Tuesday, January 6, 2015

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 13 - பி.ஜே

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்ய முடியாது என்பதற்கு ஐந்து காரணங்களை நாம் சொல்லியுள்ளோம். மற்றவர்களுக்கும் சூனியம் செய்ய முடியாது என இதுவரை இரண்டு காரணங்களைச் சொல்லியுள்ளோம்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் சூனியத்தைப் பற்றி கூறுவதை ஆராய்ந்தால் சூனியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மக்களை நல்வழிப்படுத்த நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அந்த மக்கள் காலம் காலமாகக் கடைப்பிடித்து வந்த வழிபாடுகளையும், தவறான கடவுள் கொள்கைகளையும் மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து நபிமார்கள் பிரச்சாரம் செய்த போது அறிவீனர்களுக்கு அதை ஏற்க முடியவில்லை. மரணித்த பின் உயிர்ப்பிக்கப்படுதல், சொர்க்கம், நரகம் போன்ற செய்திகளை அவர்களால் நம்ப முடியவில்லை. எனவே நபிமார்கள் உளறுவதாக அவர்கள் கருதினார்கள். அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதால் ஏற்பட்ட மனநோயே இவ்வாறு உளறுவதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தனர்.

சூனியக் கட்சியினர் இதையும் தங்களுக்கான ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
நபிமார்கள் சூனியம் வைக்கப்பட்டவர்கள் என்று எதிரிகள் சொன்னதாக திருக்குர்ஆன் பல வசனங்களில் சொல்லிக் காட்டுகிறது. சூனியம் வைக்கப்பட்டவர் என்ற சொல்லில் இருந்தே சூனியத்தின் பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். சூனியம் வைக்கப்பட்டவர் என்றால் சூனியத்தால் பாதிக்கப்பட்டு  மனநோய்க்கு ஆளானவர் என்று தான் பொருள். சூனியம் வைக்கப்பட்டவர் என்ற சொல்லில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்று சூனியக் கட்சியினர் வாதிடுகின்றனர்.

உதாரணமாக சாலிஹ் நபியின் சமுதாயத்தினர் சாலிஹ் நபியைப் பார்த்து சூனியம் செய்யப்பட்டவர் என்று  சொன்னதாக கீழ்க்காணும் வசனம் கூறுகிறது.

"நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்'' என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 26:153

ஷுஐப் நபியையும் இவ்வாறே குறிப்பிட்டனர்.

 "நீர் சூனியம் செய்யப்பட்டவர் தான்'' என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 26:185

நூஹ் நபிக்கும் இதே பட்டத்தைக் கொடுத்தார்கள்.
அவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயம் பொய்யெனக் கருதியது. அவர்கள் நமது அடியாரைப் பொய்யரென்றனர். பைத்தியக்காரர் என்றனர். அவர் விரட்டப்பட்டார்.

திருக்குர்ஆன் 54:9

மூஸா நபியையும் சூனியம் வைக்கப்பட்டவர் என்று கூறினார்கள்.

மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பிய போது, அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். "இவர் சூனியக்காரரோ, பைத்தியக்காரரோ'' எனக் கூறினான்.

திருக்குர்ஆன் 51:38,39


இது போன்று எந்த நபி வந்தாலும் இஸ்லாத்தை மக்களுக்குச் சொல்லும் போது இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்றே சொன்னார்கள்.

சூனியம் என்ற வார்த்தைக்கு மனநோய் என்று மக்கள் நம்பியிருந்ததால் தானே நபிமார்கள் சூனியம் வைக்கப்பட்டவர்கள் என்று சொன்னார்கள் என்று வாதிடுகின்றனர்.

ஆனால் இது அறிவுடையோர் வைக்கக் கூடிய வாதம் கிடையாது.

சூனியத்திற்கு இந்த அர்த்தத்தை அல்லாஹ் சொல்லவில்லை. அறியாத மக்கள் சூனியத்திற்கு இவ்வாறு அர்த்தம் வைத்திருந்தனர் என்பதற்குத் தான் இது ஆதாரமாகுமே தவிர அல்லாஹ்விடம் இதுதான் சூனியத்தின் அர்த்தம் என்பதற்கு ஆதாரமாக ஆகாது என்பதை இவர்கள் அறிந்ததாகத் தெரியவில்லை.

இறைவனை மறுக்கக் கூடியவர்கள் சூனியத்திற்கு சக்தியிருப்பதாக நம்பினார்கள். அவர்களின் நினைப்பிற்குத் தகுந்தவாறு அவர்கள் பேசினார்கள் என்றுதான் இது போன்ற எல்லா வசனங்களிலும், அல்லாஹ் கூறியிருக்கின்றான்.

இதற்கு உதாரணமாக மறுமையில் அல்லாஹ் அனைவரையும் எழுப்பி விசாரிக்கும் போது ஓரிரு நாட்கள் தான் மண்ணறையில் இருந்ததாகக் கூறுவார்கள் என்பதை குறிப்பிடலாம்.


உங்களை அவன் அழைக்கும் நாளில் அவனைப் புகழ்ந்தவாறு பதிலளிப்பீர்கள்! குறைவான காலமே (பூமியில்) வசித்ததாக நினைப்பீர்கள்.

திருக்குர்ஆன் 17:52

"நீங்கள் பத்து நாட்கள் தவிர (உலகில்) வசிக்கவில்லை'' என்று தமக்கிடையே அவர்கள் இரகசியமாகப் பேசிக் கொள்வார்கள். "நீங்கள் ஒரு நாள் தவிர (உலகில்) வசிக்கவில்லை'' என்று அவர்களில் அறிவுமிக்கவர்கள் கூறும் போது அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம்.

திருக்குர்ஆன் 20:103,104

"ஆண்டுகளின் எண்ணிக்கையில் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தீர்கள்?'' என்று (இறைவன்) கேட்பான்.  "ஒரு நாள், அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் வாழ்ந்தோம். கணக்கிடுவோரிடம் விசாரிப்பாயாக!'' என்று அவர்கள் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 23:112,113

இதை ஆதாரமாகக் கொண்டு மனிதன் மரணித்து ஓரிரு நாட்களில் உயிர்க்கப்பட்டு விடுவான். இதோ குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது என்று யாரேனும் வாதிடுவார்களா? இது போன்ற வாதமாகத் தான் சூனியக் கட்சியினரின் இந்த வாதம் அமைந்துள்ளது.

நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று கூறியது அல்லாஹ் அல்ல. எதிரிகள் கூறியதை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

காபிர்கள் சூனியத்தைப் பற்றி அவர்களுக்கு இருந்த நம்பிக்கைப் பிரகாரம் பேசினார்கள். அவர்கள் பேசியது அல்லாஹ்வின் கருத்தல்ல.

காஃபிர்கள் தமது நம்பிக்கைப் பிரகாரம் பேசியதை அல்லாஹ் எடுத்துக் காட்டினால், இது காஃபிர்களின் நம்பிக்கை என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

கல்லுக்குச் சக்தியிருப்பதாக காபிர்கள் சொன்னதை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

"எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குக் கெடுதி செய்து விட்டார்கள்'' என்றே கூறுகிறோம் (என அவர்கள் கூறினர்). "நான் (இதற்கு) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்களும் சாட்சியாக இருங்கள்! அவனையன்றி நீங்கள் எதை இணை கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்; எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்!'' என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 11:54

கல்லுக்குச் சக்தி இருக்கின்றது என்று இதற்கு அர்த்தமாகுமா? காஃபிர்கள் கல்லுக்கு சக்தி இருக்கிறதென்று சொன்னார்கள் என்று தான் அர்த்தமாகும்.

நான் தான் உங்களுக்குப் பெரிய கடவுள் என்று ஃபிர்அவ்ன் சொன்னான். இதனை அல்லாஹ் குர்ஆனில் எடுத்துச் சொல்வதால் ஃபிர்அவ்னை அல்லாஹ்வே கடவுள் என்று சொல்லி விட்டான் என்று கூறுவது போல் இவர்களின் வாதம் அமைந்துள்ளது.

நபிமார்கள் சூனியம் செய்யப்பட்டார்கள் என்று காபிர்கள் சொன்னது மன நோயாளி என்ற பொருளில் தான். ஆனால் சூனியம் என்ற சொல்லை அல்லாஹ் பயன்படுத்தும் இடங்களில் அந்த பொருளில் பயன்படுத்தவில்லை. அதைப் பின்னர் நாம் விளக்குவோம்.

நபிமார்களின் போதனைகளைக் கேட்ட போது அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று சொன்னது போல் நபிமார்களை சூனியம் வைப்பவர்கள் என்றும் சொன்னார்கள். நபிமார்கள் கொண்டு வந்த அற்புதத்தை சூனியம் என்றும் சொன்னார்கள்.

வித்தை என்று சொல்ல முடியாத அளவில் அற்புதத்தைச் செய்து காட்டினாலும் அதனை மறுப்பதற்காக இது சூனியம் என்று சொன்னார்கள்.

இதனை திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் கூறுகின்றான்.

"மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் தொழுநோயாளியையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது "இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை'' என்று அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!'' என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 5:110

"இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது "இது தெளிவான சூனியம்'' எனக் கூறினர்.

திருக்குர்ஆன் 61:6

"உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.

திருக்குர்ஆன் 10:77

"மூஸாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை வெளியேற்ற எங்களிடம் வந்துள்ளீரா?'' என்று அவன் கேட்டான்.

திருக்குர்ஆன் 20:57

"தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்?'' (என்றும் கேட்டான்).

திருக்குர்ஆன் 26:35

"உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக!) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர்'' (என்று இறைவன் கூறினான்). நமது சான்றுகள் பார்க்கும் வகையில் அவர்களிடம் வந்த போது "இது தெளிவான சூனியம்'' என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 27:13

மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் தவிர வேறில்லை. இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.

திருக்குர்ஆன் 28:36

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. "இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?'' என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.

திருக்குர்ஆன் 21:3

நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்த போது "மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? "இரண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் சூனியங்களே'' என்று கூறுகின்றனர். "அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம்'' எனவும் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 28:48

"நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்'' என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 20:71

 "மக்களை எச்சரிப்பீராக'' என்றும், "தாம் செய்த நற்செயல் (அதற்கான கூலி) தம் இறைவனிடம் உண்டு என நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக'' என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? "இவர் தேர்ந்த சூனியக்காரர்'' என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 10:2

இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை.

திருக்குர்ஆன் 51:52

நபிமார்களுக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது எனக் கூறும் வசனங்களை ஆதாரமாகக் காட்டியது போல் நபிமார்களை சூனியக்காரர்கள் எனக் காஃபிர்கள் கூறியதையும் சூனியக் கட்சியினர் தமக்குரிய ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

நபிமார்கள் செய்த அற்புதங்களைப் பார்த்தவுடன் அதை சூனியம் என்று சொன்னார்கள் என்றால் அதிலிருந்து தெரிவது என்ன? நபிமார்கள் செய்தது போன்ற காரியங்களை சூனியத்தாலும் செய்ய முடியும் என்பதால் தான் இவ்வாறு கூறினார்கள்.

கைத்தடியைப் போட்டு மூஸா நபி பாம்பாக மாற்றினால் அது போல் சூனியக்காரனுக்கும் செய்ய முடியுமே என்று அவர்கள் பதில் சொன்னதில் இருந்து சூனியத்தின் மூலம் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்பது தெளிவாகிறது. சூனியத்தின் பொருளை மேற்கண்ட குர்ஆன் வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம் எனக் கூறுகின்றனர்.

இதுவும் முதலில் சொன்ன வாதம் போல் தான் உள்ளது. சூனியத்தால் எதுவும் சாதிக்கலாம் என்ற கருத்தில் தான் காபிர்கள் சொன்னார்கள் என்பதில் ஐயமில்லை.

ஆனால் காபிர்கள் தமது நம்பிக்கைக்கு ஏற்ப ஒரு வாசகத்தைப் பயன்படுத்தி இருந்தால் அது எப்படி மார்க்க ஆதாரமாகும் என்ற அடிப்படை விஷயத்தை அவர்கள் அறியவில்லை.

இன்றைக்கு சூனியத்தை நம்புகின்றவர்கள் சூனியத்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கின்றார்களே அது போல அன்றைக்கு சூனியத்தை நம்புகின்றவர்களும் நினைத்தார்கள்.
சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்பதற்கு இவை ஒருபோதும் ஆதாரமாக ஆக முடியாது. காபிர்கள் அப்படி நம்பி இருந்தார்கள் என்பதற்குத்தான் இது ஆதாரமாக அமையும்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner