آخرون و أيضا فإن بلالا لم ينتقل لأبي بكر إلا بعد ذلك بأكثر من ثلاثين عاما فإنه كان لنبي خلف الجمحيين و عندما عذب في الله على الإسلام اشتراه أبو بكر رضي الله عنه رحمة له و استنفاذا له من أيديهم

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் புகாரி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட அறிவிப்பாளர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. இத்துடன் இந்தச் செய்தியில் தவறான கருத்து உள்ளது. நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்கர் பிலாலை அனுப்பினார்கள் என்பதே அந்தத் தவறாகும். அபூபக்கர் அன்றைக்கு பத்து வயதைக் கூட அடையாமல் இருக்கும் போது இது எப்படிச் சாத்தியமாகும்?

நபி (ஸல்) அவர்கள் அபூபக்கரை விட இரண்டு வயது மூத்தவர்கள். தப்ரீ போன்றோரின் கூற்றுப்படி நபி (ஸல்) அவர்களுக்கு அன்றைய நேரத்தில் வயது ஒன்பதாக இருந்தது. மற்றவர்களின் கூற்றுப்படி 12 ஆக இருந்தது. மேலும் பிலால் அவர்கள் இச்சம்பவம் நடந்து 30 வருடங்களுக்குப் பிறகு தான் அபூபக்கரின் பொறுப்பில் வருகிறார். (ஆனால் இச்செய்தியில் நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருக்கும் போதே அபூபக்கரின் பொறுப்பில் பிலால் இருந்ததாக உள்ளது.)

இதற்கு முன்பு அவர் பனூஹலஃப் என்ற கூட்டத்தாரிடம் இருந்தார். இஸ்லாத்திற்காக பிலால் அல்லாஹ்வின் விஷயத்தில் கொடுமை செய்யப்பட்ட போது அவரின் மீது இரக்கப்பட்டும் அவரை அவர்களின் கையிலிருந்து பாதுகாப்பதற்காகவும் அபூபக்கர் பிலாலை அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கினார்.

நூல் : உயூனுல் அஸர் பாகம் : 1 பக்கம் : 105


ஒரு ஹதீஸைச் சரிகாணுவதாக இருந்தால் அதன் தொடர் மற்றும் தகவல் ஆகிய இரண்டையும் உரசிப் பார்க்க வேண்டும் என்பதை அறிஞர்களின் இந்தக் கூற்றுக்கள் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேற்கண்ட செய்திகள் அல்லாமல் இன்னும் இது போன்று அறிஞர்கள் பல இடங்களில் நடந்துள்ளார்கள். இதனடிப்படையில் நம்பகமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்ற செய்திகளில் உள்ள பிழையினால் அச்செய்தி மறுக்கப்பட வேண்டியது என்று தீர்ப்பும் வழங்கியுள்ளார்கள்.

அறிவிப்பாளர்களை எடைபோடுவது கூட செய்தியைச் சரிகாணும் நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது. இதனால் தான் பல அறிவிப்பாளர்களுக்கு அவர்கள் அறிவிக்கும் செய்திகளைக் கவனித்து வலிமையானவர் என்றும் மோசமானவர் என்றும் அறிஞர்கள் தீர்ப்பு அளிப்பார்கள்.

ஒரு அறிவிப்பாளர் நல்லவராக இருந்தாலும் அவரின் வழியாக பல மோசமான தகவல்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தால் மோசமான செய்திகளை அறிவிக்கக் கூடியவர் என்று கூறி அவரை நிராகரித்து விடுவார்கள். அதே நேரத்தில் மற்றவர்கள் அறிவிப்பதைப் போல் கூட்டாமல் குறைக்காமல் ஹதீஸ்களை அறிவித்தால் அவர் உயர்ந்த மனனத் தன்மை கொண்டவர் உறுதி மிக்கவர் என்று தீர்ப்பு சொல்வார்கள்.

இதிலிருந்து அறிஞர்கள் ஹதீஸின் கருத்தைக் கவனிப்பதில் எவ்வளவு அக்கரை காட்டியுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

நம்பகமானவர்கள் தவறு செய்ய மாட்டார்களா?


குர்ஆனிற்கு மாற்றமாக ஹதீஸ் வந்தால் இதில் நம்பகமான ஆட்கள் இருந்தாலும் இவர்களில் யாராவது தவறு செய்திருப்பார்களே தவிர நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிற்கு மாற்றமாக சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நாம் கூறுகிறோம். அது எப்படி நல்லவர்களாகவும் உறுதிமிக்கவர்களாகவும் உள்ள அறிவிப்பாளர்களிடமிருந்து தவறு வரும் என்று இதை அங்கீகரிக்காதவர்கள் கேட்கிறார்கள்.

மனிதர்களாகப் பிறந்த எவரும் எந்தத் தவறும் செய்யாமல் இருக்க முடியாது. இது அல்லாஹ் ஏற்படுத்திய நியதி. சாதாரண மனிதன் கூட விளங்கிக் கொண்ட உண்மை இது. இதனால் தான் சில நபித்தோழர்கள் குர்ஆனிற்கு மாற்றமாக சில ஹதீஸ்களைச் சொல்லும் போது ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த நபித்தோழர்கள் நல்லவர்கள் என்று சான்று தந்ததோடு தவறாக விளங்கியிருப்பார்கள் என்று கூறினார்கள்.

இதையெல்லாம் சொன்னாலும் இவர்கள் எதர்கெடுத்தாலும் ஹதீஸ் கலையில் இப்படி உள்ளதா? யாராவது உங்களுக்கு முன்னால் இது போன்று சொல்லியுள்ளார்களா? என்று கேட்பார்கள். எனவே இதற்கான சான்றுகளை ஹதீஸ் கலையிலிருந்து வழங்குவது நல்லதாகும்.

இமாம் அஹ்மத் பின் ஹம்பல் :


العلل - (ج 1 / ص 20)

لم يقتصر أهل الحديث على جمع التراجم بل بحثوا دقيقا في مروياتهم حتى روايات الثقات المعروفين منهم ولم يعتمدوا على كونهم ثقات ولم يفعوهم من البحث والنقد. فإن الثقة قد يهم ويخطى، فطرة الله التي فطر الناس عليها. فبحثوا في رواياتهم التي وهموا أو أخطأوا فيها، هذا ما عرف بعلم علل الحديث.

அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார் : ஹதீஸ் கலை அறிஞர்கள் (அறிவிப்பாளர்களின்) வரலாறுகளைத் தொகுத்ததோடு முடித்துக் கொள்ளவில்லை. மாறாக அறிவிப்பாளர்களில் அறியப்பட்ட நம்பகமானவர்களின் அறிவிப்புகள் உட்பட (அனைத்து) அறிவிப்பாளர்களின் அறிவிப்புகளிலும் நுட்பமாக ஆராய்ந்தார்கள். அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்கிறார்களே என்பதை மட்டும் அறிஞர்கள் சார்ந்திருக்கவில்லை. நல்ல அறிவிப்பாளர்களையும் கூட ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடவில்லை.

ஏனென்றால் நம்பகமானவர் சிலவேளை தவறிழைப்பார். அல்லாஹ் மக்களை இந்த இயற்கையான அடிப்படையில் தான் படைத்திருக்கிறான். எனவே ஹதீஸ் கலை அறிஞர்கள் அறிவிப்பாளர்கள் எந்த அறிவிப்புகளில் தவறு செய்தார்களோ அந்த அறிவிப்புகளை ஆராய்ந்தார்கள். இல்மு இலலில் ஹதீஸ் (ஹதீஸில் உள்ள குறைகளைப் பற்றிய கல்வி) என்று இதற்குب சொல்லப்படும்.

நூல் : அல்இலல் பாகம் : 1 பக்கம் : 20

இமாம் தஹபீ :


تهذيب التهذيب ج: 7 ص: 208

والثقة قد يهم في الشيء

நம்பகமானவர் சிலவேளை சில விஷயங்களில் தவறு செய்வார்.

இமாம் சுயூத்தி :


تدريب الراوي ج: 1 ص: 75

وإذا قيل هذا حديث صحيح فهذا معناه أي ما اتصل سنده مع الأوصاف المذكورة فقبلناه عملا بظاهر الاسناد لا أنه مقطوع به في نفس الأمر لجواز الخطأ النسيان على الثقة

இது சஹீஹான செய்தி என்று சொல்லப்பட்டால் இதன் பொருள் என்னவென்றால் (முன்பு) கூறப்பட்ட தன்மைகளுடன் இதன் தொடர் முழுமை பெற்றுள்ளது என்று தான் அர்த்தம். எனவே அறிவிப்பாளர் தொடரின் வெளிப்படையை வைத்து அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்வோம். நல்லவர் கூட மறந்து தவறு செய்ய வாய்ப்புள்ளதால் உண்மையில் இது உறுதி செய்யப்பட்ட விஷயம் தான் என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 75

மஹ்மூத் தஹ்ஹான் :


المراد بقولهم : (هذا حديث صحيح ) أن الشروط الخمسة السابقة قد تحققت فيه لا أنه مقطوع بصحته في نفس الأمر لجواز الخطأ والنسيان على الثقة .

இது சரியான செய்தி என்று அறிஞர்கள் சொன்னால் முன்னால் சென்ற ஐந்து நிபந்தனைகள் இந்தச் செய்தியில் பெறப்பட்டுள்ளது என்பது தான் அதன் பொருள். உண்மையில் அந்தச் செய்தி உறுதி செய்யப்பட்டது என்ற அர்த்தம் அல்ல. ஏனென்றால் உறுதி மிக்கவரிடத்தில் கூட தவறும் மறதியும் வர வாய்ப்புண்டு.

நூல் : தய்சீரு முஸ்தலஹில் ஹதீஸ் பக்கம் : 36


நம்பகமானவர்கள் குர்ஆனிற்கு மாற்றமாக அறிவிக்கும் போது இவர்களில் யாரோ தவறு செய்துள்ளார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்து விடுகிறது. குர்ஆனிற்கு முரண்பாடாக அறிவிப்பதை வைத்து இவர்கள் தவறு செய்துள்ளார்கள் என்று கூறுகிறோமே தவிர நாமாக யூகமாகக் கூறவில்லை. இந்த அடிப்படையில் தான் குர்ஆனிற்கு மாற்றமாக நம்பகமானவர்கள் அறிவித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறோம்.

நாம் எந்த ஹதீஸ்களைக் குர்ஆனிற்கு மாற்றமாக உள்ளது என்று கூறி மறுக்கிறோமோ அதில் உள்ள நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஏனைய ஹதீஸ்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தவறாக விளங்கிவிடக் கூடாது.

குர்ஆனிற்கு முரண்படாதவாறு நம்பகமானவர்கள் அறிவித்தால் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால் இந்த ஹதீஸ்களில் அவர்கள் தவறு செய்தார்கள் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. நல்லவர்கள் முறையாக அறிவிப்பார்கள் என்ற பொதுவான நிலையைக் கவனித்து அவர்கள் அறிவிக்கும் செய்திகளை ஏற்றுக் கொள்வோம். தவறு செய்திருக்க வாய்ப்புள்ளது என்ற யூகத்தை இங்கு புகுத்தினால் உலகத்தில் யாரும் யாருடைய அறிவிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner