Thursday, January 8, 2015

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 14

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துப் பிழைகள்


நபி (ஸல்) அவர்கள் கணவில் கண்டதைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் ஆயிஷாவே எனக்கு அல்லாஹ் பதிலளித்ததை நீ பார்த்தாயா? என்று கேட்டதாக அஹ்மதில் 23211 வது செய்தியில் இடம்பெற்றுள்ளது. நபி (ஸல்) அவர்களுடைய கனவில் அவர்களுக்குக் காட்டப்பட்ட விஷயத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் பார்த்திருக்க முடியாது என்பது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமல்ல. நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படியிருக்க நீ பார்த்தாயா? என்று நபி (ஸல்) அவர்கள் எப்படி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்பார்கள்?.

மேற்கண்ட செய்திகளின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டாலும் அதில் கூறப்படும் கருத்துக்கள் குர்ஆனிற்கு எதிராக அமைந்துள்ளதாலும் அந்த அறிவிப்புக்களில் முரண்பாடு இருப்பதினாலும் இதை நாம் ஏற்கக் கூடாது.

இது போன்ற ஹதீஸ்களைத் தான் நாம் ஏற்கக் கூடாது என்று சொல்கிறோம். இவ்வாறு இல்லாத பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்களை ஏற்றுக் கொள்கிறோம். ஏற்றுக்கொள்ளும் படி வலியுறுத்தி வருகிறோம். குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸ் வேண்டாம் என்று கூறுவோருடன் விவாதம் புரிந்து ஹதீஸின் முக்கியத்துவத்தையும் அவர்களுக்குக் கூறி வருகிறோம்.

4. மூஸா (அலை) வானவரை தாக்கினார்களா?


உயிர் பறிக்கும் மலக்கு ஒருவர் மூஸா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்த போது மூஸா (அலை) அவர்கள் வானவர் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்து விட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய் இறைவா மரணிக்க விரும்பாத ஒரு அடியானிடம் நீ என்னை அனுப்பி விட்டாய் என்றார். பிறகு அல்லாஹ் அவரது கண்ணைச் சரிபடுத்திவிட்டு அவரை ஒரு மாட்டின் முதுகில் கையை வைக்கச் சொல்லி அவரது கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை வருடங்கள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும் என அனுப்பி வைத்தான். (அவ்வாறே அவர் மூஸா (அலை) அவர்களிடம் வந்து கூறிய போது) மூஸா (அலை) இறைவா அதற்குப் பிறகு? எனக் கேட்டதும் அல்லாஹ் பிறகு மரணம் தான் என்றான். உடனே மூஸா (அலை) அவர்கள் அப்படியானால் இப்பொழுதே (தயார்) எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும்) புனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறும் போது நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஷா (அலை) அவர்களது கப்ரைக் காட்டியிருப்பேன் எனக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (1339)


மூஸா (அலை) அவர்களிடம் மரணத்தின் வானவர் வந்து உங்களது இறைவனுக்கு பதில் தாருங்கள் என்று கூறினார். அப்போது மூஸா (அலை) அவர்கள் மரணத்து வானவரின் கண்ணில் அடித்து கண்னை பிதுங்கச் செய்து விட்டார். எனவே அந்த வானவர் அல்லாஹ்விடம் சென்று மரணத்தை விரும்பாத உனது அடியானிடம் என்னை நீ அனுப்பி விட்டாய். அவர் என் கண்னை பிதுங்கச் செய்து விட்டார் என்று கூறினார். அல்லாஹ் அவருக்குக் கண்ணைத் திரும்பக் கொடுத்து என்னுடைய அடியானிடம் சென்று நீ வாழ்வதையா விரும்புகிறாய்? நீ வாழ்வதை விரும்பினால் ஒரு மாட்டின் முதுகில் உனது கையை வை. உனது கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை வருடங்கள் நீர் உயிர் வாழலாம் என்று சொல்லுங்கள் எனக் கூறினான். (இதை வானவர் கூறிவிட்டவுடன்) மூஸா (அலை) இறைவா அதற்குப் பிறகு? எனக் கேட்டதும் பிறகு மரணம் தான் என்று அல்லாஹ் கூறினான். உடனே மூஸா (அலை) அவர்கள் அப்படியானால் இப்பொழுதே (தயார்) எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும்) புனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறும் போது நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஷா (அலை) அவர்களது கப்ரைக் காட்டியிருப்பேன் எனக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (4375)

மேலுள்ள ஹதீஸ்களைத் தெளிவாகப் படித்தால் தான் பின்னால் நாம் சொல்லப் போகின்ற கருத்துக்கள் புரியும். இந்த ஹதீஸ் பல குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுவதால் நபி (ஸல்) அவர்கள் இதைச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்கிறோம்.

1. மூஸா நபியின் உயிரைக் கைப்பற்றுவதற்குரிய நேரம் வந்த போதும் மூஸா (அலை) அவர்கள் ஒத்துக் கொள்ளாததால் அல்லாஹ் மூஸா நபிக்கு ஆயுளை நீட்டிக் கொடுத்தான் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் அல்லாஹ் ஏற்படுத்திய காலக்கெடு வந்துவிட்டால் அதில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் உடனே உயிர்கள் கைப்பற்றப்பட்டு விடும் என்று குர்ஆன் கூறுகிறது.

"அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

அல்குர்ஆன் (10 : 49)

அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் (63 : 11)


2. அல்லாஹ் ஒன்றை தீர்ப்பளித்து விட்டால் அதை ஏற்றுக் கொள்வது ஒரு முஃமினின் மீது கடமை. இறைவன் அளித்த தீர்பபை நிராகரித்ததோடு அத்தீர்ப்பைக் கொண்டு வந்த தூதரையும் தாக்குவது இறைத் தூதரின் பண்பாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல் இறை நிராகரிப்பில் தள்ளிவிடும்.

மூஸா (அலை) அவர்கள் இந்த தாக்குதலை நிகழத்திய பிறகு அல்லாஹ் தனது முடிவை மாற்றிக் கொண்டு அவகாசம் அளித்தான் என்று முற்றிலும் இறைத் தன்மைக்கு மாற்றமான கருத்தை இந்த ஹதீஸ் சொல்கிறது. இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் பொருந்தாத தன்மைகள் இருப்பதாக இந்த ஹதீஸ் சொல்வதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

3. மூஸா (அலை) அவர்கள் மரணத்தை விரும்பாதவராக இருந்தார் என வானவர் அல்லாஹ்விடம் கூறியுள்ளார். மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஆயுளை நீட்டித் தந்த போது அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்று மூஸா கேட்கிறார். இதற்குப் பிறகு மரணம் என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படியானால் இப்பவே எனது உயிரை எடுத்துக் கொள் என்று மூஸா கூறுகிறார்.

மரணமே இல்லாத வாழ்க்கையை எனக்குக் கொடுப்பதாக இருந்தால் கொடு. எப்படியும் நான் மரணித்தாக வேண்டும் என்று நினைத்தால் இந்த அவகாசம் எனக்கு வேண்டியதில்லை. இப்பவே உயிரை எடுத்துக்கொள் என்ற கருத்தில் மூஸா கூறியுள்ளார். இந்த வாக்கியங்கள் மூஸா (அலை) அவர்கள் கடுமையாக மரணத்தை வெறுத்தார்கள் என்று கூறுகிறது.

மரணிக்கவே கூடாது என்று பேராசைப்படுவது நிச்சயமாக இறைத் தூதரான மூஸா (அலை) அவர்களின் குணமாக இருக்க முடியாது. மாறாக யூதர்கள் இவ்வாறு விரும்பியதாகக் குர்ஆன் கூறுகிறது.

மற்ற மனிதர்களை விட, (குறிப்பாக) இணை கற்பித்தோரை விட வாழ்வதற்கு அதிகமாக ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர்! அவர்களில் ஒருவர் ஆயிரம் வருடங்கள் வாழ்நாளாக அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வாறு வாழ்நாள் அளிக்கப்படுவது வேதனையிலிருந்து அவரைத் தடுக்கக் கூடியதாக இல்லை. அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.

அல்குர்ஆன் (2 : 96)

அற்பமான இந்த உலக வாழ்க்கையை விட மறுமையின் வாழ்வே உண்ணதமானது என்று நன்கு உணர்ந்தவர்கள் நபிமார்கள். அல்லாஹ்விடத்தில் மாபெரும் சிறப்பைப் பெற்றிருந்த மூஸா நபிக்காக பல இன்பங்களை அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கும் போது இதை அனுபவிப்பதை விட்டுவிட்டு அற்பமான இந்த உலகத்தில் வாழ்வதை மூஸா (அலை) அவர்கள் தேர்வு செய்திருக்க மாட்டார்கள்.

4. அல்லாஹ்வின் தூதர்களை இழிவுபடுத்துகின்ற வேலைகளை ஃபிர்அவ்ன் அபூ ஜஹ்ல் ஷைபா உத்பா போன்ற கொடியவர்கள் தான் செய்தார்கள். அத்தூதர்களைப் பொருட்படுத்தாமல் அவர்கள் கொண்டு வந்த அல்லாஹ்வின் கட்டளைகளைத் தூக்கிவீசினார்கள். தூதர்களைக் கொடுமைப்படுத்தினார்கள்.

உறுதி மிக்க தூதர் என்று இறைவனால் சிலாகித்துச் சொல்லப்படும் மூஸா (அலை) அவர்களும் அல்லாஹ்வின் தூதுவரான வானவரை இழிபடுத்தி அவர் கொண்டு வந்த கட்டளையைத் தூக்கி வீசினார் என்று சொன்னால் ஃபிர்அவ்னிற்கும் மூஸா (அலை) அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆகிவிடும். பொறுமையின் சிகரமாய்த் திகழ்ந்த மூஸா (அலை) அவர்கள் ஒரு போதும் ஃபிர்அவ்ன் செய்த காரியத்தைச் செய்திருக்க மாட்டார்கள்.

5. உனது இறைவனுக்கு பதிலளி என்று கூறிய வானவரை மூஸா (அலை) அவர்கள் தாக்கியுள்ளார்கள். வஹீயைக் கொண்டு வந்த அப்பாவி மலக்கை நாசப்படுத்தும் செயலை மூஸா நபி செய்தார்கள் என்று இச்செய்தி கூறுகிது. அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டுவரும் வானவரை அடிப்பது அல்லாஹ்வை அவமதிக்கும் செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

வந்தவரிடத்தில் தான் வாழ விரும்புவதாக பக்குவமாக எடுத்துச் சொல்லியிருக்கலாம். எடுத்த எடுப்பிலே கண் பிதுங்குகின்ற அளவிற்கு மூஸா (அலை) அவர்கள் அடித்தார்கள் என்று மூஸா (அலை) அவர்களை வேட்டையாடும் மிருகத்தைப் போல் இச்சம்பவம் சித்தரிக்கிறது. அல்லாஹ்வின் தூதர்களான வானவர்களைப் பகைத்துக் கொள்பவர்கள் இறை நிராகரிப்பாளர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வுக்கும், வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.
அல்குர்ஆன் (2 : 98).


6. இறைவனிடத்தல் கடுமையான ஒப்பந்தத்தை எடுத்தவராகவும் நல்ல பண்புள்ளவராகவும் தான் மூஸா (அலை) அவர்கள் இருந்தார்கள். இக்கோரத் தன்மைக்கு முற்றிலும் அப்பாற்பட்டவராக தூயவராகத் திகழ்ந்தார்கள்.

இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் தேர்வு செய்யப் பட்டவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார். தூர் மலையின் வலப் பகுதியிலிருந்து அவரை அழைத்தோம். (நம்மிடம்) பேசுவதற்காக அவரை நெருக்கமாக்கினோம்.

அல்குர்ஆன் (19 : 51)

நபிமார்களிடம் குறிப்பாக உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸா ஆகியோரிடமும் அவர்களது உறுதி மொழியை நாம் எடுத்ததை நினைவூட்டுவீராக! உண்மையாளர்களை அவர்களது உண்மை பற்றி விசாரிப்பதற்காக அவர்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்தோம். (தன்னை) மறுப்போருக்கு அவன் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் (33 : 7)

நம்பிக்கை கொண்டோரே! மூஸாவுக்குத் தொந்தரவு கொடுத்தோர் போல் ஆகி விடாதீர்கள்! அவர்கள் கூறியதிலிருந்து அவரை அல்லாஹ் நீக்கினான். அல்லாஹ்விடம் அவர் தகுதியுடையவராக இருந்தார்.

அல்குர்ஆன் (34 : 69)
இஸ்ரவேலர்கள் மூஸா நபியின் மீது அவதூறு கூறி அவர்களைத் துன்புறுத்தியதைப் போல் நமது சகோதரர்கள் அறியாமல் இந்தச் சம்பவத்தைக் கூறி மூஸா (அலை) அவர்களைக் கேவலப்படுத்துகிறார்கள். இந்த நிகழ்வை நம்புவது மூஸா (அலை) அவர்களுக்கு நோவினையை ஏற்படுத்தியதாக அமையும்.

7. மலக்குமார்கள் அல்லாஹ் இட்ட கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றக் கூடியவர்கள். இதற்குத் தகுந்தவாறு வலிமையான படைப்பாக அவர்களை அல்லாஹ் படைத்திருக்கிறான். குறிப்பாக உயிரை வாங்க வரும் மலக்கு மிக வலிமையுள்ளவராக இருக்க வேண்டும். மலக்குமார்கள் இறைவன் இட்டக்கட்டளைகளை முழுமையாக செயல்படுத்துபவர்கள் என்றும் வலிமையானவர்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

ஆனால் இந்த ஹதீஸ் உயிரை வாங்குமாறு அல்லாஹ் இட்ட கட்டளையை மலக்கால் செய்ய முடியவில்லை. மூஸா நபியின் தாக்குதலால் கண் பிதுங்கும் அளவிற்கு பலவீனமானவராக மலக்கு இருந்தார் என்று கூறுகிறது.

அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப் பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் (6 : 61)

அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

அல்குர்ஆன் (21 : 27)

தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.

அல்குர்ஆன் (16 : 50)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.

அல்குர்ஆன் (66 : 6)

உயிரை வாங்கவரும் மலக்கு மனிதனின் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடியவராக இருந்தால் அவரால் எப்படி உயிர் வாங்கும் பனியைச் செய்யமுடியும்?. ஒரு அடியில் கண்ணை இழப்பதற்கு வானவர் பச்சைக் குழந்தையைப் போன்ற உடலமைப்புக் கொண்டவரா?

பாதிப்படைந்த கண்ணை மலக்கால் சரி செய்ய முடியவில்லை. கண்ணை இழந்த அவருக்கு அல்லாஹ் தான் திரும்பவும் கண்னைக் கொடுத்தான் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது..

மலக்குகள் உயிர் வாங்குவதற்கு வரும் போது மலக்குகளை மனிதர்கள் தாக்கி அவர்களின் உறுப்புக்களைச் சேதப்படுத்தினால் அவர்கள் அல்லாஹ்விடம் சென்று மீண்டும் உறுப்புக்களைப் பெற்றுவிட்டு திரும்ப உயிர் வாங்க வருவார்களா? மலக்கை விட மூஸா (அலை) அவர்கள் வலிமையான படைப்பா?

இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னால் வரை உயிர் வாங்கும் மலக்குமார்கள் மனிதனுடைய கண்களுக்குத் தெரியும் வகையில் வந்தார்களாம். மூஸா மலக்கை அடித்து கண்ணை எடுத்து விட்டதால் இதற்குப் பிறகு மறைமுகமாக வந்து உயிரை கைப்பற்றினார்களாம். இவ்வாறு அஹ்மதில் (10484) என்ற எண்ணில் இடம்பெற்ற செய்தி கூறுகிறது.

மனிதன் தான் தாக்குதல்களுக்குப் பயந்து ஒளிந்து மறைந்து வருவான். வலிமையான படைப்பாக விளங்கும் மலக்குமார்கள் இந்த விபத்திற்கு பயந்து தங்களது போக்கையே மாற்றுகிறார்கள் என்று கூறுவது அவர்களைப் பலவீனத்திலும் பலவீனமானவர்கள் என்று சித்தரிக்கிறது.

மலக்குமார்கள் உயிரைக் கைப்பற்றும் போது கண்ணிற்குத் தெரிகின்ற விதத்தில் வருவதில்லையே? அப்படியிருக்க மூஸா (அலை) அவர்களிடத்தில் கண்ணிற்குத் தெரியும் விதத்தில் வானவர் எப்படி வந்திருக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறது.

இந்தக் கேள்வி வரக் கூடாது என்பதற்காக மூஸா (அலை) அவர்கள் வானவரை அடிப்பதற்கு முன்பு வானவர்கள் கண்ணிற்குத் தெரிகின்ற வகையில் வந்தார்கள். மூஸா தாக்கிய பின்பு அவ்வாறு வராமல் மறைமுகமாக வர ஆரம்பித்து விட்டார்கள் என்ற விளக்கம் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மலக்குமார்களை முற்றிலும் மனிதர்களைப் போல் மனிதர்களை விட கீழ்நிலையில் சித்தரிக்கும் இச்சம்பவம் பொய்யிலும் பெரும் பொய் என்பதை அறிந்து கொள்ள பெரிய ஆய்வு ஒன்றும் வேண்டியதில்லை.


அதிகாரம் இறைவனுக்கே


நபிமார்கள் சிறிய சிறிய தவறுகளை செய்தால் கூட அதை அல்லாஹ் அவர்களுக்குச் சுட்டிக்காட்டாமல் இருந்ததில்லை. யூனுஸ் நபி இறைவனின் மீது கோபித்த போது அவர்களை அல்லாஹ் மீன் வயிற்றில் சிறை வைத்தான். நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உம்மு மக்தூம் (ரலி) அவர்களிடம் முகத்தை சுழித்துக் கொண்டதற்கு அவர்களைக் கண்டித்து குர்ஆனில் வசனத்தை இறக்கினான். தன்னுடைய அதிகாரத்தைக் கையில் எடுக்கும் சாயல் கூட இறைத் தூதர்களிடத்தில் இருக்கக் கூடாது என்றே அல்லாஹ் விரும்புகிறான்.

இதையெல்லாம் மிஞ்சுகின்ற வகையில் அல்லாஹ்விற்கு நெருக்கமான வானவரின் கண்ணை மூஸா (அலை) அவர்கள் பிடுங்கியிருக்கும் போது அல்லாஹ் அவர்களைத் தண்டிக்கவில்லை. கண்டிக்கவில்லை. மாறாக இன்னும் அதிக வருடம் வாழ்வதற்கான ஏற்பாடுகளை உருவாக்கிக் கொடுத்தான் என்று நம்பினால் இறைவன் தன்னுடைய அதிகாரத்தை மூஸா (அலை) அவர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டதாகவும் மூஸாவிற்குப் பயந்து தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் பொருள்படும்.

எந்தக் காலகட்டத்திலும் தன் அதிகாரத்தில் பிறர் தலையிடுவதை அல்லாஹ் அங்கீகரிக்கவே மாட்டான். இறைவனைத் தாழ்த்தி மூஸா (அலை) அவர்களை உயர்த்தும் இந்த ஹதீஸ் ஏகத்துவக் கொள்கைக்கு எதிரானது.

அவர்களின் விளக்கம்


இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண் அல்ல என்று வாதிடக் கூடியவர்கள் நாம் கூறிய முழுமையான விமர்சனங்களுக்கு பதில் சொல்லவில்லை. ஒன்றிரண்டு பொருந்தாத விளக்கத்தை மட்டும் இதற்குக் கூறுகிறார்கள்.

அவர்களின் விளக்கம்


மலக்குமார்கள் மனித வடிவத்திலும் நபிமார்களிடத்தில் வருவதுண்டு. இப்ராஹிம் (அலை) அவர்கள் மற்றும் லூத் (அலை) அவர்களிடத்தில் மலக்குமார்கள் மனித வடிவில் வந்ததால் அவ்விருவரால் வந்தவர் மலக்கு என்று அறிந்துகொள்ள முடியவில்லை. இது போன்று வந்தவர் வானவர் தான் என்று மூஸா நபிக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

நமது விளக்கம்

லூத் (அலை) மற்றும் இப்ராஹிம் (அலை) அவர்களிடம் மலக்குமார்கள் மனிதவடிவில் இறைத் தூதர்கள் கண்டுபிடிக்க முடியாதவாறு வந்தது உண்மை தான். இந்தத் தோற்றத்தில் வானவர்கள் வரும் போது இப்ராஹிம் மற்றும் லூத் (அலை) அவர்கள் ஒருவிதமான பயத்தை உணருகிறார்கள்.

பிரச்சனை ஏதும் வந்து விடக் கூடாது என்பதற்காக மனித வடிவில் வந்த வானவர்கள் தாங்கள் வானவர்கள் தான் என்று இறைத் தூதர்களுக்குத் தெளிவுபடுத்தி விடுகிறார்கள். அப்படி அவர்கள் தெளிவுபடுத்தினால் தான் வானவர்கள் வந்த வந்த நோக்கமும் நிறைவேறும்.

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். தாமதமின்றி பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைக் கொண்டு வந்தார். அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்ற இனமாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். "பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் (11 : 69)

நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களால் கவலைக்கும், மன நெருக்கடிக்கும் உள்ளானார். அதற்கவர்கள் "நீர் பயப்படாதீர்! கவலைப்படாதீர்! உம்மையும் உமது மனைவியைத் தவிர ஏனைய உமது குடும்பத்தினரையும், நாங்கள் காப்பாற்றுவோம். (அழிவோருடன்) அவள் தங்கி விடுவாள்'' என்றனர்.

அல்குர்ஆன் (29 : 33)

"லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக்கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?'' என்றனர்.

அல்குர்ஆன் (11 : 81)

அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் (மர்யம்) போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார். "நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார். "நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்'' என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் (19 : 17)


வானவர்கள் மனித வடிவில் வரும்போதெல்லாம் தங்களை அறிமுகப்படுத்தாமல் இருந்ததில்லை என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகிறது. நபிமார்கள் அச்சத்தை உணரும் போது அவர்களுக்கு ஏற்பட்ட அந்தச் சந்தேகத்தை வானவர்கள் அகற்றுகிறார்கள். இவ்வாறு செய்தால் தான் வானவர்கள் எந்த நோக்கத்திற்காக வந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறும்.

வந்தவர் வானவர் என்று மூஸா (அலை) அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அதை அந்த வானவர் ஏன் தெளிவுபடுத்தவில்லை?. வானவரைத் தாக்குவதற்கு மூஸா (அலை) அவர்கள் முற்படும் போதாவது வானவர் தெளிவுபடுத்தியிருக்கலாம். அல்லது தாக்கியதற்குப் பிறகாவது மூஸாவிற்கு தன்னை அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால் வானவர் அவ்வாறு செய்யவில்லை.

இறைத்தூதைக் கொண்டு வரும் வானவருக்கு இந்த ஒரு சாதாரண விஷயம் கூட தெரியாமல் போயிற்றா? எனவே மூஸா நபிக்கு வானவரைத் தெரியாது என்ற வாதத்தை வைத்தால் வானவர் தூதுச் செய்தியை முறையாகக் கொண்டு வரவில்லை என்று அர்த்தமாகும். இதுவும் குர்ஆனிற்கு முரணான விளக்கம் தான்.

வானவர்கள் தெளிவுபடுத்தாமலும் சில நேரங்களில் இறைத்தூதர்கள் வானவர்களை அறிந்து கொள்வார்கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களிடம் மனித வடிவில் வந்து இஸ்லாம் ஈமான் போன்ற இஸ்லாத்தின் கொள்கையை சொல்லித் தருகிறார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் தன்னை வானவர் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை. ஏனென்றால் அவர்கள் வானவர் தான் என்பதை நபி (ஸல்) அவர்கள் விளங்கிக் கொண்டார்கள். இந்த ஹதீஸ் முஸ்லிமில் (5) வது செய்தியாக இடம்பெற்றுள்ளது.

இந்த அடிப்படையில் மூஸா (அலை) அவர்களிடம் வந்த வானவர் தன்னை மூஸா தாக்கியதற்குப் பிறகும் ஏன் அறிமுகம் செய்யவில்லை என்றால் மூஸா தன்னை வானவர் என்று நன்கு தெரிந்து வைத்திருந்தார் என்பதினால் தான்.

அவர்களின் விளக்கம்

மூஸா (அலை) அவர்கள் இயற்கையில் அதிக கோபம் கொள்பவராக இருந்தார்கள். இதனால் தான் ஒருவரை கொலை கூட செய்து விட்டார்கள். இதை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. "இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி'' என்றார்.

 அல்குர்ஆன் (28 : 15)

எனவே தன்னிடம் வந்தவர் மலக்கு என்று தெரியாமல் கோபப்பட்டு மூஸா (அலை) அவர்கள் வானவரைத் தாக்கியிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

நமது விளக்கம்

மூஸா (அலை) அவர்கள் கோப சுபாவம் கொண்டவர்களாக இருந்ததால் வானவரைத் தாக்கிவிட்டார் என்று காரணம் சொல்கிறார்கள்.

மூஸா நபியவர்கள் இயற்கையாகவே அதிகமாக கோபப்படுபவர்களாக இருந்தார்கள் என்ற விளக்கம் அவர்கள் மரணத்தை வெறுத்தார்கள் என்ற கருத்தையோ வானவரை இழிவுபடுத்தினார் என்பதையோ நீக்காது. படுமோசமான செயலைச் செய்ததற்கான காரணமாகத் தான் அமையும். எனவே இந்தக் காரணம் ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள இழிச்செயல்களை வைப்பதற்கு உதவுமே தவிர அகற்றுவதற்கு உதவாது.

மூஸா (அலை) அவர்கள் எதனால் கோபப்பட்டார்கள் என்பதற்கு எதிர்த் தரப்பினர் எந்தக் காரணத்தையும் கூறவில்லை. எவ்வளவு பெரிய கோபக்காரராக இருந்தாலும் அவருக்குக் கோபத்தை ஒருவர் ஏற்படுத்தினால் தான் கோபம் வரும். கோபத்தை ஏற்படுத்துகின்ற எந்தக் காரியத்தை செய்து மூஸா நபியவர்களுக்கு வானவர் கோபத்தை வரவழைத்தார்? உனது இறைவனுக்கு பதலளிப்பீராக என்று கூறுவது கண்ணைப் பிளக்கின்ற அளவிற்கு கோபத்தை ஏற்படுத்துகின்ற வார்த்தையா?

பார்த்தவரையெல்லாம் அடிப்பதற்கு மூஸா நபி ஒன்றும் ரவுடி அல்ல. ஒருவர் நம்மிடம் வந்தால் கோபப்பட்டு கண் பிதுங்குகின்ற அளவிற்கு நாம் யாரையும் அடிக்க மாட்டோம். உலகத்தில் அக்கிரமக்காரன் கூட செய்யாத ஒரு பாவத்தை மூஸா (அலை) அவர்கள் செய்தார்கள் என்று கூற எப்படித் தான் இவர்களுக்கு மனது வந்தது என்று தெரியவில்லை.

ஹதீஸ்களின் முன் பின் வாசகங்களைக் கவனிக்கும் போது இந்த உலகத்தில் வாழ்வதற்காகத் தான் உயிரைக் கைப்பற்ற வந்த வானவரை மூஸா (அலை) அவர்கள் அடித்துத் துரத்தினார்கள் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி அறிந்து கொள்ளலாம்.

மூஸா தன்னைத் தாக்கியதற்கு என்ன காரணம் என்பதை அந்த வானவரே அல்லாஹ்விடம் சென்று தெளிவுபடுத்துகிறார். மரணத்தை விரும்பாத அடியானிடம் என்னை அனுப்பி விட்டாய் என்று அந்த வானவர் அல்லாஹ்விடம் சொல்கிறார். மூஸா நபியவர்கள் உயிரைக் கைப்பற்றவிடாமல் தடுப்பதற்காகத் தான் தன்னைத் தாக்கினார் என்று வானவர் முறையிடுகிறார்.

மூஸா (அலை) அவர்களுக்கு வானவர் என்று தெரியாமல் இருந்திருந்தால் அந்த வானவரிடம் அல்லாஹ் இப்படிச் சொல்லியிருப்பான். உன்னை ஏன் நீ மூஸாவிடம் அறிமுகப்படுத்தவில்லை. உன்னை தெரிந்து கொள்ளாத காரணத்தினால் தான் உன்னை அடித்து விட்டார். எனவே முதலில் நீ வானவர் என்று அவருக்கு கூறிவிட்டு உயிரை வாங்கி வா என்று கூறியிருப்பான்.

மாறாக இறைவனும் வானவருடைய பேச்சை அங்கீகரித்துக் கொண்டு நீண்ட நாட்கள் வாழ்வதற்குரிய வழியைச் சொல்லித் தருமாறு மலக்கிற்குக் கட்டளையிடுகிறான். மூஸா நபி என்ன நினைக்கிறார் என்பது கூட இறைவனுக்கு தெரியாமல் மூஸா நபி எதிர் பார்க்காததை மலக்கிடம் கொடுத்து இறைவன் அனுப்பினான் என்று சிந்தனையுள்ளவர்கள் கூற மாட்டார்கள்.

கண்ணைச் சரிசெய்து கொண்டு வானவர் மறுபடியும் மூஸா (அலை) அவர்களிடம் வந்த போது முதலில் அடித்ததைப் போல் இப்போதும் மூஸா (அலை) அவர்கள் ஏன் அடிக்கவில்லை? முதலில் வானவர் உயிரைக் கைப்பற்றுவதற்காக வந்ததால் மூஸா அடித்தார். இன்னும் பல வருடங்கள் வாழ்வதற்கான வழியை இரண்டாவது முறை மலக்கு கொண்டு வந்ததால் இரண்டாவது முறை வரும் போது அடிக்கவில்லை. இதைத் தான் அந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

மூஸா (அலை) அவர்கள் வானவர் என்று தெரியாமல் தான் அடித்தார்கள் என்று வைத்துக் கொண்டால் இரண்டாவது முறை வரும் போது முதலில் தான் செய்த பெரிய தவற்றுக்காக ஏன் அந்த மலக்கிடம் கூறி வருத்தம் தெரிவிக்கவில்லை? இவ்வளவு பெரிய மாபாதகச் செயல் மூஸா (அலை) அவர்களுக்கு குற்றமாகத் தெரியவில்லை என்று யாராலும் நம்ப முடியாது.

வாழ்வதை மூஸா நபியவர்கள் விரும்பாவிட்டால் அந்த வானவர் ஆயுள் நீட்டப்பட்ட செய்தியை மூஸா (அலை) அவர்களிடம் கூறும் போது இவ்வாறே மூஸா கூறியிருப்பார். நான் வாழ்வதற்கு விரும்புகிறேன் என்று உங்களிடம் நான் சொல்லவே இல்லை. பிறகு ஏன் வாழ்வதை நேசிக்கிறாயா என்று கேள்வி கேட்கிறீர்கள். இன்னும் பல வருடங்கள் வாழ்வதற்கு ஏன் வாய்ப்பளிக்கிறீர்கள்? என்றே கேட்டிருப்பார்கள்.

மரணத்தை வெறுத்ததாலும் வாழ்வதை நேசித்ததாலும் தான் இது போன்ற கேள்விகளை அவர்கள் எழுப்பவில்லை. இறைவன் கொடுத்த வருடங்கள் வாழ்ந்து முடிந்து விட்டால் அதற்குப் பிறகு நான் உயிருடன் இருப்பேனா? என்று அவர்கள் கேட்ட கேள்வி அவர்கள் கடுமையாக இந்த உலகத்தில் வாழ நேசித்தார்கள் என்பதையே காட்டுகிறது.

எனவே மரணத்தை வெறுத்து வாழ்வதை நேசித்த காரணத்தினால் தான் மூஸா (அலை) அவர்கள் வானவரைத் தாக்கினார்கள் என்ற கருத்தை இந்த ஹதீஸ் தருவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

(20 : 40) (26 : 14) (28 : 15) (28 : 16) (28 : 19) ஆகிய வசனங்களில் மூஸா நபி ஒருவரைத் தவறுதலாகக் கொலை செய்த நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நடக்கும் போது அவர்கள் இறைத் தூதராக இருக்கவில்லை மேலும் கொலை செய்யும் நோக்கத்தில் அவர்கள் தாக்கவும் இல்லை என்பது இவ்வசனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மூஸா (அலை) அவர்கள் இறைத்தூதராக ஆன பிறகு அவர்களின் நிலை வியத்தகு அளவில் அமைந்திருந்தது. நமது தூதர் நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களை சிலாகித்துச் சொல்லும் அளவிற்கு மூஸா நபியின் சமுதாயம் அவர்களுக்குக் கொடுத்த துன்பங்களை மூஸா (அலை) அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள். பொறுமைக் கடலாய்த் திகழ்ந்த மூஸா (அலை) அவர்கள் முரடராக இருந்தார் என்று கூறுபவர்கள் அநியாயமாக ஒரு நபியின் மீது இட்டுக்கட்டிய குற்றத்திற்கு ஆளாகுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் நிச்சயம் இது அல்லாஹ்வின் திருமுகம் (திருப்தி) நாடப்படாத பங்கீடாகும் என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். (அதைக் கேட்டு) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவிற்கென்றால் கோப(த்தின் அடையாள)த்தை நான் அவர்களுடைய முகத்தில் கண்டேன். பிறகு மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக. இதை விட மிக அதிகமாக அவர் புண்படுத்தப்பட்டார். இருப்பினும் அவர் (பொறுமையுடன்) சகித்துக் கொண்டார் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : புகாரி (3405)

எனவே தூதுத்துவத்திற்கு முன்னால் தவறுதலாக நடந்த ஒரு நிகழ்வை வைத்துக்கொண்டு மூஸா (அலை) அவர்களை முரடராகச் சித்தரிப்பது அழகல்ல. நபியாக இருக்கும் போது மூஸா (அலை) அவர்கள் பொறுமைக் கடலாகத் திகழ்ந்துள்ளார்கள் என்று இந்த ஹதீஸ் மூஸா நபியைப் புகழ்ந்து சொல்கிறது. ஆனால் வானவரை அடித்ததாகக் கூறும் செய்தி நபியாக இருக்கும் போது மூஸா முரடராக இருந்தார் என்று இகழ்ந்துரைக்கிறது.

ஹதீஸைப் பாதுகாப்பது தான் இவர்களது உண்மை நோக்கமாக இருந்தால் மூஸா நபி தெரிந்துகொண்டே தான் மலக்கை தாக்கினார். மரணத்தை அவர்கள் நேசிக்கவில்லை என்றே கூறுவார்கள். இவர்கள் ஹதீஸை நிலைநாட்டுவதாக எண்ணிக் கொண்டு மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெளிப்படையில் ஹதீஸைப் பாதுகாப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner