Saturday, April 14, 2012

அர்த்தமுள்ள இஸ்லாம் - தொடர் 4 - PJ

கடவுளின் பெயரால் அக்கிரமங்கள் நியாயப்படுத்தப்படுதல்


மேலோட்டமாகப் பார்த்தாலே அநியாயமாகவும், அக்கிரமமாகவும் தென்படுகின்ற பல காரியங்கள் மதத்தின் பெயரால் நியாயப்படுத்தப் படுகின்றன. மதங்கள் அர்த்தமற்றவை என்ற முடிவுக்கு வருவதற்கு இது போன்ற காரியங்களும் காரணங்களாக அமைந்துள்ளன.

கடவுளை வழிபாடு செய்யும் ஆலயங்களில் பாரபட்சம் காட்டப்படுகிறது. குறிப்பிட்ட இனத்தவர்கள் கடவுளுக்கு மிகவும் நெருக்கமாகச் சென்று வழிபாடு செய்யலாம். மற்றும் சிலர் தூரத்தில் நின்று தான் வழிபாடு நடத்த வேண்டும். இன்னும் சிலர் ஆலயத்திற்குள் நுழையவே கூடாது என்ற நடை முறையைச் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள். கடவுளின் பெயரால் இது நியாயப்படுத்தப் படுவதையும் பார்க்கிறார்கள்.

கட்டணம் செலுத்துவோருக்கு கடவுளை வழிபடுவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதையும், தர்ம தரிசனம் செய்பவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதையும் காண்கிறார்கள்.

முக்கியப் பிரமுகர்கள் வரும் போது பரிவட்டம் கட்டி தனி மரியாதையும், முதல் மரியாதையும் செய்யப்படுவதையும் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள்.

வழிபாட்டுத் தலங்களில் மட்டுமின்றி ஊரிலும், தெருவிலும் கூட சிலர் புழு பூச்சிகளை விட கேவலமாக நடத்தப்படுகின்றனர்.

தொட்டாலும், பட்டாலும் தீட்டு

சில வீதிகளில் நடமாடத் தடை

தேநீர்க் கடைகளில் தனித் தனிக் குவளைகள்

செருப்பணியத் தடை

பெண்கள் ஜாக்கெட் அணியத் தடை


என்றெல்லாம் மனிதனுக்கு மனிதன் செய்யும் அக்கிரமங்களையும், இதை மதத்தின் பெயராலேயே, கடவுளின் பெயராலேயே செய்வதையும் காண்கின்றனர்.

கடவுள் இப்படித் தான் மனிதர்களைப் படைத்திருக்கிறான். இதை ஏற்றுத் தான் ஆக வேண்டும்' என்று வேத நூல்கள் கூறுவதையும் காண்கின்றனர்.

இந்த அக்கிரமங்களை நியாயப்படுத்தி விட்டு மதங்கள் அர்த்தமுள்ளவை' என்று கூறுவதைச் சிந்தனையாளர்களால் ஏற்க முடியவில்லை.

ஆனால் இஸ்லாத்திற்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது. ஏனெனில் இஸ்லாம் இதைக் கடுமையாக எதிர்க்கின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (திருக்குர்ஆன் 49:13)

இறைவன் நேரடியாக ஒரு ஜோடி மனிதரைத் தான் படைத்தான். அவர்களிலிருந்து தான் இன்று உலகில் வாழும் அத்தனை மாந்தரும் பல்கிப் பெருகியிருக்கிறார்கள் என்று இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.

மனித குலம் முழுமையும் ஒரு தாய் தந்தையிலிருந்து தோன்றியவர்கள் என்றால் அவர்களுக்கிடையே பிறப்பின் அடிப்படையில் எந்த ஏற்றத் தாழ்வும் இருக்க முடியாது.

ஒரு தாய் தந்தைக்குப் பிறந்த இரண்டு மகன்களில் ஒருவனை பிறப்பால் உயர்ந்தவன்' என்றும் மற்றவனை பிறப்பால் தாழ்ந்தவன்' என்றும் எவரும் கூற மாட்டோம்.

இத்தகைய சகோதரத்துவம் தான் மனித குலத்துக்கு மத்தியில் உள்ளது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

'மனிதன் தனது முயற்சியால் அடையக் கூடிய கல்வி, பதவி, ஆற்றல், திறமை, நற்பண்புகள், நன்னடத்தை போன்றவற்றால் உயர்ந்தவனாக ஆகலாமே தவிர, குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்ததால் உயர்ந்தவனாக ஆக முடியாது' என்பதையும் மேற்கண்ட வசனத்திலிருந்து அறியலாம்.

இதை வெறும் வரட்டுத் தத்துவமாக மட்டும் இஸ்லாம் கூறவில்லை. 14 நூற்றாண்டுகளாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

மனிதர்கள் ஆதாம் ஏவாளிலிருந்து தோன்றினார்கள்' என்று கிறித்தவ மதமும் கூறுகிறது.

ஆனாலும் இஸ்லாம் இதை நடைமுறைப்படுத்தி வருகிறது. கிறித்தவம் நடைமுறைப்படுத்தவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

நாடார் கிறித்தவர், தலித் கிறித்தவர் என்றெல்லாம் அவர்களின் முந்தைய ஜாதியும், அதனால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத் தாழ்வும் கிறித்தவ மதத்தில் தொடர்வது போல இஸ்லாத்தில் தொடர்வதில்லை. இருவருக்கும் தனித் தனி தேவலாயங்கள் இருப்பது போல் முஸ்லிம்களிடையே இல்லை.

நாடார் முஸ்லிம், தலித் முஸ்லிம் என்பன போன்ற சொற்கள் கூட முஸ்லிம்களிடம் கிடையாது. எந்தச் சாதியைச் சேர்ந்தவன் இஸ்லாத்தை ஏற்றாலும் அவனிடம் இருந்த சாதி அந்த நிமிடமே நீங்கி விடும். அவன் முஸ்லிம் மட்டுமே.

முஸ்லிம்களில் சிலர் அறியாமையின் காரணமாக ஷியா, சன்னி என்பது போல் தங்களைப் பிரித்துக் காட்டினாலும் இஸ்லாம் இதை ஆதரிக்கவில்லை. மேலும் இந்தப் பிரிவுகளைச் சாதியுடன் ஒப்பிடக் கூடாது.

குர்ஆனையும் நபிவழியையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக இவ்வாறு பிரிந்துள்ளனர்.

ஷியா பிரிவைச் சேர்ந்த ஒருவர் சன்னி பிரிவில் சேர விரும்பினால் உடனே அதில் சேர முடியும். சன்னி பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஷியா பிரிவில் சேர முடியும்.

ஆனால் தலித் ஒருவர் விரும்பினால் ஐயராக முடியாது.

மேலும் ஷியாக்களின் பள்ளிவாசல்களில் சன்னிகள் போய்த் தொழலாம். சன்னிகளின் பள்ளிவாசல்களில் ஷியாக்கள் தொழலாம்.

மக்காவில் உள்ள கஃபா ஆலயத்தில் ஷியா பிரிவினர் உள்ளிட்ட அனைவரும் சென்று இறைவனை வழிபடுகின்றனர்.

மேலும் உலகில் உள்ள எந்தப் பள்ளிவாசலிலும் குலம், கோத்திரம், பதவி, பணம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த முன்னுரிமையும் தரப்படுவதில்லை. இதை யார் வேண்டுமானாலும் கண்கூடாகப் பார்த்து அறிந்து கொள்ளலாம்

யார் முதலில் வருகிறாரோ அவர் தான் முதல் வரிசையில் நிற்பார். கடைசியாக வந்தவர் கடைசியில் நிற்பார்

இதில் முஸ்லிம்கள் கடுகளவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்
 .
குடியரசுத் தலைவர்களாக இருந்த ஜாகிர் உசேன், பக்ருத்தீன் அலி அஹ்மத் ஆகியோர் தில்லி ஜும்ஆ பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் பங்கு கொண்டுள்ளனர். அவர்கள் தாமதமாக வந்ததால் இடமில்லாமல் வெட்ட வெளியில் தான் தொழுதனர்.

குடியரசுத் தலைவர் வந்து விட்டார்' என்று ஒரு முஸ்லிம் கூட அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முன் வரவில்லை. குடியரசுத் தலைவரும் 'என்னை முன் வரிசைக்கு அனுப்புங்கள்' என்று கேட்ட தும் இல்லை. கேட்டாலும் முஸ்லிம்கள் இதை ஏற்க மாட்டார்கள்

கடையநல்லூர் மஜித், சாதிக் பாட்சா, ரஹ்மான் கான், ராஜா முகம்மது, முகம்மது ஆசிப், அன்வர் ராஜா, உள்ளிட்ட எத்தனையோ அமைச்சர்கள் பல சந்தர்ப்பங்களில் பள்ளிவாசலுக்கு வந்ததுண்டு

காலியாக இருக்கும் இடத்தில் தான் அவர்கள் அமர்ந்தார்களே தவிர அவர்களுக்கு பராக்' சொல்லி முதல் வரிசையில் யாரும் அமர வைக்கவில்லை. அவர்களும் அவ்வாறு கேட்கவில்லை

எந்தப் பள்ளிவாசலிலும் எவருக்கும் பரிவட்டம் கட்டப்படுவதுமில்லை

எனவே கடவுளின் பெயரால் அக்கிரமத்தை நியாயப்படுத்தும் குற்றத்தை இஸ்லாம் செய்யவில்லை.

பள்ளிவாசலுக்கு வெளியிலும் தீண்டாமையை இஸ்லாம் அறவே ஒழித்துள்ளது. ஒரு தட்டில் பலரும் சேர்ந்து சாப்பிடும் அளவுக்கு சகோரத்துவத்தை இஸ்லாம் பேணுகிறது.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner