Sunday, January 11, 2015

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 15

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

கவிதை விமர்சித்த அறிஞர்கள்


இமாம் கஸ்ஸாலி அவர்கள் அஸ்ஸுன்னா என்ற தன்னுடைய நூலில் நாம் வைக்கின்ற கேள்விகளை முன்வைத்து இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் சொன்னது கிடையாது என்று தெரிவித்துள்ளார். இந்த ஹதீஸில் உள்ள விகாரத்தைக் குறைப்பதற்காக பல அறிஞர்கள் முயற்சி செய்துள்ளார்கள்.

ஆனால் இவர்கள் கொடுத்துள்ள எந்த விளக்கமும் பொருத்தமானதாக இல்லை. எந்த விளக்கம் கொடுத்தாலும் இதில் உள்ள சிக்கலுக்கு முழுமையான முடிவைக் காணமுடியாது என்று நஸயீ நூலிற்கு விரிவுரை எழுதிய நூருத்தீன் அஸ்ஸனதீ என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

அபூமன்சூர் சஆலபீ அவர்களும் இந்த ஹதீஸை மறுத்துள்ளார்கள். இப்னு ஹஜர் தஹபீ சூயூத்தி போன்றோர் தங்களது நூற்களில் இந்த அறிஞரின் கருத்துக்களைப் பல இடங்களில் பதிவு செய்துள்ளார்கள். இந்த அறிஞர் ஸமாருல் குலூப் என்ற தன்னுடைய நூலில் பின்வருமாறு இந்த ஹதீஸை மறுக்கிறார்.

ثمار القلوب  جزء 1 - صفحة 53 

( لطمة موسى ) تضرب مثلا لما يسوء أثره وفى أساطير الأولين أن موسى سأل ربه أن يعلمه بوقت موته ليستعد لذلك فلما كتب الله له سعادة المحتضر أرسل إليه ملك الموت وأمره بقبض روحه بعد أن يخبره بذلك فأتاه فى صورة آدمى وأخبره بالأمر فما زال يحاجه ويلاجه وحين رآه نافذ العزيمة فى ذلك لطمه فذهبت منها إحدى عينيه فهو إلى الآن أعور وفيه قيل ( يا ملك الموت لقيت منكرا ... لطمة موسى تركتك أعورا ) وأنا برىء من عهدة هذه الحكاية

மூஸா (அலை) அவர்கள் (மலக்கை) அடித்த சம்பவம் மோசமான தகவலுக்கு உதாரணமாகச் சொல்லப்படும். முன்னோர்களின் கட்டுக் கதைகளில் (பின்வருமாறு) இருக்கிறது. மரணத்திற்கு தயாராகிக் கொள்வதற்காக மூஸா தன்னுடைய இறைவனிடம் தான் மரணிக்கும் காலத்தை அறிவிக்குமாறு கேட்டார். மூஸா மரணித்தவுடன் வெற்றியடைவார் என்று அல்லாஹ் விதியாக்கிவிட்ட போது மூஸாவிடம் மரணத்தின் மலக்கை அனுப்பி அவரிடம் இந்தச் செய்தியை தெரிவித்த பின்பு அவரது உயிரைக் கைப்பற்றி வருமாறு மலக்கிற்கு அல்லாஹ் கட்டளையிட்டான். வானவர் மூஸாவிடம் மனிதவடிவில் வந்து விஷயத்தைக் கூறினார். தொடர்ந்து இருவரும் கடுமையாக விவாதித்துக் கொண்டும் தர்க்கித்துக் கொண்டும் இருந்தனர். இவ்விஷயத்தில் வானவர் தன்னை மிகைத்து விட்டதை மூஸா கண்ட போது வானவரை அடித்து விட்டார். இதனால் வானவரின் இரு கண்களில் ஒன்று போய் விட்டது. அவர் இன்று வரை ஒற்றைக்கண் கொண்டவராகவே இருக்கிறார். இது தொடர்பாக (பின்வரும் பாடல்) சொல்லப்பட்டுள்ளது.

மரணத்தின் மலக்கே (உனது கூற்றை) மறுத்தவரை நீ சந்தித்தாய்

மூஸா அடித்த அடி உன்னை ஒற்றைக்கண் உள்ளவராக்கிவிட்டது.

இச்சம்வத்தை சஆலபீ அவர்கள் பதிவு செய்து விட்டு இச்சம்பவத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறார்.

எனவே அல்லாஹ்விற்கும் ரசூல்மார்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் இது போன்ற தகவல்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்று ஒளிவு மறைவில்லாமல் கூறுவதே ஏற்புடையது.

5. நபிகள் நாயகம் (ஸல்) அன்னியப் பெண்ணுடன் பழகினார்களா?


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் துணைவியராக இருந்தார். ஒரு நாள் பகலில் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்ற போது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் நபி (ஸல்) அவர்களுக்குப் பேண் பார்த்து விடலானார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.

தொடர்ந்து உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக் கடலின் மத்தியில் பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் மன்னர்களாக அல்லது மன்னர்களைப் போன்று இருந்தார்கள் என்று கூறினார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதரே என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னேன். அப்போது எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) தலையை வைத்து விட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள். அப்போதும் நான் ஏன் சிரிக்கிறீர்கள்? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தோரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர்புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள் என்று முன்பு போலவே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு நான் அல்லாஹ்வின் தூதரே என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள் என்று கூறினார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்ட போது தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி (7001)


நபி (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தினரில் முதலில் கடலில் (சென்று) புனிதப் போர் புரியும் படையினர் (சொர்கம் புகுவதற்கான தகுதியை) ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள் என்று கூறினார்கள். இதைச் செவியுற்ற நான் அல்லாஹ்வின் தூதரே நான் அவர்களில் ஒருத்தியா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் அவர்களில் ஒருவர் தாம் என்று பதிலளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் எனது சமுதாயத்தினரில் சீசருடைய நகரத்தின் (பழைய கான்ஸ்டான்டி நோபிள் அல்லது தற்போதைய இஸ்தான்பூலின்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவார் என்று கூறினார்கள். அவர்களில் நானும் ஒருத்தியா? அல்லாஹ்வின் தூதரே என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஹராம் (ரலி)

நூல் : புகாரி (2924)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்துவிட்டு அவர்களுடைய தலையில் பேண் பார்த்து விடுவதற்காக உட்கார்ந்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்

நூல் : முஸ்லிம் (3535)

நபி (ஸல்) அவர்கள் தனது தலையை உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் வைத்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்

நூல் : முஸ்லிம் (3536)    



குர்ஆனிற்கும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களுக்கும் முரண்படும் செய்திகளில் மேற்கண்ட செய்தியும் ஒன்று.

நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் என்ற அன்னியப் பெண்ணிடம் அடிக்கடி வந்து செல்லும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள். உம்மு ஹராம் நபியவர்களுக்கு பேண் பார்த்து விட்ட போது நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராமின் மடியில் தூங்கி விட்டார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

ஒரு ஆண் ஒரு அன்னியப் பெண்ணிடத்தில் இது போன்று படுத்து உறங்குபவனாகவும் அடிக்கடி அங்கு சென்று வருபவனாகவும் இருந்தால் அவன் ஒழுக்கங்கெட்டவன் என்று மக்கள் கூறுவார்கள். சாதாரண எந்த ஒரு மனிதன் இதைச் செய்தாலும் அதை யாரும் அங்கீகரிக்காத போது நபி (ஸல்) அவர்கள் இதைச் செய்தார்கள் என்று எந்த ஒரு முஸ்லிமாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) மகத்தான குணம் கொண்டவர்கள்

நபி (ஸல்) அவர்களிடத்தில் மகத்தான குணம் இருப்பதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் அவர்களைப் பற்றி புகழ்ந்து சொல்கிறான். நபி (ஸல்) அவர்கள் அன்னியப் பெண்ணுடன் தோலும் தோலும் உரசும் நிலையில் இருந்தார்கள் என்று நம்பினால் நபி (ஸல்) அவர்கள் மோசமான குணத்தைக் கொண்டவர்களாக இருந்தார்கள் என்று கூற வேண்டிய நிலைவரும். நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

அல்குர்ஆன் (68 : 4)


அன்னியப் பெண்களைக் கண்டால் பார்வையைத் தாழ்த்துமாறு குர்ஆன் கட்டளையிடுகிறது. இதற்கு மாற்றமாக பார்ப்பதைத் தாண்டி அன்னியப் பெண்ணின் தோல் தன் மீது படும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்டார்கள் என்று கூறும் இந்த ஹதீஸை நம்பினால் குர்ஆனிற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் நடந்தார்கள் என்று நம்ப வேண்டிவரும்.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் (24 : 30)


எந்த அந்நியப் பெண்ணும் தன்னை தொட்டுவிடக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்கள். ஆண்கள் நபி (ஸல்) அவர்களின் கையை பிடித்து பைஅத் (உறுதிப் பிரமாணம்) செய்தார்கள். பெண்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் பைஅத் செய்ய வந்த போது அவர்களைத் தொடாமல் பேச்சின் மூலமாக பைஅத் செய்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபியே இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் அல்லாஹ்வுக்காக எதையும் இணை வைக்க மாட்டார்கள் திருட மாட்டார்கள் விபச்சாரம் செய்ய மாட்டார்கள் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்ய மாட்டார்கள் தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்ப மாட்டார்கள் நற்செயலில் உங்களுக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்று உறுதி மொழி அளித்தால் அவர்களிடம் உறுதி மொழி வாங்குங்கள் எனும் (60 : 12 ஆவது) இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் ஓதி வாய் மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்க மாட்டார்கள்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை அவர்களுக்குச் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (7214)


நபி (ஸல்) அவர்களிடத்தில் உறுதிப் பிரமாணம் செய்வதற்காக நான் பல பெண்களுடன் அவர்களிடத்தில் வந்தேன். அப்போது அவர்கள் உங்களுடைய சக்திக்கு உட்பட்டு உங்களால் முடிந்ததை (கடைப்பிடியுங்கள்). நான் பெண்களிடத்தில் கை கொடுத்து (பைஅத்) செய்ய மாட்டேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உமைமா (ரலி)

நூல் : இப்னு மாஜா (2865)


தன்னுடைய நடத்தையில் யாரும் குறை கண்டு விடக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் தனது நடவடிக்கைகளை மிகக் கவனமாக அமைத்துக் கொண்டார்கள். தான் தவறு செய்யாவிட்டாலும் பிறர் தவறாக நினைத்துவிட வாய்ப்பிருந்தால் அந்த இடத்தில் உண்மை நிலையை மக்களுக்கு அவர்கள் உணர்த்தாமல் இருந்ததில்லை.

நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருந்த போது அவர்களுடைய துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்கள் திரும்பச் சென்ற போது நபி (ஸல்) அவர்களும் (ஸஃபிய்யாவுடன்) (சிறிது தூரம்) நடந்து சென்றார்கள். அப்போது அன்சாரிகளில் இருவர் அவர்களைக் கடந்து சென்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் அழைத்து இவர் (வேறு யாருமல்லர். என் துணைவி) ஸஃபிய்யாதாம் என்று சொன்னார்கள். உடனே அவ்விருவரும் அல்லாஹ் தூயவன் (உங்கள் மீதா சந்தேகப்படுவோம்) என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஊடுருவியுள்ளான் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஸஃபிய்யா (ரலி)

நூல் : புகாரி (3281)


இவ்வளவு பேணுதலாக நடந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள் முறையின்றி உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் சென்று வந்திருக்க முடியாது. இந்த ஹதீஸ் முற்றிலும் நபி (ஸல்) அவர்களின் அழகிய குணத்திற்கு மாற்றமாக உள்ளது.

உம்மு ஹராம் மற்றும் நபி (ஸல்) ஆகிய இருவர் மட்டும் வீட்டில் இருந்ததாக ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் அங்கு இருந்ததாகச் சொல்லப்படவில்லை.

உம்மு ஹராம் (ரலி) அவர்களின் கணவர் உட்பட யாரும் இல்லாத போது நபி (ஸல்) அவர்கள் உம்முஹராமின் மடியில் படுத்து உறங்கினார்கள் என்று நம்புவது இஸ்லாத்தை விட்டும் நம்மை வெளியேற்றிவிடும். ஆணும் பெண்ணும் தனித்திருப்பதைத் தடை செய்த உத்தம நபி ஒரு போதும் உம்மு ஹாரமுடன் தனித்து இருந்திருக்க மாட்டார்கள்.

அன்னியப் பெண்களிடம் வந்து செல்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இந்த விசயத்தில் சமுதாயத்திற்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள்.

எந்த ஒரு கட்டளையிட்டாலும் அதை முதலில் நபி (ஸல்) அவர்கள் கடைபிடிப்பவர்களாக இருந்தார்கள். இந்நிலையில் சமுதாயத்திற்குத் தான் செய்த உபதேசங்களை மீறக் கூடியவர்களாக ஒரு போதும் நபி (ஸல்) அவர்கள் இருக்க மாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (அந்நியப்) பெண்கள் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல் : புகாரி (5232)


கணவனாகவோ அல்லது திருமணம் முடிக்கத் தகாத உறவினராகவோ இருந்தாலே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணிடத்திலும் தங்குவது கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் (4036)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் எவரும் (அன்னியப்) பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். ஏனென்றால் (தனித்திருக்கும் போது) ஷைத்தான் மூன்றாவது ஆளாக அவர்களுடன் உள்ளான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : அஹ்மத் (109)

எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?

நபி (ஸல்) அவர்களின் நன்னடத்தை குறித்து எதிரிகள் யாராலும் எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் செய்த ஏதாவது ஒரு தவறு கிடைக்காதா? உடனே மக்களி.டம் பரப்பிவிடலாமே என்று துடித்துக் கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கையில் எந்த அழுக்கையும் இவர்களால் காண முடியவில்லை என்பதால் அவர்களின் மீது ஒழுக்கம் அல்லாத வேறு விசயங்களில் இட்டுக் கட்டத் தொடங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் என்ற பெண்ணிடம் அடிக்கடி வந்து சென்று கொண்டு உம்மு ஹராமின் மடியில் படுத்து உறங்கினார்கள். உம்மு ஹராம் நபி (ஸல்) அவர்களுக்கு பேண் பார்த்து விட்டார்கள் என்ற நிகழ்வு உண்மையாக இருந்தால் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விமர்சிப்பதற்கு இந்நிகழ்வு எதிரிகளுக்கு கிடைத்த வலுவான ஆதாரமாக இருந்திருக்கும்.

இதை வைத்து நபியவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்ததாக எந்த நூலிலும் பதிவு செய்யப்படவில்லை. இது போன்ற சம்பவம் நடக்கவில்லை என்பதால் இதைப் பற்றி எதிரிகளும் பேசவில்லை.

முரண்பாடுகள்

நபி (ஸல்) அவர்கள் தவறான நடத்தை உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதைக் காட்டுகின்ற இந்த ஹதீஸ் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு மாற்றமாக இருப்பதினால் இந்த ஒரு அளவுகோலே இது தவறான செய்தி என்பதற்குப் போதுமான சான்றாகும்.

இதில் காணப்படுகின்ற முரண்பாடுகள் இந்த ஹதீஸ் பொய்யானது என்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் தன் தலையை வைத்ததாக முஸ்லிமில் (3536) வது செய்தி கூறுகிறது. உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் உறங்கியதாக புகாரியில் (2800) வது செய்தி கூறுகிறது.

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்களுக்கு மனைவியாக இருந்த போது நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராமிடம் வந்து உறங்கியதாக புகாரியில் இடம்பெற்றுள்ள 7002 வது செய்தி கூறுகிறது. இந்நிகழ்வு நடந்த பிறகு தான் உபாதா (ரலி) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களை மணந்து கொண்டதாக முஸ்லிமில் இடம்பெற்றுள்ள 3536 வது செய்தி கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் மடியில் படுத்துக் கொண்டிருந்த நிலையில் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டு பேண் பார்த்ததாக முஸ்லிமில் (3535) வது செய்தியும் (3535) வது செய்தியும் கூறுகிறது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் உறங்கும் போது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் தன் தலையை கழுவிக் கொண்டிருந்ததாக அபூதாவுதில் இடம் பெற்றுள்ள 2131 வது செய்தி கூறுகிறது.


கருத்துப் பிழை

இந்த ஹதீஸ் குர்ஆனிற்கும் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரண்படுவதோடு இதில் சொல்லப்பட்ட சிறப்புகளைக் கவனிக்கும் போது இட்டுக்கட்டப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் இரண்டு கூட்டத்தார்களைச் சிறப்பித்துச் சொல்கிறார்கள். அவர்களில் முதல் வகையினர் கடல்வழியாகப் பிரயாணம் செய்து போர் புரிபவர்கள். இவர்கள் முஆவியா (ரலி) அவர்களின் கூட்டத்தார்கள் என்று ஹதீஸிலே சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாவது வகையினர் சீசருடை நகரத்தை நோக்கி போர்புரிவார்கள் என்று சொல்லப்படுகிறது. முதன் முதலில் சீசருடைய நகரத்தை நோக்கி போர்புரிந்தவர் முஆவியா (ரலி) அவர்களின் மகன் யசீத் ஆவார். தந்தை மகன் ஆகிய இருவரைப் பற்றி சிறப்பித்து இங்கு சொல்லப்படுகிறது.

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் உஸ்மான் (ரலி) அவர்களுக்கும் முஆவியா (ரலி) அவர்களுக்கும் மத்தியில் பிரச்சனைகள் தோன்றுகின்றன. இதனால் இயக்க வெறிபிடித்தவர்கள் தங்களுடைய தலைவரைப் போற்றியும் எதிராளியை இகழ்ந்தும் ஹதீஸ்களை இட்டுக்கட்ட ஆரம்பித்தார்கள். இதனால் தான் ஹதீஸ்கள் தொகுக்கப்பட வேண்டிய நிலை வந்தது.

இந்த ஹதீஸ் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக இருப்பதினால் முஆவியா (ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் இயக்கவெறி பிடித்தவர்கள் முஆவியாவையும் யஸீதையும் சிறப்பித்துச் சொல்வதற்காக இதை நபி (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டிக் கூறியிருக்க அதிக வாய்ப்புள்ளது.

முஆவியா மற்றும் யஸீத் ஆகிய இருவரின் படையுடன் இணைந்து கொண்டால் அவர்கள் வெற்றியடைவார்கள் என்றக் கருத்து தான் இந்த ஹதீஸில் சொல்லப்படுகிறதே தவிர மார்க்கம் வ-யுறுத்திய எந்த ஒரு நல்ல செயலையும் இந்த ஹதீஸ் சிறப்பித்துக் கூறவில்லை.

அடிப்படையற்ற விளக்கம்

இந்தச் செய்தியை சரிகாணுவதற்காக சிலர் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடி தாயாக இருந்தார்கள் என்றும் தாய் அல்லது தந்தை வழியில் பால்குடி அன்னையாக இருந்தார்கள் என்றும் விளக்கம் தருகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் விதிவிலக்காக இந்நிகழ்வை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கம் தருகிறார்கள்.

நமது விளக்கம்
இவர்கள் கூறுவது போல் உண்மை நிலை இருந்தால் முதலில் இந்த விளக்கத்தை ஏற்று இதை சரிகாணுபவர்கள் நாமாகத் தான் இருப்போம். ஆனால் உம்மு ஹராம் நபி (ஸல்) அவர்களுக்கு சிற்றன்னையாக இருந்தார்கள் என்ற விளக்கத்தை யார் எப்படி கூறினார் என்று பார்த்தால் இந்த விளக்கம் அடிப்படையற்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இப்னு அப்தில் பர் என்பவர் இந்த விளக்கத்தைப் பின்வருமாறு கூறுகிறார். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பால் புகட்டியிருப்பார்கள். இதனால் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடி அன்னையானார்கள் என்று நான் யூகிக்கிறேன். .

நூல் : தம்ஹீத் பாகம் : 1 பக்கம் : 226


இந்த ஹதீஸை சரிகாணுவதற்காக யூகமாக சொல்லப்பட்ட விளக்கம் தான் இது என்பதை மேலுள்ள வாசகம் தெளிவாக கூறுகிறது.    எந்தச் சான்றும் இல்லாமல் யூகமாக இந்த விளக்கம் சொல்லப்பட்டதால் இதை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இமாம் இப்னு ஹஜர் அவர்களும் திம்யாதீ என்ற அறிஞரும் இப்னு அப்தில் பர் கூறுகின்ற இந்த விளக்கத்தை சுட்டிக்காட்டி மறுத்துள்ளார்கள்.

எனவே தான் இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸை மையமாக வைத்து ஒரு அன்னியப் பெண் விருந்தினருக்கு பணிவிடைகளை செய்யலாம் என்று சட்டம் கூறியுள்ளார். திம்யாதீ என்ற அறிஞரும் இப்னு அப்தில் பர் கூறிய இந்த விளக்கத்தைக் கடுமையாக எதிர்கிறார்.

ஏனென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு பால்புகட்டிய தாய்மார்கள் யார் யார் என்று வரலாற்று நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அன்சாரி குலத்தைச் சார்ந்தவர்கள். அன்சாரி குலத்தைச் சார்ந்த பெண்களில் அப்துல் முத்தலிபின் தாயாரான சல்மா என்பவரைத் தவிர வேறு யாரும் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடி அன்னையர் கிடையாது.

சல்மாவிற்கும் உம்மு ஹராமிற்கும் மத்தியிலாவது நெருங்கிய உறவு உண்டா என்றால் இல்லை. இருவரும் மிக மிக தொலைவில் பல பாட்டனார்களைக் கடந்து தூரத்து உறவினராக உள்ளார்கள். சல்மா அவர்களுடன் உம்மு ஹராம் பெற்றிருந்த தூரத்து உறவினால் நபி (ஸல்) அவர்களுக்கு உம்மு ஹராம் (ரலி) அவர்கள் திருமணம் முடிக்கத் தடையானவர்களாக ஆக மாட்டார்கள்.

உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இமாம் இப்னு ஹஜர் இமாம் தஹபீ இன்னும் பலர் பதிவு செய்திருக்கிறார்கள். இமாம் திர்மிதியும் (1569) வது ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு உம்மு ஹராமைப் பற்றி பேசுகிறார்.

இவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது இவர் உம்மு சுலைம் என்பாரின் சகோதரி உபாதா என்பாரின் மனைவி அனஸ் (ரலி) அவர்களின் சிற்றன்னை என்று தான் குறிப்பிடுகிறார்களே தவிர நபியவர்களின் பால்குடி தாய் என்று அவர்கள் சொல்லவே இல்லை.

உம்மு ஹராம் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடி தாயாக இருந்திருந்தால் அதைத் தான் முதலில் இவர்கள் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் எந்த வரலாற்றுப் புத்தகத்திலும் உம்மு ஹராம் நபி (ஸல்) அவர்களின் தாய் என்ற விளக்கம் கூறப்படவே இல்லை.

இந்த ஹதீஸை சரிகாணுவதற்கு எதிர்த் தரப்பினர்கள் கூறிய முரண்பட்ட விளக்கங்களைக் கவனித்தாலே அது ஆதாரமற்றது என்று எளிதில் உணர்ந்து கொள்ளலாம். உம்மு ஹராம் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடி தாய் என்று கூறுவதோடு இச்சட்டம் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரியது என்ற விளக்கத்தையும் இணைத்துக் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் பால்குடி அன்னையாக உம்மு ஹராம் இருக்கும் போது இச்சட்டம் அவர்களுக்கு மட்டும் உரியது என்று கூறுவது அர்த்தமற்றது. பால்குடி தாயாக இருந்தால் யார் வேண்டுமானாலும் தன் பால்குடி தாயிடம் சென்று வரலாம். இதில் நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் விதிவிலக்குத் தருவதற்கு எந்த அவசியமும் இல்லை.

இந்த ஹதீஸைச் சரிகாணுவதற்கு எதையெல்லாம் சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் ஆதராமில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அந்த விளக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த ஹதீஸை நிலைநாட்டப் பார்க்கிறார்களே தவிர ஆதாரத்தை வைத்து நிலைநாட்டுவதற்கு முயற்சிக்கவில்லை.

குர்ஆன் ஹதீஸில் தெளிவாகவோ அல்லது மறைமுகமாகவோ விதிவிலக்கு என்று சொல்லப்படாமல் ஒரு செய்தி சொல்லப்பட்டால் அது எல்லோருக்கும் உரியது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். விதிவிலக்கு என்று வாதிடுபவர்கள் தங்கள் வாதத்திற்குரிய ஆதாரத்தைக் காட்டாத வகையில் அவர்கள் விளக்கம் எடுபடாது.

இந்த அடிப்படையை ஏற்காவிட்டால் அவரவர் தன் இஷ்டத்திற்கு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக வரும் செய்திகளை அவர்களுக்கு மட்டும் உரியது என்று வாதிடுவார்கள். மொத்தத்தில் நபியவர்களின் வழிமுறை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு விடும்.

நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை என்று இவர்கள் கூறும் விளக்கத்தை மறுத்த அறிஞர்களும் இருக்கிறார்கள். காளீ இயாள் என்பவரும் திர்மிதிக்கு விரிவுரை எழுதிய அப்துர் ரஹ்மான் முபாரக்ஃபூரீ என்பரும் இந்த விளக்கத்தை மறுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்ற இவர்களின் வாதத்தை இந்த ஹதீஸில் பொருத்தினாலும் இதில் உள்ள சிக்கல்கள் நீங்காது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் பெண்களின் கையைக் கூட தொட்டதில்லை. பெண்கள் விசயத்தில் மிகவும் பேணுதலாக நடந்து கொண்டார்கள்.

அன்னியப் பெண்களிடம் பழகுவதற்கு நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் பைஅத் செய்ய வந்த பெண்களின் கைகளை நான் தொட மாட்டேன் என்று அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மாறாக கையைத் தொட்டு பைஅத் செய்திருப்பார்கள்.

ஒரு புறம் நபி (ஸல்) அவர்களிடம் இப்படிப்பட்ட உயர்ந்த குணங்கள் இருக்க இன்னொரு புறம் இதற்கு மாற்றமாக அன்னியப் பெண்களுடன் பழகும் வழக்கம் இருந்தது என்று கூறுவது முரண்பாடானது.

எதில் சலுகை தர வேண்டும் என்பதைக் கூட இந்த அறிஞர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஒரு அசிங்கமான காரியத்தைச் செய்வதில் நபி (ஸல்) அவர்களுக்கு சிறப்புச் சலுகை உண்டு என்று கூறினால் இவ்விளக்கம் மேலும் மேலும் நபியவர்களுக்கு இழிவை ஏற்படுத்துமே தவிர ஒரு போதும் இழிவைத் துடைக்காது.

எனவே நபி (ஸல்) அவர்களின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் இந்த ஹதீஸை அவர்களைக் கடுமையாக நேசிக்கும் எந்த ஒரு முஃமினும் நம்ப மாட்டான். நம்பக் கூடாது.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner