Sunday, November 30, 2014

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 1

இந்த நூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது அப்பாஸ் அலி எழுதியது. தற்போது ஜமாஅத்திலிருந்து வெளிவந்தவுடன் இந்த நூலில் உள்ள கருத்துகளுக்கு முழுவதும் மாறுபடுவதாகவும், இனி இந்த நூலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.


குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டையும் ஒரு முஸ்லிம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இதற்கு மாற்றமாக செயல்படக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக பல வழிகளில் மக்களுக்கு நாம் கூறி வருகிறோம். இதுவே நமது உயிர் மூச்சாக இன்று வரை இருந்து வருகிறது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களிலும் நமது பிரச்சாரம் இதை மையமாகக் கொண்டே அமையும்.

குர்ஆன் மட்டும் போதும். ஹதீஸ் வேண்டாம் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் கிளம்பிய போது இந்த வழிகேட்டிலிருந்து அவர்களையும் அவர்களிடமிருந்து மக்களையும் காப்பாற்றுவதற்காக விவாதங்களை நடத்தினோம். இதன் விளைவாக ஹதீஸின் அவசியத்தை மக்கள் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள்.

ஆயினும் மிகச் சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் சொல்கிறோம்.

இதைப் புரிந்து கொள்ளாத சிலர், ஹதீஸை மறுப்பதற்கான வழியை நாம் திறந்து விடுவதாகவும் மனோ இச்சையின் அடிப்படையில் ஹதீஸை மறுப்பதாகவும் நமக்கு முன்பு இந்தக் கருத்தை யாரும் கூறியதில்லை என்றும் ஹதீஸை மறுப்பதற்கு இப்படியொரு விதி ஹதீஸ் கலையில் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

தாம் அறியாத விசயத்திற்கு மக்கள் எதிரிகளாக இருப்பார்கள் என்பதற்கிணங்க இவர்களுக்கு உண்மை தெரியாத காரணத்தினால் நாம் கூறுகின்ற இந்த உண்மையை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உண்மை நிலையை உணர்த்துவதோடு இவர்களது பிரச்சாரத்தால் குழம்பிய மக்களுக்கு தெளிவான வழியைக் காட்டுவதற்காகவும், குர்ஆனிற்கு மாற்றமான கருத்துக்களை நபியவர்கள் கூறியதாக பொது மக்கள் எண்ணி விடக் கூடாது என்பதற்காகவும் இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.

இதில் தவறுகள் ஏதும் இருந்தால் அதை எங்களுக்கு நீங்கள் சுட்டிக் காட்டலாம். இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்வோம். எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நேரான வழியைக் காட்டுவானாக.

நபி (ஸல்) அவர்களின் கூற்று குர்ஆனுடன் முரண்படாது


மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அல்குர்ஆன் (16 : 44)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 1 - பி.ஜே



பில்லி, சூனியம், ஏவல், மாயம், மந்திரம் என்று சொல்லப்படும் ஸிஹ்ர் பற்றி நாம் பார்க்க இருக்கின்றோம்.

சூனியத்தைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது.

அதன் மூலம் மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா?

அல்லது அது வெறும் ஏமாற்று வித்தையா?

இதில் கருத்து வேறுபாடு ஏற்படக் காரணம் என்ன?

அப்படி பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்று நம்பினால், அதை நாம் செய்யலாமா?

இது போன்ற பல சந்தேகங்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றன.

சிஹ்ர் எனும் எனும் சூனியத்தைப் பற்றி அறிவதற்கு முன்னால் சில அடிப்படையான செய்திகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இம்மார்க்கத்தை அல்லாஹ் இரண்டு வகையாக நமக்குத் தந்திருக்கின்றான்.

முதலாவது ஈமான் எனும் நம்பிக்கை. இரண்டாவது இஸ்லாம் எனும் செயல்பாடுகள்.

ஈஈமான் இவ்விரு சொற்களின் நேரடி பொருளில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஈமான் என்றால் நம்புதல் என்று பொருள். இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல் என்பது பொருள்.

அல்லாஹ்வைப் பற்றியும், வானவர்களைப் பற்றியும், வேதங்களைப் பற்றியும், தூதர்களைப் பற்றியும், இறுதி நாளைப் பற்றியும், விதியைப் பற்றியும் எப்படி நம்பவேண்டும் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்தார்களோ அவ்வாறு நம்புவது ஈமான் எனப்படும்.

இவ்வாறு நம்பிக்கை கொண்ட பின் நாம் அவசியம் செய்ய வேண்டிய செயல்பாடுகளைச் செய்வது இஸ்லாம் எனப்படும்.
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner