Monday, December 29, 2014

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 11

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
 

புதிய ஆதாரங்கள்!


ஆதாரம் : 1

இஸ்லாத்தில் நிர்பந்தம் இருக்கிறது என்ற மோசமான கருத்தை நிலை நாட்ட பின் வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை முஹம்மது" அல்லாஹ்வின் தூதர் என்று மனிதர்கள் உறுதியாக நம்பி தொழுகையை நிலைநிறுத்தி ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போர் புரிய வேண்டுமென்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தமது உயிர் உடைமைகளை என்னிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வார்கள் இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (25)


இஸ்லாத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வரை அவர்களிடம் போர் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். எனவே வாளால் இஸ்லாம் பரவியது என்று இஸ்லாமிய விரோதிகள் கூறும் கூற்று உண்மை தான் என்று இவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.

நமது விளக்கம்

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது இவர்கள் கூறுவது சரி போலத் தெரியும். ஆனால் போர் புரிவதற்கு இஸ்லாம் வகுத்துள்ள விதிமுறைகளைக் கவனித்தால் இந்த ஹதீஸை இவ்வாறு விளங்கக் கூடாது என்ற முடிவிற்கே நியாயமானவர்கள் வருவார்கள். திருக்குர்ஆன் அழகான இந்த விதிமுறைகளைக் கூறுகிறது.

வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர் :

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் (2 : 190)

தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.

அல்குர்ஆன் (9 : 13)


சொந்த ஊரை விட்டு விரட்டியவர்களுடன் தான் போர் :

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.

அல்குர்ஆன் (2 : 191)

"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்;

அல்குர்ஆன் (22 : 40)


போரிலிருந்து விலகிக்கொள்வோருடன் போரில்லை :


(போரிலிருந்து) விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் (2 : 192)

அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள் பெண்கள் சிறுவர்களுக்காகவே போர். போரை முதலில் துவக்கக் கூடாது :

"எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்து வாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

அல்குர்ஆன் (4 : 75)

"போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்'' என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன். "எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்;

அல்குர்ஆன் (22 : 39)


சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை :

(முஹம்மதே!) அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (8 : 61)

மதத்தைப் பரப்பப் போரில்லை :

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (2 : 256)

இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

அல்குர்ஆன் (9 : 6)

(ஏக இறைவனை) மறுப்பவர்களே!'' நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' என (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் (109)


குர்ஆன் மேற்கண்ட விதிமுறைகளைக் கூறுவதால் எதிர்த் தரப்பினர் சுட்டிக் காட்டிய ஹதீஸை குர்ஆனுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டே விளங்கிக் கொள்ள வேண்டும்.

1.    ஹதீஸில் இடம்பெற்றுள்ள மக்கள் என்ற வார்த்தை எல்லோரையும் எடுத்துக் கொள்ளாது மாறாக அநியாயமாகப் போர் செய்ய வருபவர்களை மாத்திரம் எடுத்துக் கொள்ளும்.

2.    மதத்தைப் பரப்புவதற்காகப் போரில்லை என்று குர்ஆன் கூறுவதால் இஸ்லாத்திற்கு பிறரைக் கொண்டு வருவதற்காகப் போர் செய்யுமாறு நபியவர்கள் கட்டளையிடப்பட்டார்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக அநியாயத்தைத் தட்டிக் கேட்பதற்காக அக்கரமக்காரர்களிடம் போர் செய்யும் போது அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதாக ஒத்துக் கொண்டால் இதற்கு மேல் அவர்களிடம் போரிடக் கூடாது. அக்கிரமத்தை ஒழிப்பது தான் போரின் நோக்கமே தவிர இஸ்லாத்திற்கு நிர்பந்தமாக இழுத்து வருவது நோக்கமல்ல. இஸ்லாமியர்களோடு இணைந்து கொள்கிறேன் என்று அவன் கூறுவதன் மூலம் போரை நிறுத்திக் கொள்ள விரும்புகிறான்.

அக்கிரமக்காரர்களுடன் செய்யும் போர் பின்வரும் காரணங்களால் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.

1.    அவர்கள் சாமாதானத்தை விரும்பினால் இதற்கு மேல் போர் செய்யக் கூடாது.

2.    ஜிஸ்யா வரி கொடுப்பதாகக் கூறினாலும் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

3.    இஸ்லாத்தில் இணைந்து கொள்வதாக கூறினாலும் போர் செய்வது கூடாது

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்த மூன்று காரணங்களில் ஒன்று மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஹீதீஸின் இறுதியில் இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தமது உயிர் உடைமைகளை என்னிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வார்கள் என்று இடம் பெற்றுள்ள இந்த வாசகம் இதைத் தெளிவாக உணர்த்துகிறது. பின்வரும் சம்பவங்கள் இது தான் இந்த ஹதீஸின் நோக்கம் என்பதைத் தௌவாக உணர்த்துகிறது.

மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் (நபி (ஸல்) அவர்களிடம்) இறை மறுப்பாளர்களில் ஒருவனை நான் சந்தித்தேன். அவன் என்னிடம் சண்டையிட்டான். அப்போது அவன் என் கைகளில் ஒன்றை வாளால் வெட்டித் துண்டித்து விட்டான். பிறகு அவன் என்னை விட்டு ஓடிப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடி (ஒளிந்து கொண்டு) அல்லாஹ்விற்கு அடிபணிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன் என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனைக் கொல்லாதே என்றார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே அவன் என் கையைத் துண்டித்து விட்டான். அதைத் துண்டித்த பிறகு தானே இதைச் சொன்னான் என்று கேட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனை நீ கொல்லாதே. அவ்வாறு நீ அவனைக் கொன்று விட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்து விடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன் அவனிருந்த (குற்றவாளி எனும்) நிலைக்கு நீ சென்று விடுவாய் என்று கூறினார்கள்.


அறிவிப்பவர் : மிக்தாத் (ரலி)

நூல் : முஸ்லிம் (155)


உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது : எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஹுரக்கா கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் போய்ச் சேர்ந்தோம். அவரை நாங்கள் சுற்றி வளைத்துக் கொண்ட போது அவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்ல அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன் நாங்கள் (திரும்பி) வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு இச்செய்தி எட்டவே அவர்கள் என்னிடம் உஸாமா அவர் லாயிலாஹ இல்லல்லாஹு என்று மொழிந்தப் பிறகுமா அவரைக் கொன்றாய்.? என்று கேட்டார்கள். அவர் உயிரைப் பாதுகாக்கவே (அவ்வாறு கூறினார்) என்று நான் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் அவர் லா யிலாஹ இல்லல்லாஹு என்று சொன்ன பிறகுமா அவரைக் கொன்றாய்? என்று (மீண்டும்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால் நான் (அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நான்றாயிருக்குமே (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே) என்று கூட ஆசைப்பட்டேன்.

அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல் : முஸ்லிம் (159)


ஆயுதத்தை அஞ்சித்தான் அவர் இவ்வாறு கூறினார் அல்லாஹ்வின் தூதரே என்று நான் சொன்னேன். அதை அவர் (உளப்பூர்வமாக) சொன்னாரா இல்லையா என்று அறிய அவருடைய இதயத்தை நீ பிளந்து பார்த்தாயா? என்று (கடிந்து) கேட்டார்கள்.

அறிவிப்பவர் : உஸாமா (ரலி)

நூல் : முஸ்லிம் (158)


அக்கிரமத்திற்கு எதிராக மட்டும் தான் போர் இருக்க வேண்டும். அக்கிரமத்திற்கு எதிராக நடத்தப்படும் போரில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக கூறி விட்டால் அவருடைய கூற்றைப் புறந்தள்ளிவிட்டு அவரைக் கொன்று விடக் கூடாது. மாறாக அவருடைய கூற்றை ஏற்று அவரைத் தாக்காமல் விட்டுவிட வேண்டும். இதைத் தான் எதிர்த் தரப்பினர்கள் எடுத்துக்காட்டிய ஹதீஸ் கூறுகிறது.

இஸ்லாம் அல்லாதவர்களின் மீது இஸ்லாத்தைத் திணிக்கக் கூடாது என்பதற்காகத் தான் ஜிஸ்யா என்ற வரியை இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்களின் செல்வங்களுக்கு ஜகாத் வாங்கப்படுவதைப் போல் இவர்களிடம் இந்த வரி வாங்கப்படும். இந்த வரியை செலுத்திக் கொண்டு இஸ்லாத்தை ஏற்காதவர்கள் தங்கள் கொள்கையில் இருந்து கொள்ளலாம்.

இஸ்லாம் நிர்பந்தத்தை ஏற்படுத்தும் மார்க்கமாக இருந்திருந்தால் இஸ்லாத்திற்கு வருவதைத் தவிர வேறு வழியே இல்லை. வராதவர்கள் கொல்லப்படுவார்கள் என்ற ஒரு சட்டத்தை மாத்திரம் கூறியிருக்கும். நிர்பந்தம் இல்லை என்பதாலே இதற்கான மாற்று வழியாக ஜிஸ்யாவை ஆக்கியுள்ளது.

ஆதாரம் : 2

மதம் மாறியவன் யாராக இருந்தாலும் அவனைக் கொல்ல வேண்டும் என்பதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதிமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. அவை

1.    திருமணமானவன் விபச்சாரம் செய்வது.

2.    ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாக கொலை செய்வது.

3.    ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை விட்டுவிட்டவன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : முஸ்லிம் (3465)

மார்க்கத்தை விட்டுவிட்டவனைக் கொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.

நமது விளக்கம்

மார்க்கத்தை விட்டு விட்டவன் என்ற சொல் இஸ்லாத்தை விட்டு முழுமையாக வெளியேறியவனை மட்டும் குறிக்காது. இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாமியக் கடமைகளைப் புறக்கணிப்பவனும் மார்க்கத்தை விட்டவன் தான். தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் மார்க்கத்தை விட்டவனாக இருக்க முடியும்.

உதாரணமாக இஸ்லாத்தை விட்டும் வெளியேறாமல் ஸகாத்தை மட்டும் மறுத்தவர்களிடத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் போர் செய்தார்கள். இவர்கள் வேறொரு மதத்திற்குச் சென்று விடவில்லை. மாறாக ஸகாத் என்ற தீனை விட்டுவிட்டார்கள்.

மேலும் இந்த ஹதீஸ் ஒரு முஸ்லிமை மூன்று காலக்கட்டத்தில் மட்டும் கொல்லலாம் என்று கூறுகிறது. முஸ்லிமைக் கொல்வதைப் பற்றி பேசுகிறதே தவிர மதம் மாறிய காஃபிர்களைப் பற்றி பேசவில்லை. எனவே ஹதீஸில் மூன்றாவதாக சொல்லப்பட்டவன் யாரென்றால் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து கொண்டே ஆட்சியாளருக்குக் கட்டுப்படாமல் எதிராகக் கிளம்பியவன் தான்

இஸ்லாத்தை முழுமையாக விட்டு விட்டவனை இந்தச் செய்தி குறிக்கும் என்று வைத்துக் கொண்டாலும் இந்த ஒரு தன்மையுடன் இன்னொரு தன்மையான ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறியவன் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துச் சொல்கிறார்கள்.

இந்த அடிப்படையில் ஒருவன் மதம் மாறினாலும் அவன் இஸ்லாமிய அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டுக் கொண்டு தான் விரும்பிய மார்க்கத்திற்குச் சென்றால் அவன் கொல்லப்பட மாட்டான். மாறாக அரசாங்கத்திற்குக் கட்டுப்படாமல் அதற்கு எதிராகக் கிளம்புபவன் தான் கொல்லப்படுவான். ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இதே மாதிரியான ஹதீஸ் இதைத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று தன்மைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலே தவிர (வேறெந்த நிலையிலும்) முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணம் முடித்த பிறகும் விபச்சாரம் செய்தவன் கல்லெரிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றே கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான் அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான் அல்லது நாடு கடத்தப்படுவான்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்

நூல் : நஸயீ (3980)


ஆதாரம் : 3

மதம் மாறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

அபூ மூஸா (ரலி) அவர்கள் கூறியதாவது : (யூதராயிருந்த) ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டுப் பின்பு யூதராக மாறி விட்டார். அந்த மனிதர் என்னிடம் இருந்த போது முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் வந்தார்கள். இவருக்கு என்ன? என்று முஆத் கேட்டார்கள். நான் இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டு யூதராகி விட்டார் என்று சொன்னேன். முஆத் (ரலி) அவர்கள் நான் இவருக்கு மரண தண்டனை அளிக்காதவரை அமர மாட்டேன். இது தான் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்பாகும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)

நூல் : புகாரி (7157)


மதம் மாறிய யூதரைக் கொல்ல வேண்டும். இது தான் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் தீர்ப்பு என்று முஆத் (ரலி) அவர்கள் கூறுவதால் மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று எதிர்த் தரப்பினர் கூறுகிறார்கள்.

நமது விளக்கம்

முஆத் (ரலி) அவர்கள் குர்ஆனுடைய ஒரு வசனத்தை அல்லது நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸைச் சுட்டிக்காட்டி இது அல்லாஹ்வுடைய தீர்ப்பு இன்னும் அவனது தூதருடைய தீர்ப்பு என்று கூறவில்லை. மாறாக எந்த ஆதாரத்தையும் காட்டாமல் பொதுவாகவே இப்படிச் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தீர்ப்பு என்றால் எந்த வசனத்தில் அல்லாஹ் மதம் மாறியவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளான்?. குர்ஆனில் அப்படி ஒரு கட்டளை இல்லவே இல்லை. மதம் மாறியவர்களைக் கொல்வது ரசூலுடைய தீர்ப்பு என்றால் ரசூல் எந்த ஹதீஸில் இவ்வாறு தீர்ப்பு வளங்கியுள்ளார்கள்? நபி (ஸல்) அவர்கள் மதம் மாறியவர்களைக் கொல்லுமாறு சொல்லவில்லை என்பதை மேலே நிரூபித்திருக்கிறோம்.

சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் கூறாததை அவர்கள் பெயரால் இட்டுக்கட்ட மாட்டார்கள் என்பதில் எள்ளளவும் நமக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு வசனத்தையோ அல்லது ஹதீஸையோ புரிந்து கொள்வதில் மனிதன் என்ற அடிப்படையில் தவறு அவர்களிடம் வர வாய்ப்புண்டு. அவர்கள் எந்த ஆதாரத்திலிருந்து இதை விளங்கினார்களோ அந்த ஆதாரத்திலிருந்து முறையாக இவர்கள் தீர்ப்பளித்திருக்கவும் வாய்ப்புள்ளது. புரிந்து கொள்வதில் தவறு ஏற்பட்டு தவறாக தீர்ப்பளிக்கவும் வாய்ப்புள்ளது.

 ஏனென்றால் இச்சட்டத்தை நேரடியாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதாக முஆத் (ரலி) அவர்கள் சொல்லவில்லை. அல்லது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு யாருக்காவது தீர்ப்பளித்ததைக் கண்டதாகவும் அவர்கள் கூறவில்லை. ஒரு ஹதீஸிலிருந்து தானாக விளங்கியும் இவ்வாறு கூற முடியும்.

சரியாகவும் தவறாகவும் கூறியிருக்க வாய்ப்பு இருக்கும் போது இதைக் கொண்டு வந்து நிறுத்தி ஒருவரைக் கொல்வது சம்பந்தமான விஷயத்தை நிறுவக் கூடாது.

இதற்குச் சிறந்த உதாரணமாக பின்வரும் செய்தியை எடுத்துக் கொள்ளலாம்.

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் பால்குடியைப் பற்றி ஏதோ கேட்கப்பட்டது. பால்குடி சகோதரியை அல்லாஹ் (திருமணம் புரிய) தடைசெய்துள்ளான் என்பதைத் தவிர வேறெதுவும் நமக்குத் தெரியாது என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். உடனே நான் முஃமின்களின் தலைவர் இப்னு ஜுபைர் அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ உறிஞ்சுப் பால் குடிப்பதால் பால்குடி உறவு ஏற்படாது என்று கூறுகிறார்கள் என்று கூறினேன். அதற்கு இப்னு உமர் அவர்கள் உனது மற்றும் உன்னுடன் இருக்கும் முஃமின்களின் தலைவரின் தீர்ப்பை விட அல்லாஹ்வின் தீர்ப்பு சிறந்தது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் தீனார்

நூல் : சுனனு சயீத் பின் மன்சூர் பாகம் : 3 பக்கம் : 30


ஒரு தடவை அல்லது இரு தடவை பால்குடிப்பதால் மட்டும் பால்குடி உறவு ஏற்படாது என்று இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் கூறுவது தான் சரி. ஏனென்றால் இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இப்னு உமர் (ரலி) அவர்கள் இதை மறுத்து கொஞ்சம் பால் குடித்துவிட்டாலே பால்குடி உறவு ஏற்பட்டு விடும் என்று கூறுகிறார்கள்.

ஏனென்றால் ஹதீஸில் சொல்லப்பட்ட இச்சட்டம் குர்ஆனில் இல்லை. இந்த ஹதீஸ் இப்னு உமருக்குக் கிடைக்காத காரணத்தினால் தவறாக விளங்கிக் கொண்டு அதை அல்லாஹ்வுடைய தீர்ப்பு என்று கூறுகிறார். இப்னு உமர் அல்லாஹ்வுடைய தீர்ப்பு என்று கூறி விட்டதால் அவர்கள் கூறுவதை ஏற்றுக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு ஜுபைர் கூறுவதை விட்டுவிட முடியுமா?

எனவே முஆத் (ரலி) அவர்கள் இது அல்லாஹ் மற்றும் அவனது தீர்ப்பு என்று எந்த ஆதாரத்தை வைத்துச் சொன்னார்களோ அந்த ஆதாரம் நமக்கு காண்பிக்கப்பட்ட பிறகு தான் இது உண்மையில் அல்லாஹ்வுடைய தீர்ப்பா இல்லையா? என்று முடிவு செய்ய முடியும்.

ஒரு பிரச்சனைக்கு சரியான முடிவைக் காணுவதாக இருந்தால் அது தொடர்பாக வரும் அனைத்து ஆதாரங்களையும் ஒன்று சேர்த்துத் தான் முடிவைக் காண வேண்டும். மதம் மாறியவர்களாக இருந்தாலும் அவர்கள் இஸ்லாமிய விரோதிகளாக மாறும் போது தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதை பல ஹதீஸ்களின் மூலம் முன்பே நிரூபித்தோம்.

எதிர்த் தரப்பினர் எடுத்துக் காட்டிய ஹதீஸில் யூதன் மதம் மாறி இஸ்லாத்திற்கு எதிராகச் சென்றவன் என்றோ அல்லது எதிரி அல்ல என்றோ இடம் பெறவில்லை. பொதுவாக மதம் மாறியவன் என்று தான் வருகிறது. இஸ்லாமிய விரோதியாக மாறியவனைத் தான் கொல்ல வேண்டும் என்று பல ஹதீஸ்கள் கூறுவதால் இந்த யூதன் இஸ்லாத்திற்கு விரோதமாகச் சென்றதால் முஆத் (ரலி) அவர்கள் கொல்லும் படி கூறினார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும். இது தான் ஹதீஸையும் நபித்தோழர்களின் செயலையும் இணைத்து விளங்கியதாக அமையும்.

மதம் மாறியதோடு எதிராகச் செல்பவனைக் கொல்ல வேண்டும் என்பதைத் தான் ஹதீஸ் சொல்கிறது என்பதை குர்ஆன் ஹதீஸ் வாயிலாகத் தெரிந்து கொண்டோம். கொல்லுங்கள் என்ற இந்தக் கட்டளை கூட கட்டாயம் கொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதல்ல. மாறாக இப்படிப்பட்டவர்களைக் கொலை செய்வது குற்றமல்ல. ஆகுமானது என்பதற்காகத் தான் சொல்லப்பட்டுள்ளது.

ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் இச்சட்டத்தை சிலருக்கு செயல்படுத்தியிருக்கிறார்கள். சிலருக்கு செயல்படுத்தாமலும் இருந்திருக்கிறார்கள். இத்தலைப்பு சம்பந்தமாக நாம் சுட்டிக் காட்டிய ஆதாரங்களிலிருந்தே இதைப் புரிந்து கொள்ள முடியும்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner